28 October, 2010

என் பெண்ணே




சர்ப்பத்தீண்டல் நீ என் பெண்ணே ஏறும் விஷம் நான்


தூறல் நிமித்தம் நீ என் பெண்ணே மழையுண்ணும் இல்லாப்பறவை நான்


கானல் அற்ற நீள்சாலை நீ என் பெண்ணே வாழும் அபத்தம் நான்


விரி கை மாரி நீ பெண்ணே தீ மிதிக்கும் பக்தன் நான்



சொல் துறந்த வன பட்சி நீ என் பெண்ணே சிறுகாற்று மென்தூசி நான்


வான் புகுந்த கருநீலம் நீ என் பெண்ணே ஒற்றைச் சுடர் பெற்ற திரிமெழுகு நான்


திசையற்ற மாகாளி நீ என் பெண்ணே கலி கொள்ளும் சிறு தெய்வம் நான்


வலியற்ற மென்தும்பை நீ என் பெண்ணே விழிபிழியும் ஒரு துளி நான்



நீ பெற்றது காதல் என்றாலும் என் பெண்ணே காதல் என்றில்லைஎன்றாலும் காதல்


காதல் வழி நான் பெற்றது என் பெண்ணே காதல் வளி காதல் வலி



பெரும் பாலை நீ என் பெண்ணே சிறுமணல் நான்


பெருங்காதல் நீ என் பெண்ணே சிறு காமம் நான்


பெருங்களிப்பு நீ என் பெண்ணே சிறு கேவல் நான்


பெரு நடனம் நீ என் பெண்ணே விரலசைவு நான்



பாரதி நீ என் பெண்ணே அவன் மீசை நான்


சாரதி நீ என் பெண்ணே அச்சாணி இல்லா சக்கரம் நான்


நீ ரதி நீ என் பெண்ணே அம்பெய்தும் பெருங்காமன் நான்


காதலி நீ என் பெண்ணே காதலன் ...



*********************************





துரோகப்பறவை

குளிர்ந்த விடியலின் தேநீர் போல
பருகுகிறேன் எல்லோருக்குமான
துரோகத்தை. பகலின் வெம்பிய
வெயில் கிளையில்
துரோகப் பறவையென அமர்ந்த
என்னை பார்க்காதீர்கள்
என் திசை குரோதத்தின்
முடிவிலி. கனவுகளின் வழி
நுழையும் ஒன்றுமற்ற கற்றைமுடிகொத்து
வாசம் நான். விலகிக்கொல்லுங்கள்
என்னை அல்லது ஊளை கேட்டு
பிரகாசிக்கும் நிலவுக்கிரணம்
ஒன்றால் உங்களை சிதைத்துக்கொள்ளுங்கள்

நினைவுபடுத்துங்கள் நான்
ரணத்தை மொய்க்கும் நிணம் தோய்ந்த
ஈ என்பதை. கணந்தோறும் என் நாவு
குருதி நக்குகிறது உங்கள் வாழ்வெனும்
கையால் விரட்டி அடியுங்கள் என்னை
கவனம் ரணத்தின் மேல் பட்டு
விடக்கூடாது உங்கள் வாழ்வு.

ஒரு தேநீர் வேளையுடன்முடிந்து
போகும் சிறு ஏப்பம் நான். தாபமெனும்
மருந்துருண்டை தின்று ஜீரணித்து
விடுங்கள் என்னை. கழிவாக்கி
என்னை கொட்டிநிரப்ப இப்பிரபஞ்சம்
போதாதெனும் போது நீங்கள்
ஒரு குழந்தைக்கு குப்பைதொட்டி ஒன்றை
பரிசளியுங்கள்

பின்
எனது முன்பற்கள் தெரிய சிரிப்பதை
பார்க்காது போய் விடுங்கள்
பறந்து பறந்து ....

24 October, 2010

17 October, 2010

வானவில்வண்ண மின்னல் 5

அறிமுகமில்லாத ஆண்<> ஆண் நீங்கள் சொல்வது போல "நான் இன்னார் உங்களுடம் பேச விரும்புகிறேன் "என்று பேச தொடங்க இங்கே வாய்ப்பிருக்கிறதா என்றால் தெரியவில்லை அல்லது சந்தேகமே .. ஆண் டு ஆண் பேசத் தொடங்கவே ஏதோ ஒரு காரணி தேவை படுகிறது, பேருந்து நிறுத்தத்தில் இப்படியகத்ன் தொடங்கலாம் . " இந்த பஸ் எத்தன மணிக்கு வரும்ண்ணே".. ரயில் பெட்டியுனுள் வேறு வழியின்றி போழுதுதை கழித்து தொலைப்பதற்காக "எங்கே போறீங்க ? எத்தனமணிக்கு ட்ரெயின் போய் சேரும் ? போன்ற மொக்கையான உரையடலகளிலேயே துவக்க வேண்டிய கட்டாயம். முற்றிய தேங்காயை பட்டென்று உடைப்பது போன்று நீங்கள் சொல்லும் "நான் இன்னார் பேச விரும்புகிறேன் ".. முடியாது .. ஒரு ஆணுக்கு ஆணே " குழம்பி விடவும் , நிராகரிக்கவும், பயந்து ஒதுங்கவும் வாய்ப்பிருக்கிறது.. ..
ஒன்னே ஒன்னு சொல்றே ண்ணா . இந்த முறை ஊருக்கு வந்துதுட்டு திரும்பும் போது ஏர்போர்ட்ல போடிங் முடிச்சுட்டு கேட் ஒபென்க்காக நின்னுட்டு இருந்த போது ஒரு நடிகை ..இப்போ பல படங்கள்ல ஹீரோக்கு அம்மாவா நடிக்கிறவங்க . கேட் ஓபன் ஆகி ப்ளைட்டுக்கு போறதுக்கு பஸ்ல ஏறி உகார்ந்த போது என் பக்கத்துல அவுங்க " சௌகரியமா மேம் , மலேசியால ஏதும் சூட்டிங் போறீங்களா ? அங்கேருந்து வந்த பதில் மேலும் கீழுமான தலையாட்டல் ஒன்று. பல் தெரியாமல் இடவலப்பக்கங்கள் உதடுகளை இழுத்தார் போன்று சிரிப்பு ஒன்று ( நாம அத சிரிப்புன்னு ஒத்துகிட்டுதான் ஆகணும்) -
தம்பி பாலமுருகனின் பின்னூட்டமிது. நன்றி. நான் தொடங்கிய விஷயத்தை நேரடியாக புரிந்து கொண்டு தனது கருத்தை சொல்லியிருக்கிறார். ஆணுக்கு ஆணே கஷ்டம் பின்ன எப்படி ஆணுக்கும் பொண்ணுக்கும்? இன்னும் தெளிவாய் ஜெகநாதன் எழுதியிருக்கிறார். அவருக்கும் நன்றி.

கொற்றவை: //மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான்.// - மனிதர் ??

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை,// - முரண்
Time is Precious Maki..தொடருங்கள், வாழ்த்துக்கள்.


மனிதர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். முடிந்த மட்டும் மனிதனை தவிர்க்க முயல்கிறேன். மேற்சொன்ன வரிகளில் உங்களுக்கு என்ன முரணாக தெரிகிறது என்பது எனக்கு புரியவில்லை. பொன்னான நேரத்தை காரணம் காட்டி வாழ்த்து சொல்லி விலகிவிட்டீர்கள். நன்றி.

வசு : குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் மகி. கலைக்கு வர்க்க பேதம் இல்லை என்ற உங்களின் கண்டுபிடிப்பு மெச்சத்தக்கது.ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை....என்ன மகி...இது உங்களுக்கே வெளிச்சம்.
குழப்பத்தில் இருப்பது தவறான நிலை அல்ல என்பது நாம் அறிந்ததுதான்.கலை என்கிற ஒரு நிகழ்வை பொதுமைபடுத்தி அந்த வாக்கியத்தை எழுதியிருக்கிறேன். வர்க்கங்கள் தங்களுக்கு உண்டான வெளியையும் உபகரணங்களையும் கொண்டு இயங்கும்போது கலை அடையும் வித்தியாசங்களை நான் குறிப்பிடவில்லை. //ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை// இது மார்க்சின் இறுதிதேவையை நான் புரிந்துகொண்ட விதம். ஒட்டுமொத்த சுதந்திர மற்றும் தேவைக்கேற்ற ஊதியம் என்கிற முடிவு நிலை நோக்கிய அறிவுப்பயணம் என்பதை நான் சுட்டுகிறேன்.

தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

இதை தயை கூர்ந்து விளக்கவும்.


தனிமனித மனம் சாத்தியமற்று போய்விட்டது என்பதும் கூட்டு அல்லது தொகுப்பு மனமே சமுதாய நிலை ஆகிவிட்டது என்பதும் மார்க்சிய சிந்தனை என்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டுள்ளேன். தனிமனித சாத்தியமற்ற சமூகத்தில் ஒரு தனிமனம் சமுதாய பொறுப்புணர்வை எங்கனம் உருவகிக்கும் என்பது எனது கேள்வி. புரிதல் தவறென்றால் விளக்கலாம்.

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, இதுதான் மகி பாஸிசம். //

இது பாசிசமாக இருக்க சாத்தியமில்லை. நான் சொல்வது எளிய விளக்கம். பசித்தவனுக்கு உடனடி தேவை உணவு. அவனுக்கு அந்த நேரத்தில் உணவு கிடைக்க சமூகத்துள் என்ன செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. அவன் கலை என்பதை நிகழ்த்திக்காட்டி உணவு தேட முடியுமென்றால் அதுதான் நகைமுரண்.

//எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம். // மகி...please.... //தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்! //
ஒரு கொலை,கொள்ளை, கற்பழிப்பு செய்து விட்டு கவிதை எழுதினால் போச்சு...வேறென்ன....நல்ல புரிதல். //


என்ன சொல்ல வருகிறாய் வசு, கொலை கொள்ளை என்பது பணத்துக்காகவே என்பது தவிர்த்து அனைத்து கொலைகளும் கொள்ளைகளும் இன்ன பிற குற்றங்களும் உளவியல் சிக்கல் கொண்டவை என்பதை அறியாதவனல்ல நீ. கலைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்னவென்பதை இதன் நீட்சியில் ஒரு விவாதமாக்க விரும்புகிறேன். கொலையும் தற்கொலையும் கலையின் அப்பட்ட முடிவாய் இருப்பதை பல சந்தர்பங்களின் நாம் கண்டுணர்ந்திருக்கிறோம்.கற்பழிப்பு என்பது உடல் மீதான ஆகக்கடுமையான வன்முறை மட்டுமே மாறாக இருக்கிற ஒன்றை அழிக்கும் செயல் அல்ல என்று தோன்றுகிறது. 'வன்புணர்ச்சி' என்பது சரியான சொல். அதற்கும் நமக்கு, 'சமுதாய உளவியலின்' பங்கு என்ன என்பதை பற்றி விவாதிக்க தேவை இருக்கிறது. உன் பார்வை என்ன சொல்.. சமுதாயத்தில் இன்றைக்கு தனிமனித மனம் சாத்தியமானால் அது எங்கனம் இருக்கும் தன்னை அது எவ்வாறு வெளிபடுத்திக்கொள்ளும்? இதை வசு மட்டுமே பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. படிப்பவர்களும் எழுதலாம்.
*************
தொடருங்கள்...

*********************

05 October, 2010

வானவில்வண்ண மின்னல் 4

கொற்றவை: // படைப்பு என்பதைப் பற்றி சில விவாதங்களை எழுப்பலாம் என்றிருக்கிறேன். எந்த உற்பத்தியும் / படைப்பும் மனிதர்களின் பயன்பாட்டுக்கு அவசியம் என்று கருதலாமா? அதுவல்லாத ஒன்று விரயமில்லையா? மேன்மைக் கலை, பொழுதுபோக்கு படைப்பு என்பதெல்லாம் யார், யாருக்காக தோற்றுவைத்தது? பணம் படைத்தவர்களுக்குத்தான் பொழுதுபோக்கு, மேன்மை ரசனை என்றவையெல்லாம் வள்ர்த்துக்கொள்ள சூழலும், பொருளாதாரமும் இருக்கிறது. பசியில் வாடுபவனுக்கு? பாட்டாளிக்கு? தொழிலாளிக்கு? சமூக புரட்சிகளுக்கு வித்திட்டு, நிலவும் சமச்சீரற்ற பொருளாதார சூழலை சரியாக சுட்டிக்காட்டியும், மாற்றுவழிகளை முன்னிறுத்தியும் சமுதாயப் பொறுப்புணர்வோடு சிந்தனையாளர்கள் பல்வித நெருக்கடிகளுக்கிடையே (உணவுக் கூட கிடைக்காமல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக கையாண்ட ஊடகம் படைப்பு/இலக்கியம்/எழுத்தென்பதாக கருதலாமா? அத்துறையை பொழுதுபோக்கிற்கும், networking ற்காகவும், அறிவைப் பறைசாற்றிக்கொள்ளவும், மொழி ஜாலங்களைக் காட்டிக் கவரவும் பயன்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்? வசீகர எழுத்தின்மூலம் கூட்டங்களை சேர்க்க நிறையப்பேர் எழுதுகிறார்கள்...அவைகளின் சமுதாயப் பயன் என்ன? கவிதை என்பதைக் கூட வெறும் மொழியியல் /அழகியல் tool ஆக கருதாமல், அதிலும் சமுதாயப் பிரச்சனைகளை எழுதியவர்களின் நோக்கம் / தேவை என்னவாக இருக்கும்? – what is the demand for creation?Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? எல்லாவற்றிலும் அறிவைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு இலைக்கியப் படைப்பு என்று நம்பி blog இல் Just like that எழுதப்படும் விஷயங்களை / கவிதைகளைப் படிப்பது நேர விரையம் ஆகாதா, அவர் ஏமாற்றத்திற்கு ’சும்மா எழுத்துக்கள்’ என்ன பதில் தரும்? //

மனிதப் பயன்பாட்டிற்கு உதவாத எதுவும் அழித்தொழிக்கப்படும் என்பதே வரலாறாக இருக்கிறது. எனவே படைப்பும் உற்பத்தியும் பயனில்லை என்றால் குப்பைக்கூடையில் கூட அதற்கு இடமில்லை. ஒன்றை நான் நம்புகிறேன். கலை என்பது படைப்பூக்கத்தின் விளைபொருள், அது படைப்பாளிக்கே உரியது. அதில் வர்க்கம் என்பது இல்லை என்பது என் நிலை. முதலாளி தொழிலாளி ஏழை பணக்காரன் பசியோடிருப்பவன் உணவை குப்பையில் போடுபவன் என்கிற மொத்த நிகழ்வுப்போக்குக்கும் கலைக்கும் இருக்கும் இடைவெளியை நான் படைப்பாற்றல் எனக்கொள்கிறேன். கலை மனிதனுக்கு ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை வழங்குவதாக படுகிறது. சமூகஅறிவியல் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளை தடங்கலின்றி கிடைக்க வழிவகை செய்யும் நோக்கோடு செயல்படுகிறது. எனவே கலை 'படைப்பு' பற்றியதாய் இருக்கிறது சமூகஅறிவியல் 'உற்பத்தி' பற்றியதாய் இருக்கிறது. இங்கு நான் 'மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான். இங்கு நீங்கள் குறிப்பிடும் சமுதாயப் பொறுப்புணர்வு என்றால் என்ன? தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம். சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, அதை செய்வது சமூகஅறிவியல். ஆனால் கலை என்பது எதிர்காலத்தேவை. படைப்பு வரலாறையும் 'இன்றை' யும் நாளைக்கு கடத்தும் ஒரு இருப்பு. எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம். // Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? // ஆம். இந்த வெளியில் ஒரு கலையைப் படைக்கமுடியாது என்பதே என் நிலை. ஆனால் இதில் சமூகஅறிவியல் பேசி விழிப்புணர்வுக்கு வழிகோலலாம். ஒருவர் சும்மா ஏதாவது எழுதட்டும். அதுதான் ஆரம்பம். அவர் வாழ்வில் ஒரு கணமேனும் அந்த விழிப்புணர்வுப் புள்ளி அவர் பார்வைக்கு கிடைத்துவிடும். அதுதான் எனது நம்பிக்கை. இதுகாறுமான அறிவுஜீவிகளுக்குமான நம்பிக்கை! // what is the demand for creation?// இது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான கேள்வி. அதன் விடையும் அவ்வாறானதே.

****************************

//ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை// - இந்தக்கூற்று, தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது... தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்? நாம் வாழ்வது கூட்டுச் சமுகம் 'everything will be imbibed' இங்கு சவால் என்னவென்றால் நாம் கற்றுக்கொண்டவையும், நடைமுறைப்படுத்துவனவும் எவ்வித அரசியல், பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து நமக்கு தரப்பட்டது என்று கண்டுணர்வது. அப்பொழுது நாம் நமக்கான பார்வை என்பதை வகுத்துக்கொள்ள முடியும் என்று நிணைக்கிறேன். "We are all Social Animals". ஒரு பிரச்சனையில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் ஏன் தனிமனிதத் தேவை என்பதை விட சமூகப் பார்வையை கணக்கிலெடுக்கிறது? இன்று ஒரு தனி மனிதன் செய்யும் செயல், நாளை ஒரு குழு செய்யும், பின்பு பெருங்கூட்டம் அதைத் தொடரும்...அது வழக்கமாக மாறி..பின்பு கருத்தாக மாறி, விதியாக மாறி போய்க்கொண்டேயிருக்கும்...இல்லையா?//

//தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது// அதுதான் நோக்கமே.. தோன்றுகிற கேள்விகளிலிருந்து இணைக்கலாம் என்பது என் எண்ணம். முயலலாம். அந்த வாக்கியங்களை இணைக்க முடியுமாவென பாருங்கள்.

//தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்!

t***************************** தொடருங்கள்.

02 October, 2010

புள்ளி வனம்


ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

மொத்தமாய் என்னை உதிர்கிறது

ஒரு பன்னீர் மரத்தின்

பால்வெண்மை பூ வாசம்

போல. நெகிழ்வினை இழக்கும்

அலைகளில் இருந்து வெளியேறும்

காற்றென திசைகளை குருடாக்குகிறது

சங்கொலி தேங்கும் தீநடனமொத்த

உன் உடல் மொழி. வறள்நாக்கின்

நுனிவீழ்கிறதுன் ஒற்றைத்துளி அமிலம்.

பூக்கிறது சாக்காடு உடலிதழாய்

ஒவ்வொரு இதழிலும் மகரந்தம்

சேகரிக்கிறது உயிர்வாசம். துகள்

துகளாய் இளகுகிறது எல்லாம்

ஒரு இனிய தழுவலில் முற்றும்

தொலைக்கிற என் ஆண்மையை தேடி

என் வெண்புள்ளி ஆணவம் கதறி

அலைகிறது. இல்லாத வானத்தில் நீலம்

போலவே இல்லாத ஆண்மைக்கு

ஆணவம் எனக் கெக்களிக்கிறதுன் அன்பு.

நீலம் பாரிக்கிறது உயிர். உன் ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

நட்சத்திரங்களை விழுங்குமொரு

கருந்துளை போல.

***************************

01 October, 2010

வானவில்வண்ண மின்னல் 3

ஆண் பெண் நட்பின் தேவையும் நோக்கத்தையும் விளக்கியதும் அதன் தத்துவத்திற்கு செல்லலாம் என்கிறான் வசு. நல்லது. ஆனால் நான் அறிமுகமற்றவர்களின் புதிய தொடர்பில் உள்ள நடைமுறைச்சிக்கலை பற்றி தொடங்கியிருக்கிறேன். இந்த உரையாடல் ஆண் பெண் நட்பை பற்றி மாறும்போது அவ்வகையான தேவையையும் நோக்கத்தையும் விவாதமாக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு எளிய நடைமுறை சிக்கலில் இருந்து வலுவான உளவியல் பிரச்னைக்கு இட்டு செல்லும் எண்ணமே இதுபற்றி நான் எழுதும்போது நினைத்தது. அது அவ்வாறே ஆகுக. மேலும் இதில் தத்துவத்தை உடனடியாக உள்நுழைக்க தேவையில்லை வசு. சிக்கல் என்னவென்றால், ஒரு ஆணோ பெண்ணோ நேரடியாக ஒரு அறிமுகமில்லாத நபரிடம் நட்பு பாராட்ட எத்தனை தூரம் வாய்ப்பு இருக்கிறது?

// இவர் குறிப்பிட்டிருக்கும் வானவில் நிகழ்சியில் நட்பின் தேவையா தெரிகிறது. ஆணின் பாலியல் பார்வை தான் தெரிகிறது. பெண்களுக்கு தங்கள் அழகு / தோற்றம் சார்ந்து கிடைக்கும் அறிமுகம் / அங்கீகாரம் என்பது இருப்புநிலையை உயர்த்தும் ஓர் விஷயமாக ஆண்கள் தோற்றுவித்திருக்கிறார்கள். அதுவே பெண்களின் உடனடி ரெஸ்பாண்சிற்கு காரணம்... பார்க்கும் பெண்களிடமெல்லாம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள துடிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அதற்கு நட்பு ஆசை என்று கூற முடியாது //

கொற்றவை சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். அதில் அறிமுக விசயத்தில் பார்க்க இயலாது. ஒரு பெண் ஒரு ஆணிடம் நட்பு அல்லது ஆசை என்று ஏதாவது தோன்றினால் அது எவ்வழியில் குற்றமாகிவிடும்? ஆனால் ஆணின் மனது இங்கு நீங்கள் சொல்லியவாறே மோல்ட் செய்யப்பட்டிருகிறது. பெண்களின் உடனடி ரெஸ்பான்ஸ் என்று நீங்கள் எதை குறிப்பிட்டீர்களோ அதைத்தான் நான் பாதுகாப்பு உணர்வு என்று சொல்லுகிறேன். இதில் ஆணாதிக்க தொனி என்னிடமிருந்து வரவில்லை என்பதை பதிவு செய்கிறேன். ஆனால் நான் எழுதிய அந்த வாக்கியத்திற்கு அப்படியும் அர்த்தம் கொள்ளலாம் என்கிற போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. நல்லது. உங்களிடமும் அதே கேள்விதான். புதிய நபர்களை காரணமும் சூழலும் இல்லாமல் அறிமுகம் செய்து நட்பு பாராட்ட இங்கே வகை இருக்கிறதா? அப்புறம் வசுபாரதி என்றே மூளையில் பதிவு. மாற்ற வேண்டாமே. தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இல்லையே? நன்றி.
பத்மா.. நீங்கள் என்னை குழப்புகிறீர்கள். நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற போது ஒரு ஆண் உங்களிடம் வந்து உங்களிடம் பேசவேண்டும் போலிருக்கிறது .. காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாமா என்று கேட்டால் உங்கள் மனநிலை என்ன. எனது மனைவி அந்த மாதிரி எங்கிட்ட பேசுனா அடிவிழும் என்கிறார். இதுதான் பொதுபுத்திக்கு நல்ல உதாரணமாக நினைக்கிறேன். (அப்படி நிஜத்தில் அடிக்கமுடியாது என்பதும் வேறு விவாத பொருள்).
அப்படி என்றால் நான் எந்த யுகத்தில் இருக்கிறேன். அப்படி ஒன்றும் மேற்கத்திய நேர்மறையான கலாச்சாரம் என்கண்ணில் படவில்லையே. நீங்கள் கேள்விபட்டிருந்தால் சொல்லி உதவுங்கள்.

//பல விதமான exploitation நிலவுகிற இந்தக் கணினி யுகத்தில் அறிமுகமில்லாத ஆணிடம் பெண் கொள்ளவேண்டியது எச்சரிக்கை, நட்பல்ல.. இத்தொடர்புகள் நல்ல நட்பில் முடிய வாய்ப்புகள் குறைவு. // கொற்றவையின் கூற்றில் எனக்கும் சம்பந்தம் தான். எச்சரிக்கை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதுதான் எனது கேள்வி. இங்கே எச்சரிக்கைக்கும் பாதுகாப்பு உணர்வுக்கும் என்ன வித்தியாசம்?

அதுசரி நான் நீலத்தில் வண்ணமாக்கியிருந்த ஒரு கூற்றைப்பற்றி என்ன நினைக்கிறாய் வசுபாரதி?

.................................................................. தொடருங்கள் ...

பேதங்கள்

பறக்கும் ரயில் திட்டம். சென்னை வடபழனி நூறடி சாலையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டோவிற்கு நூறு வருட தெம்பிருந்தால் சுவாரஷ்யமான பதிவாய்இருக்கும். இந்த வருடம் செப்டம்பர் இருபத்தி எட்டாம் தேதி எனது மொபைல் போன்மூலம் எடுத்த படம். மாட்டுவண்டி இதன் தனிச்சிறப்பு.



************************************
பழிவாங்குதல் ஒரு பரிசுத்த உணர்வு - மகாபாரதம். இது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரத்த சரித்திரம் என்கிற படத்திற்கான பிடி வாக்கியம். சென்னை நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் போஷ்டர்களில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமா உலகம் ஒரு மட்டமான இசை வடிவம் எனக்கொண்டால் காமமும் குரோதமும் அதன் இரண்டே ஸ்வரங்கள். இந்த இரண்டு ஸ்வரங்களை கொண்டு இவர்கள் ஏற்படுத்தும் ராகங்கள் எல்லாம் - ஒன்று விடாமல் - ஸ்ருதி பேதங்கள். இதில் எந்திரன் ஒரு இரும்பு மகுடம். NDTV யில் கூட செய்தியாகச்சொல்கிரார்கள். வாழ்க நம் தமிழ் பேசும் மனிதர்கள்.
****************************
இரண்டாவது நாள் இன்று. எனக்கு சென்னைக் கண் நோய். கண்களில் மிளகாய் துகள் தூவியது போன்ற துயர். எனது புகைப்படத்தில் போட்டிருக்கும் கண்ணாடிக்கு இதுதான் காரணம். மற்றபடி நான் பந்தா எல்லாம் செய்வதில்லை! ஒரிஜினல் போட்டோ எனது புகைப்படத்தளத்தில் உள்ளது.
******************************