30 December, 2009

குடிப்பதில்லை..


*************
வாழ்க்கையில் வெற்றிபெற சரியான வழி 'இல்லை' என்கிற சொல்லில் இருக்கிறது. நிறைய நேரம் தூங்குகிறாயா. நிறைய செலவுசெய்கிறாயா. நிறைய நண்பர்கள் இருக்கிறார்களா. குடும்ப உறுப்பினர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா. சங்கீதம் பிடிக்குமா. இப்படி என்னளவில் இக்கேள்விகள் இருநூறைத்தொடுகின்றன. இவைகளுக்கு எல்லாம் பதில் இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றிபெறுவது சுலபம். இதைவிட வாழ்க்கையில் வெற்றிபெற மிகச்சிறந்த வழி இருக்கிறதா? இருக்கிறது. அது 'சரி' என்னும் சொல். ராத்திரிக்கு பூ வாங்கிக்கிட்டு வா. இன்னைக்கே விடுப்புல போகனுமா, அடுத்த மாசம் போலாமே. டாய்லெட் கிளீன் பண்ணனும். மேடம் கிட்ட போய் குடுத்திட்டு அவங்க கேக்குறத செஞ்சுகுடுத்துட்டு வாங்க. இதுக்கு நிறைய செலவாகுமே. இந்த வகையில் நாநூறைத்தொடுகின்றன எனதான வாக்கியங்கள். இவற்றிற்கெல்லாம் பதில் 'சரி' என்றிருந்தால் உங்கள் வெற்றியின் வேகம் இருமடங்கு!

இதில் சரி அல்லது இல்லை என்கிற சொல்லை தேர்ந்தெடுத்தவர்கள் தப்பித்தார்கள். நான் அப்படி இல்லை. அப்படியா, பாக்கலாம். ஏன் இப்படிசெஞ்சா என்ன? எனக்கு என்ன தலையெழுத்தா? அதப்பத்தி என்னக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. மறந்துட்டேன். நான் சொல்றத ஏன் யாரும் புருஞ்சுக்க மாடீங்கறீங்க. அப்படியா சொன்னேன். எனக்கு வேற வேலை இருக்கு. இப்படி எதுகெடுத்தாலும் பதில் சொன்னால் வாழ்க்கையில் நான் எப்படி வெற்றி பெறுவது! இந்த பழக்கத்தால் எனக்கு புதியவர்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதனால் நான் என் நண்பர்களிடம் படும் அவஸ்த்தை இருக்கிறதே. முடியல.

விடுங்க, என் கேள்வியே வேற, வாழ்க்கையில வெற்றி பெறுதல் என்றால் என்ன?

*******

ஹரிக்ரிஷ்ணன் அமைத்த கலை இலக்கிய விழாவுக்கு சென்றிருந்தேன். நல்லதங்காள் பாவைக்கூத்து என்கிற அற்புதம் பார்த்தேன். முழுதாக பார்க்கவியலாமல் நண்பர்களுடன் கூத்து வேறு. போன வருடம் கிடைத்த கள் கிடைக்கவில்லை.

******

வழக்கம் போல வருடப்பிறப்பு. இரண்டாயிரத்து பத்து. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். க சீ சிவக்குமாரின் வாழ்த்துப்பதிவு நன்றாக இருந்தது. இந்த வருடம் எனது தீர்மானம் குடிப்பதில்லை என்பது. தீர்மானம் வெற்றி பெற வாழ்த்துங்கள்.

*************

23 December, 2009

என்றொரு ஆதிப்பெண் 3

காமா..

நிதானம் இழக்கும் முன் ஒரு

புன்னகையை யாசிக்கும் தோள்நிமிர்

தகப்பன் நான். ஒருபோதும் அடங்காத குழழால்

காற்றை கலங்கடிக்கும் சிறுமியின்

குரூரம் நீ. கானகத்தீயில் வெந்துகருகும்

மூங்கில்களின் கவுச்சிவாசம் அது.

காமா..

என்பாதமறியா கானகம் நுழைகிறது

என்னுள் பிளவுண்ட கண்கள் வழியாக

நெருக்கிய காற்றை காணவில்லை என

கதறிவீழும் அருவியை உன்மத்தம்

ததும்ப குடித்து தீர்க்கிறேன். நீரின்

திசையில் நீளும் நாணலின் வேரை

பிடுங்க ஏலாத பேரச்சம் ஒன்றின்

இருள்மறைவில் காட்டுப் பூனையின்

கங்குவிழிகளாய் ஒளிர்கிறது அது..

காமா..

ஒற்றைப்புள்ளி நீ

அதன் இருள் நான்

காமா..

யார்கையிலும் கிட்டிவிடும் அந்தர அம்பு அது.

**************

மழையின் டிசம்பரில்..



பைத்தியக்கார மனநிலையிலிருந்தேன். வானம் தூவிக்கொண்டிருந்தது. புது ஊர். இதற்கு முன் சென்றதில்லை திருவாரூருக்கு. பேருந்து நிலையத்திற்கும் புகைவண்டி நிலையத்திற்கும் எத்தனைமுறை நடப்பது? மழையில் நனையும் மனநிலையை குளிர் போக்கிவிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை பகடி செய்தவிதமான திருவாரூர் பெரியகோவிலில் மனம் லயிக்கவில்லை. ஒழுங்காக யோசிக்க முடியவில்லை. மனம் விட்டேத்தியாக சோழநாட்டின் ஒருபகுதியில் திரியும் சம்சாரியெனகற்பனை செய்துகொண்டு கோவிலைவிட்டு வெளியேறி வரும்போது ஒருவர் ஏன் சாயரச்சை பாக்காமல் போறேள் என்றார். பதிலேதும் கூறாமல் சிரித்தவாறு வெளியேறினேன். அவருக்கு இரண்டு காரணங்களால் பதில் சொல்ல ஏலவில்லை. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை மற்றும் சாயரட்ச்சை என்றால் என்னவென்று தெரியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கு தொடங்கி இதே மனநிலை. திருவாரூர் பேருந்துநிலையம் முன்பாக வந்து நின்ற பொழுது விதி என்னைப்பார்த்து சிரித்தது. தைலம்மை திரையரங்கத்தில் வேட்டைக்காரன் போஸ்டர்!

நம்புங்கள் நண்பர்களே ஒரு பைத்தியக்கார மனநிலையை சரி செய்ய அந்தப்படம் பத்து நிமிட நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது!

***************

அடுத்தவூரும் நான் முதன்முதலில் சென்றதுதான்: நாகப்பட்டினம். இந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணி பதினாலு நிமிடம். நாகூர் பத்தொன்பது நிமிடம். காரைக்கால் முப்பது நிமிடம். திருநள்ளாறு நாற்பத்துமூன்று நிமிடம். (ஆம்னி வேனில்). சுவாரஸ்யம் நாகப்பட்டினத்துக்கும் நாகூருக்கும் நடுவிலிருக்கும் மாநில எல்லை சோதனைச்சாவடி அருகில் நடந்தேறியது! சோதனைச்சாவடி தாண்டியதும் நான்கு புதுச்சேரி அரசு மதுக்கடைகள். பெரிது பெரிதாக... அடியேன் கண்களுக்கு பட்டது சற்று தூரம் தள்ளி தனித்து கைவிடப்பட்ட நிலையில் இயங்கி கொண்டிருந்த கள்ளுக்கடை! நடந்த சுவாரஸ்யங்கள் நண்பர்கள் யூகிக்கக்கூடியதுதான்!

******

சற்றும் எதிர்பாராத சமயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. "சார் எம்பேரு ஆர். பி. ராஜநாயஹம்.. உங்க பிளாக்ல என்னப்பத்தி எழுதியிருக்கிங்க.. எப்படி சார் கண்டுபிடிச்சிங்க.." என்னால் அவர்தான் பேசுகிறார் என்று நம்பமுடியவில்லை. அவரது மிருதுவான குரலால் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல மனிதர். அவருடனான எனது நட்பு எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் அன்பு.

*******





21 December, 2009

19 December, 2009

18 December, 2009

என்றொரு ஆதிப்பெண் 2


காமா..

சில பலாப்பழங்களின்
நிறங்கள் ஒரு எலுமிச்சையின் நிறமாய்
ஒத்திருப்பதை பற்றியும் ஒரு
காக்கையின் நிறமில்லாமல்
இருப்பதைப்பற்றியும் யோசிக்க
ஏலாதவான் நான்.

ஒற்றை எலுமிச்சையுடன்
குன்றேரும் என்முன் கண்மறைவில்
வெளிச்ச சாகசம் புரியும் நிலவுப்பாதை
முழுவதும் காற்று சொரியும் வாசனை நீ.

இம்முறை பத்மவியூகத்தில் எனக்கு
அளிக்கப்பட்டிருப்பது அரசிவேட்டை
எப்பொழுதும்போலவே வெளியேறதெரியாதவன்
நானொருவனே. வனப்பூக்களின் வாசனையில்
துளிர்க்கும் அரசியை காணப்புகும்
உள்ளுணர்வு அது.

காமா..

பின்னிரவின் களைப்பில்
பாறையிடுக்குகளில் நான் சாய்கையில்
வூதாக்கதிர்களின் துணை கொண்டு
என் கண் பிளக்கிறாள் அரசி

****************


16 December, 2009

இரண்டு புத்தகங்கள்

*********
இது ஐம்பதாவது பதிவு!
*********
மனங்கொத்தி பறவை
மூலைவீட்டுக் காம்பவுண்டின்
தொட்டத்துக்குள்ளிருந்து
வெட்டிப்போட்ட கொத்துச்
செடிகள் அழைக்கிறது
வியர்வை சொட்ட
நெடுந்தூரம் போய்விட்ட
அவன் பெயர் சொல்லி.
--------- அவனைப்போல ஒரு கவிதை - தொகுப்பில்
கீதாஞ்சலி பிரியதர்சினி .
சில அபாரமான மற்றும அ-பாரமான கவிதைகளை கொண்டிருக்கும் இப்புத்தகம் எனக்கு ஒரு இனிய வாசிப்பனுபவம்.
********
வாசகப்புலி வெளியேற விடாமல்தடுக்கும் மாய சர்க்கக்கூண்டுகள்:
ஆதியிலே சொல்லிருக்க அதிலிருந்து வெளியேருங்கதைகளில் புகுந்த மனிதமார்கள் பசியாற பெண்களையுண்டாக்கியதாலே கலவியின்பம் பெற்று கதைகள் பற்றி அறியவேண்டியதை மறந்து இல்லறம் கலந்ததினாலே சாமான்யனாகி குழந்தைகுட்டிகளை பெற்றுக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் விவசாயஞ்செய்து பிழைக்கத்தொடங்கியதாலே ஈரக்கதைகளெல்லாம் மழைக்குள் புகுகவெனவும் பாறைக்கதைகளெல்லாம் மலைக்குள் புகுகவெனவும் வசமான கதைகளெல்லாம் வானத்துள் புகுகவெனவும் மாயக் கதைகளெல்லாம் மருவி மண்ணுக்குள் புகுகவெனவும் யோகப்பெருந்தேவன் உலகுகாக்கும் உன்னதபுருசனின் சக்தியானவளாலே சாபம்பெற சக்திமனவாளன் தானுங்கெட்டு தனைச்சேர்ந்த மனிதமாரும் கெட கதைபற்றிஏதுமறியாமல் புழுத்துப்போனவர்கலானதாலே சம்சாரத்திலே உழன்று உயிர்கொழிக்கிறாரென்றும் மருண்டு புலம்பத்தொடங்கிய நாளிலே நாரதனாம் காலக்கண்ணன் கண்விழித்து உலகம்பூராவும் அழியும்படிக்கும் மனிதமாரின் புத்தி போச்சு.. கெட்ட பேய்களின் ஆட்டம் விஞ்சி போச்சு.. எல்லாத்தையும் ஒருவழி பண்னோனுமென கைலாயம் போய் கதற, பாத்தா சக்தி ... இதுனல்லதாப்படலைன்னு போயி புருசன்காரன்கிட்ட இந்தா நீ உடனே ஒருகாரியஞ்செய் சட்டுன்னு உன்சுக்கிலத்த காத்தாக்கி பூலோகத்துல துப்பிடு சொன்னதும் விஷயத்தை ஞானத்துலே அறிஞ்ச ஈசன் அவ சொன்ன மாதிரியே துப்ப வாயுக்கொளாறாலே மூனாஞ்ஜாமத்துக்கு மேலே முள்ளுகருவேலைக்குள்ள ஒதுங்குன பானா வெங்கடேசனுக்கு உச்சந்தலையில விழுக அவரும் தலையத்தொடச்சவாக்கில நமச்சிவாயான்னு ஒரு சொல்ல வெளியேத்த அந்த சொல்லு தாம்பேரு டிரிஷ்டாம்னு சொல்லிக்கிட்டு அவரோட வீட்டு விட்டத்துலே தொங்கிகிட்டு விடாம பேச தொடங்க வந்துச்சு வெங்கடேசனுக்கு தாண்டவரய்யன் கதை..
உலகமக்களே ஒன்றுகூடுங்கள் தாண்டவராயன் கதை படியுங்கள் . பெறுங்கள் இந்த ஜென்ம பலனை.
******

என்றொரு ஆதிப்பெண் - 1


காமா ....
மழைநீரின் ருசியறியா மணல்வனம்
நீ. பெருவெப்பத்தின் தகிப்பறியா நீரூற்று
நான். திசையறியா வெள்ளத்தின் உடைபொருள்
அது. ஒரு சங்கீதக்காரனின் வெயில்நாளின் மழையுடை
நீ. அடரிரவின் ஒளி உடைக்கும் தவளைச்சத்தம்
நான். திறந்தவுடன் கொட்டிவிடும் பெருமழை
அது. காய்ந்த நிலவில் மகரந்தம் தேடும் ஈக்களின் வாசம்
நீ. இரைக்கெனவூளையிடும் ஓநாயின் வேட்கை
நான். கொள்கலன் அற்று நிரம்பிவழியும் பேரமுதம்
அது.

காமா .....
சருகொலியின் பயப்பரப்பு நீ. சயனத்தில்
ககனத்தீ நான். அமைவிடத்தின் அடியாழம்
அது. ஸ்தூலத்தின் நெடுமருவி நீ. பொழிவிழந்த
காட்டெருதின் வகையறியா பெருங்கூவல்
நான். ஜாமத்தில் திரண்டிருக்கும் பொழிவெளுச்சம்
அது. தூமத்தின் கலி ஏற்றும் மாறன் நீ. மண்புழுதிக்காட்டில்
கலி கொள்ளும் தூறன் நான். விசும்பெல்லாம்
எழுந்தடங்கும் ஊழியோசை அது.

*******


13 December, 2009

விளம்பரம்

இருசக்கர வாகனங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வாசகம் சிலநேரங்களில் பல்வேறு அர்த்த தளத்தில் இயக்கம் கொள்ளும். இங்கு நான் தமிழக ஊடகங்களின் மூலம் நுகர்வுமக்களுக்காக ஒலி/ ஒளி பரப்பப்படும் விளம்பரங்களின் பின் இருக்கும் ஏமாற்று உத்தியை எவ்வாறு உள்வாங்கி கொள்கிறேன் என்கிறவிதமாய் ஒரு பதிவை முயற்சிக்கிறேன். எனக்கு தோன்றும் எண்ணங்களை சொல்வதால் என்னைப் பற்றிய கேவலமான ஒரு முடிவுக்கு நீங்கள் வரக்கூடும். மீறி பதிகிறேன் என்றால் இது எனக்கு மட்டுமே ஏற்பட்டதா அல்லது என்னைப்போலவே பலருமா என்று தெரிந்துகொள்ளவே.

அடிப்படையில் அனைத்து விளம்பரங்களும் பெண்களை கீழ்த்தரமாக உபயோகபடுத்துவதும், ஆழமாக பாலுணர்வுகளை நிரடிகொடுக்கும் தன்மையுமகவே உள்ளதென அறிகிறோம். மற்றொன்று விளம்பரங்களால் நாம் எமாற்றப்படுக்றோம்.(தெரிந்தே ஏமாறுகிறோம் அது நமது தவறுதான்..அவர்களை சொல்லி குற்றமில்லை என ஒரு பின்னூட்டம் எனக்கு கிடைத்தது.) அதுபோல அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை ஏன் பிரதானப்படுதுகிறார்கள் என்பதும் நமக்கு புரிந்துகொள்ள முடியும்.

முகபாவங்களில் புணர்வுச்சத்தின் தன்மைகளை கொண்டதாய்ப்படும் காண்பிக்கப்படும் விளம்பரங்களில் இருந்து தொடங்குவோம். நீங்கள் சென்னை நகரத்தில் சாலைகளின் நடுவே தொங்கவிடப்படும் பண்பலை வானொலிகளின் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள். காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஒரு Orgasm or Ejaculation பாவத்தை முகத்தில் காண்பிக்கும் படம் ஒவ்வொரு மின்சாரக்கம்பத்திலும் இருக்கும். வானொலி கேட்பதன் மூலமாக அவர்கள் நமக்கு பாலியல் உச்சத்தை அடையமுடியும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இது போல லிரில் சோப் விளம்பரம். சோப்பை முகர்ந்து பார்த்து சிலிர்ப்படையும் ஈரம் சொட்டும் பெண். எலுமிச்சை வாசம் ஆண்மையின் படிமம்.

ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த டென்னிஸ் போட்டிகளின் விளம்பரத்தை யாருக்கேனும் நினைவிருக்குமாவென தெரியவில்லை, ஒரு ஆணின் ஒற்றைக்குரல். பந்தை அடிக்கும் போது வெளியேற்றப்படும் சத்தமென நாம் அதை எடுத்துக்கொள்ளவேண்டுமாம். மட்டையால் பந்தை அடிக்கும் ஒலி மறைக்கப்பட்டிருக்கும் . அவ்வொலி எதனைக்குறிக்கிறது ? பாலுணர்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டும் விதமான விளம்பரங்களை வரிசைப்படுத்திப்பார்த்தால் அறுபது சதவிளம்பரங்கள் சுலபமாக தேறுகிறது. மற்ற விளம்பரங்களில் அவற்றின் சொல்திரன் எனக்கு புரியாமல் இருக்கலாம்.! ஒரு சேட் தனது உயிலை வாசிக்கிறார். வாரிசுகள் மூச்சைப்பிடித்துக்கொண்டு கேட்டு கொண்ருக்கிறார்கள். சேட் தன் சுயபுத்தியுடன் சொத்தை தன் அழகான வேலைக்காரி சாந்தாபாய்க்கு எழுதிவைப்பதாக சொல்கிறார். வாரிசுகள் மூர்ச்சை அடைய மூத்த வாரிசு டேபிளில் இருக்கும் சோடாவை எடுத்துக் குடிக்கிறார். சில நொடிகளில் நாணிகொண்டு ஓரமாய் நின்றிருக்கும் வேலைக்காரிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பஞ்ச் டயலாக்: எங்கள் சோடாவை குடித்தால் அனைத்தும் மிருதுவாக உள்ளிறங்கும். ! கொஞ்ச நாளாக கோப்ரா சோடாவின் இவ்விளம்பரத்தை காணமுடியவில்லை.

விளம்பரங்களில் நம்பகத்தன்மை என்கிற ஒருவிசயமே அபத்தம் என்று நம்புகிற ஒரு தலைமுறை தொடங்கியாயிற்று. சமூக நாணயம் அற்ற இவ்விளம்பர உலகில் பொருளாதார நாணயம் மட்டும் சிலர் பைகளில் குவிகிறது. விளம்பரம் செய்ய விளம்பர உற்பத்தியாளர்களின் கற்பனை உச்சம் என்னைப் போன்றோரினை பெரும் அச்சத்திற்குள் தள்ளுகிறது. யாரைப்பற்றியும் அக்கரைப் படாமல் இருபது வினாடிக்குள் வீடுமனிதர்களை உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்க செய்வதிலும் கண்கலங்கவைப்பதிலும் நூறு சதம் வெற்றி காண்கிறார்கள். அமெரிக்காவுக்கு செல்ல ஸ்காலர்ஷிப் கிடைத்தும் மீதி பணத்திற்கான எண்ணக்கவலையுடன் வரும் மகளை தேற்றும் அப்பாஅழுதுகொண்டே புகுவீடு செல்லும் மகளை காதி விரல்கள் நுழைத்து விளையாட்டு காட்டும் அப்பா.. எத்தனைவகையான நெகிழ்வுக்காட்சிகள்! வார்த்தைகளின் அர்த்தங்களை படிமப்படுத்த எத்தனைவிதமான காட்சியமைப்புகள்! உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு குழந்தையை வளர்க்க பெற்றோருக்கு ஏற்படும் வளர்ப்புச்சுமையை ஒரே காட்சியில் எப்படி சொல்வது? ஈன்றெடுத்த பிள்ளையை தகப்பன் கையில் கொடுக்கிறாள் செவுளி.. குழந்தயை கையில் வாங்கியவுடன் குழந்தை வளர்ப்பு சுமையை தாங்கமாட்டாமல் மருத்துவ மனையின் தரையை பிளந்து மூட்டுவரை கீழிறங்கி விடுகிறார் தகப்பன்.. இந்த விளம்பரத்தை மறந்தவர்கள் இது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் என்பதை நினைவுகூர்க. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் வளர்ப்புசுமை இல்லாமல் போய்விடுமாம்.. கேட்பவன் கேனையனாக இருந்தால்.. என்கிற சொலவடை தமிழர்களுக்கு நன்கு தெரிந்ததுதான். அரசவிளம்பரங்களிளிருந்து பண்டிகைக்காலங்களில் கிராமங்களில் குழாய் கட்டி கத்தும் அனைத்து விளம்பரங்களிலும் கேப்பையில் வடிகிறது நெய்.

அருவருக்கத்தக்க விளம்பரங்களாக நான் என்னும் சிலவற்றை பட்டியலிட்டு முடிக்க எண்ணம். குளிர்பான விளம்பரங்கள், காப்பசினோ விளம்பரம், AXE and FASTTRACK விளம்பரங்கள். ஆக்சை தலையில் கவுத்திக்கொண்டு பாஸ்ட்ட்ராக்கை கையில் கட்டிகொண்டும் நடந்ததில் ஒரு பெண்ணும் என்னை சீண்டவில்லை. இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா? அரசியல், பொருளாதாரம், இலக்கியம், மற்றும் அனைத்து வாழ்வுவகைமைகளையும் ஏதாவது ஒரு ஆடிபிம்பத்தின் மூலமாகவே அவதானிக்க வேண்டுமென்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றையும் போலவே உலகளாவிய எமாற்றுதல்களையும் ஆடியில் பார்த்தே அவதானிக்கிறோம். ஆடியில் தெரியும் அனைத்தும் தெரிவதை விட மிக அருகில் உள்ளதை நாம் அறிவோம் நண்பர்களே. அல்லது அவைகள் நம்மைக் கடந்துபோய் ஒரு பிம்பங்களின் உலகத்தை ஏற்கனவே ஏற்படுத்தி நம்மை கபளீகரம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

********

11 December, 2009

paa


இந்த பயங்கரத்தை கற்பனை செய்த மூளை dynamite கண்டுபிடித்த மூளைக்கு நிகரானது இல்லையா?

தடம்



மெல்லிய காற்று
ஈரப்பதம் கூடிய வெயில்
நின்றுபோன மழையின் வாசம்
மணற்ப்புழுதியின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரார்வம்..

புயல்
பெரும்மழை
காட்டாற்றின் வெள்ளம்
உடைந்து மிதக்கும் கிளையின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது
உயிரலறல்..

நிலம்
மேகமற்ற வானம்
பெயர் தேவையில்லாத நகரம்
வெடித்து சிதறிய கட்டிடத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்ப்பதறல்..

கடல்
நீர்ப்பரப்பு
பெருவனத்தீ கண்டம்
பேரறத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்ப்பயம்..

பிரபஞ்சம் சொல்லவொன்னாதவொரு
நுண்ணிய கோள்
நீலம்
பெருங்காமத்தின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்க்காதல்...

பெண்
ஆண்
உயிரற்ரதன் பொருள்
வெளியற்றதின் உள்
கற்பிதங்களின்
மீததன் தடம்
தடம் விட்டுச்செல்ல விரும்புவது

உயிர்..

**********




உரையாடல் போட்டிக்காக மற்றொரு கவிதை இது.

சரிதான்...

ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் ஒரு Saturation Point - க்கு வந்துவிட்டார்கள். கமலும் ரஜினிக்கும் ஒரு காலகட்டத்தில் நடந்தது போல என்று சொல்லலாமா? இனி தமிழுலகில் அவர்கள் இணைகோடுகள்! இந்த ட்ராக்கில் ஹமீதின் ரயில் சந்தோஷக்கூவலுடல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சாத்தியப்பாடு இணையத்தினால் மட்டுமே வந்தது என நம்புகிறேன். வாழ்க இந்தியாவில் இல்லாத உலகத்தமிழ் வாசகர்கள்.
******
முந்தய பதிவில் ஒரு சிறுகதை (அப்படித்தான் நினைக்கிறேன்) எழுதியதின் விளைவாக ஒரு பயங்கரமான முடிவை எடுத்திருக்கிறேன். அது என்ன? நாவல் ஒன்றை தொடராக எழுதுவது. பார்க்கலாம். நாவலின் தலைப்பு "சொல்லுவதெல்லாம் பொய்". மாதத்திற்கு இரண்டு அத்தியாயமாவது எழுதிவிட உத்தேசம்.
*******
ஒபாமாவுடன் ச்சாயா சாபிடறதுக்காகவே இந்தியாவிலே பொறந்தேன்னு பெருமை பட்டவாக்கில தல ரஷ்யாவுக்கும் போயிட்டு வந்துட்டது. இங்க ஒருத்தர் பத்துநாளா உள்துறைய தூங்கவிடல. சரி போகட்டுமேன்னு பாகம் பிரிசுடலாம்னு ஸ்டேட்மென்ட் விட்டா.... நூத்தினாலு சட்டமன்ற உறுபினர்களும் நாலு பாராளுமன்ற உறுப்பினர்களும் கடுதாசி கொடுக்கிறாங்க.
எது நடக்கிறதோ அது நன்றாகவே.........................
********
தினத்தந்தியில் வரும் சினிமா விளம்பரங்களை பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது. ஏழெட்டு பேரு கூடி கூடி போஸ் கொடுத்து.. ஒரே கத்திரிக்காய ... சாமிகளா எத்தன கொளம்புகடா உலகத்துல இருக்கு? இதுகளுக்கு தமிழ் பேருக வேற. இந்த படங்களைஎல்லாம் பாத்து செத்து சுண்ணாபாகி போனவனோட கத ஒன்னு என்கிட்டே இருக்கு.. 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டேன்' னு படத்தோட டைட்டில் . யாருக்காச்சும் வேணுமா?
*******

08 December, 2009

என்னத்த சொல்ல...

கூடுமானவரை தலைமுடியை நேர்த்தியாக அமைத்தான். முடியமைப்பை பற்றி அக்கறை படாதவன் போல முகபாவனையை வைத்துக்கொண்டான். பேன்ட்டினுள் சட்டையை திணித்து பட்டனை மாட்டியதும் ஆடி பிம்பத்தில் தன் தொப்பையை கண்டான். எரிச்சலடைந்தான். வயிற்றை எக்கி உள்இழுத்து ஒரு முறை குதித்தான். மூக்குக்கண்ணாடியை அணிந்தான். பாக்கெட்டில் பர்ஸ் இருப்பதை உறுதி செய்தான். வெளியேறினான்.
***
அவளது அளவு முப்பத்துநான்கு. உடல் இளக்கம் தொடங்கும் வயது. மேல்வயிற்றில் இருந்த வெள்ளை தழும்பு சற்று பெரியதாகி
இருந்தது. உடல் இளைத்திருப்பதாக பட்டது. கொக்கிகளை மாட்டி சேலையை கட்டினாள்.
சீப்பில் நின்ற தலைமுடிகளைப் பார்த்து எரிச்சலடைந்தாள். கைப்பையில் வாகன சாவி இருப்பதை உறுதி செய்தவாறு வெளியேறியவள் கதவை பூட்டும் முன் மீண்டும் உள்நுழைந்து தனது உள்ளாடையை எடுத்து அணிந்து கொண்டாள். வெளியேறினாள்.
******
தனது காரை கிளப்பும் பொது அவன் வயிற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிச்சலடைந்து மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து கழிப்பறையில் பதினைந்து நிமிடம் அமர்ந்துவிட்டு பாரமிறங்கிய மனநிலையில் வெளியேறினான். காரை ஓட்டிக்கொண்டிருந்த பொது அவனுக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன: ஒன்று அவன் சட்டையை பேண்ட்டுக்குள் திணித்து டக்இன் செய்ய மறந்தது, மற்றொன்று வீட்டின் கழிப்பறையில் மின்சாரவிளக்கை அணைக்காமல் வந்தது. அனிச்சையாக அவன் 'ஷிட்' என்றான். 'ஷிட்' என்ற ஆங்கில வார்த்தையின் நேரடி தமிழர்த்தம் அவன் மூளைக்குள் நுழைந்தபொது மீண்டும் 'ஷிட்' என்றான். அந்த வார்த்தை அவனிடமிருந்து வெளியேறி காற்றில் மிதந்த போதுஅவனது வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி பெப் வாகனத்தை இடித்தான்.
******
ஸ்கூட்டி பெப்பை ஓட்டி வந்ததவள் 'சனியனே' என்றாள்.
******
காற்றில் மிதந்த 'ஷிட்' அவளிடமிருந்து வெளியேறிய 'சனியனை' பிடித்துக்கொண்டது. அன்றிலிருந்து பதினோராவது நாள் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே நகரின் முக்கிய உணவகத்தில் வழக்கம்போல என்ன சாப்பிடலாம் என்று கேட்டுவிட்டு தேநீர் மட்டும் அருந்தலாம் என முடிவுசெய்தார்கள். அவன் தன் பெயர் 'ச' என்றும் தன்னை எல்லோரும் 'சி' என்றழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டான். அவள் தன் பெயர் 'சை' என்றும் தன்னை எல்லோரும் 'சை' என்றுதான் அழைப்பார்கள் என்றும் அறிமுகம் செய்துகொண்டாள்.
******
மறுநாள் அவனிடம் பணம் பெற்றுக்கொண்ட டாடா குழுமம் அவர்களிருவருக்கும் பிரத்தியேகமான இரண்டு பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
*****
இவற்றையெல்லாம் அந்தரத்தில் ஜோடிபோட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த 'ஷிட்' டும் 'சனியன்'னும் இனி இவர்கள் என்னவாக ஆவார்கள் என்கிற சாத்தியப்பாடுகளை பட்டியலிட்டு பார்த்ததில்,
௧.
சை தன் கணவனை விட்டுவிட்டு வந்து ச வுடன் நிரந்தரமாக செட்டிலாகி விடுவது. வயதான ச தொண்டை புற்றில் இறந்ததும் சன்மார்கங்களில் அடைக்கலமாகி தூக்கத்திலேயே இறந்து போவது.
௨.
ச தன் குடும்பத்தை பிரிந்து சை இடம் தன் சொத்து முழுவதையும் இழந்து பிறகு கோவலன் மாதிரி மடத்தனமாக திருந்தி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவது. சை அவனிடமிருந்து பெற்ற சொத்துக்களை ஒரு கல்லூரி விடலைப்பையனுக்காக செலவழித்துக்கொண்டிருப்பது.
௩.
ஒரு மிதமான காதலால் இருவரும் இணைந்து, ஒரு அணுக்கியாய் வயதான ச வுக்கு ஹோமரின் இலியட் டை வாசித்துக்காண்பிப்பது.
௪.
முற்பகலில் எதிர்பாராத விதமாய் வீட்டுக்கு வந்த சை இன் கணவனிடம் உடம்பும் கையுமாய் பிடிபட்டு இடதுகாதுக்கு பக்கத்தில் ஆழமான வெட்டுக்காயம் வாங்கி சை அந்த இடத்திலேயே இறந்து போக ச ஓடிப்போய் மதிலேறி குதித்ததில் இரண்டு காலும் முறிந்து போவது.
௫.
ச வுக்கும் சையுக்கும் அழகான ஈ என்ற பெண்குழந்தை பிறந்து பிற்காலத்தில் தமிழக சட்டசபையில் போக்குவரத்துதுறை அமைச்சியாவது.
*****
சும்மா கற்பனை செய்வதை விட்டுவிட்டு நடப்பதை கவனி சனியனே என்றது ஷிட்.
*****
அப்புறம் என்ன நடந்தது என்றால், பனிக்காலம் குளிர்காலம் மற்றும் கோடைகாலம் ஆளுக்கொன்றாய் கடந்தபின்னான ஒரு இனிய வியாழனில் அதே உணவகத்தில் எல்லா சினிமா டிராமா கதை கற்பனை மற்றும் வாழ்க்கையில் நடப்பது போலவே வேறுவேறு இருக்கையில் வேறுவேறு நபர்களுக்கு முன்னால் அமர்திருந்த ச வும் சையும் எதேச்சையாக ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டார்கள். ச ஒரு ஷிட் டையும் சை ஒரு சனியனையும் அனிச்சையாக வெளியேற்றினார்கள்.
*****
ஏற்கனவே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஷிட்டும் சனியனும் காற்றில் மிதந்த புது ஜோடியை கண்டு இடிந்துபோன மறுநாள் இரண்டு நிகழ்வுகள்:
ஒன்று:
டாடா குழுமம் கட்டப்படாத பில் தொகைக்காக ச வுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இரண்டு:
ரிலையன்ஸ் குழுமம் ச விடம் பணத்தை பெற்றுக்கொண்டு ச வுக்கும் சை யுக்கும் பிரத்தியேகமான பத்திலக்க எண்களை ஆளுக்கொன்றாய் வழங்கியது.
********************************

07 December, 2009

அஞ்சலி

மரணவீடேகாதவன்
துர்மரணங்கள் துரத்த
களித்துத் திரிந்த எம் குருத்துக்கள்
சிறு கடுகெனத் தெறித்துக் கலைந்த காலமது
காய்ந்த மூங்கில் சடசடவென முறிய
வேய்ந்த சருகுதிர்ந்து காற்றலைந்து செல்ல
தெறித்த விழிகளில் பிதுங்கிய துர்க்கனவுகள் தொற்றாதிருக்க
பதுங்கிப் பிழைத்த பாதகன்
கடுகுப் பொதி சுமந்தலைகிறேன்.

***************

துரத்தும் நினைவுகளை என்ன செய்வது. மிலன் குந்தேராவின் தலைப்பு: Unbearable Lightness of Being . . நண்பணின் துர்மரணம் நேற்று. வாகனவிபத்து. எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். கவுண்டமணியின் காமெடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது. தண்ணி கிண்ணி/பொம்பள கிம்பள/பீடி சிகரெட்/ கொறஞ்சது வெத்தலபாக்கு.. எதுவும் இல்லை. அவன் செய்தது: முப்பது வயதுவரை ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது.. கர்த்தருக்கு விசுவாசமாய் இருந்தது.. உருப்படியான காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்தது..

முப்பத்தி ஒன்பது வயதில் அரசு பேருந்தில் அடிபட்டு இறந்து போனான்.

டிசெம்பர் ஆறாம் தேதி.

*******

வளர்மதியின் மேற்குறிப்பிட்ட கவிதை உள்ளுக்குள் கரைந்தழும் எனக்காக எழுதப்பட்டது போல உணர்கிறேன்.

05 December, 2009

மிமிக்கிரி



ஆசையெல்லாம் பெரியதொன்றும்
இல்லை. ஒரு கவிதை
எழுத முயற்சிப்பதை தவிர
அதற்கு முன்னால்
உலகத்தின் அத்துனை
நாழிதல்களையும்
கிழித்து ப்ருஷ்ட்டம் துடைக்க
வேண்டியிருக்கிறது. நாய்களைப்போல
காலைத்தூக்கி
வாகனங்களின் மீது
மூத்திரம் பெய்ய வேண்டியிருக்கிறது
ஒருகாதலிக்கும்
பல காதலிக்கும் இடையேயான
பயணத்தினால்
ஏற்படும் முதுகுவலிக்கு
சிகிச்சை செய்ய
வரும் கிழவியை
கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது
காலையில் எழுந்து
மலங்கழிக்க
முதல்நாள் இரவே
தூங்கவேண்டியிருக்கிறது
அலுமினியதட்டை ஏந்தி
தாயின் முதுகில் தொங்கும்
குழந்தையை
முகம் சுழித்து விரட்டவேண்டியிருக்கிறது
அரசியல் குறித்தான சொற்பொழியவும்
பெண்கவிகளின் பருண்மை
குறித்தான
கற்பனைகளை கைவிடவும்
சிரமப்படவேண்டியிருக்கிறது
ஒரு ஒற்றனைப்போல் மிமிக்கிரி
செய்யவேண்டியிருக்கிறது.
*****

பகிர்வு

http://www.blogger.com/www.chikkymukky.com
இரண்டு இதழ்கள் வெளியாகி உள்ளது.
நல்ல முயற்சி. உமாஷக்தி, லக்ஷ்மி சரவணகுமார் கதைகளை மட்டும் படித்தேன். நேரம் கிடைக்கிற போது மீதியை படிக்க வேண்டும்.
*****
sivakannivadi.blogspot.com
சிவகுமார் தனது பதிவில் உருப்படியான சில அரசியல் நையாண்டிகள்.
அருமையாய் உள்ளது.
******
makalneya.blogspot.com
எனது கவிதை தோழன் தனது கவிதைகளின் அடுத்தகட்டத்தை தொட்டிருக்கிறான். அவனுக்கு என் வாழ்த்து.
****

03 December, 2009

ஓரியண்ட்டலிசம் 2


என்னை பொறுத்தவரையில் ஒரியேன்ட்டலிசம் என்பதன் ஆணிவேர் காலனியாக்கத்திலிருந்து தொடங்குறது. ஒரு நிலப்பரப்பு அதன் மொத்த வளங்களுடன் சேர்த்து அதன் பூர்வ குடிமக்களையும் வேறொரு நிலப்பகுதியின் அரசியல் குழு பல்வேறு வழிமுறைகளின் மூலம் அதிகாரம் செலுத்துவது என்பதை காலனி படுத்துவது என்று நாம் அறிவோம். அதற்கான உலகின் மிகச்சிறந்த உதாரணம் இந்தியா. இவ்வாறாக பல்வேறு காலனி நாடுகள் அரசியல் ரீதியாக அடிமைப்பட்டு அதன் பூர்வ மக்களின் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்களின் மூலமாக சுய அரசியல் ஆட்சி அமைப்புகளை உருவாகிய பின்பான காலத்தினை நாம் பின் காலனீய சூழல் எனலாம். காலனியம் மற்றும் பின்னைய காலனியம் ஆகியவைகள் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் ஓரியென்டலிசம் அந்த நாணயத்தின் மறுபக்கம் எனக்கொள்ளலாம். இந்த நிகழ்வுப்போக்கில் பின்னைய காலனி நாடுகளின் மக்களும் அவர்களின் கலாசார அடையாளங்களும்தான் பலியாடுகள். உதாரணமாக அகதியாக்கம் என்பது இரு நிலைகளில் உணரலாம், ஒன்று சொந்த மண்ணை விட்டு வெளி நிலப்பரப்பில் அகதியாக்கப்படுவது, இரண்டு சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படுவது. ( இதில் மூன்றாம் வகை ஒன்று உண்டு - ஒரு மனிதன் தனக்குத்தானே அகதி ஆகிப்போவது - இதை அந்நியமாதல் என்கிறோம். அந்நியமாதல் மிகப்பெரிய தனி கதை). ஒரு நிலப்பரப்பும் அதன் மக்களும் சொத்துக்களும் அரசியல் ரீதியாக அகதிகள் ஆக்கப்படுவது என்பது காலனிய நிலைமை. ஒரு மனிதன் உலகின் ஆகச்சிறந்த மோசமான நிலையை அவன் அகதியாக்கப்ப்படும்போது வந்தடைகிறான். அந்த வகையான மோசமான சூழலை ஒரு நாடு காலனிச்சூழலில் வந்தடைகிறது. அத்தகைய சூழலில் அந்நாடு தாய்மைநாட்டின் (இந்தியாவுக்கு பிரிட்டன் தாய்மைநாடு - சுதந்திரத்துக்கு முன் ) கலாச்சாரம் மற்றும் அரசியல் விவகாரங்களை திணிக்கப்படபட்டும் தனதான சுய அரசியல் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்பட்டும் சிதைவுக்குள்ளாகிறது. இந்த இரண்டு வகையான செயல்பாடுகள் ஏக காலத்தில் நடைமுறைப்படுத்த படுகிறது. புதிதாக திருமணமான பதினைந்து வயதுப்பெண்ணின் புகுந்த வீட்டு சூழலில் ஏற்படும் மனசிதைவுகளுக்கு நிகராக அத்தகைய ஒரு நாட்டின் மொத்த இயங்கியலும் ஒரு குழப்பமான சூழலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும். இச்சூழலில் ஆராய்கிறேன் என்று பெருமைகொள்ளும் பேர்வழிகள் தாய்மை நாட்டிலிருந்து புறப்பட்டு காலனி நாடுகளுக்குள் நுழைந்து காலனி நாடுகளின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்றவைகளின் அமைப்பை அவதானித்து பதிவு செய்கிறார்கள். இந்த புள்ளிதான் ஓரியென்டலிசம் மற்றும் பின்னைய காலனிய பிரசச்சனைப்பாடுகளின் ஆரம்பம். இந்த கட்டுரைக்காக இவ்வகையான ஆராய்ச்சியாளர்களை குசும்பினிகள் என்று வைத்துக்கொள்ளலாம். இனி இக்குசும்பினிகள் எவ்வாறு தனது வேலைகளை செய்தார்கள் என்று சுருக்கமாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


*****


தொடரும்.

02 December, 2009

பெண்

ஆயிரக் கணக்கான கேலக்சிகளும் அந்த ஆயிரக் கணக்கான கேலக்சிகளை விழுங்கக் கூடிய கருந்துளைகளும் விடை காண முடியாத இயற்கையின் மாபெரும் அற்புதங்கள். பிரபஞ்சமும் பெண்களும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்...?!

ஸ்ரீராமின் கேள்விக்கு பதில் சொல்லுவது போல் என் எண்ணங்களை எழுதுகிறேன். இது முழுவதும் ஒரு ஆணின் மனநிலையில் எழுதப்படுகிறது என்று உணர்ந்தே இருக்கிறேன்.

மொத்த பிரபஞ்சமும் தராசின் ஒருதட்டில் வைத்தால் மறுதட்டில் ஒரு பெண்ணை தவிர வேறு எதை வைக்கமுடியும்! பிரபஞ்சம் என்று நம்மால் காணமுடிவது அனைத்தும் ஒரு பெண்ணிடத்திலும் பருண்மையாக காணமுடியும் என்றே தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் அறிய முடியா பெரும் புதிர்களையும் அதன் மர்மத்தன்மையையும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பெறலாம். இதை கொஞ்சம் நீட்டி எழுதினால் வைரமுத்துக்களின் சினிமா பாடல்கள் போல ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

எனவே நண்பர்களே பாவம் இந்த ஆண்களுக்கு பெண்களை விட்டால் யார்தான் இருக்கிறார்கள்...!

******

வைரமுத்து என்றவுடன் ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரி: " பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா.. " என்ன வரி பாஸ்..!

******

ஒரு பெண்ணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் ஒரு ஆண் - மாசோக்கிசம். ஒரு ஆணால் சித்ரவதை செய்யப்படுவதை விரும்பும் அல்லது விரும்பாத பெண் - சாடிசம். இரண்டு வார்த்தைகளும் இரண்டு ஆண் நாவலாசிரியர்களால் உருவான கருத்தாக்கங்கள். சாடிச நாவலை நான் படிக்கவில்லை. மாசொவின் காதல்தேவதை நாவல் - யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது - படித்திருக்கிறேன். 'சர்வ வல்லமை பொருந்திய தேவன் அவனை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தான்' என்கிற ஜூடித்தின் வரி எடுத்தாளுகையுடன் எழுதப்பட்ட நாவல், முடியும் போது வாசித்து பாருங்கள்.

******

சர்வ வல்லமை பொருந்திய தேவன் தொடர்ந்து ஆண்களை பெண்களிடம் ஒப்படைத்துகொண்டே இருக்கிறான்..இதில் தேவனுக்கோ ஆணுக்கோ பெண்ணுக்கோ சலிப்பு என்பதே இல்லை..!!!

******

ஆமென்.

*****

01 December, 2009

பயம்

நீங்கள் கீழ் கண்ட கேள்விகளை உங்கள் வாழ்க்கையில் எப்போது சந்தித்தீர்கள்:

1 பொருள் என்றால் என்ன?
2 ஒளிஆண்டு என்றால் என்ன?
3 கருந்துளை என்றால் என்ன?

நாம் எல்லோருக்கும் வாழ்வில் மல்லாக்க படுத்து வானத்தை பார்த்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன். எனக்கு பள்ளி நாட்களில் ஏறக்குறைய தினமும் இந்த அனுபவம் உண்டு. தூக்கமே வானத்துக்கு கீழ்தான். மழை நாட்களில் நான் நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் அடங்கி விடுவேன். இப்பொழுது மாதிரி என்னால் சிறுவயதில் குளிர் தாங்கமுடியாது. நான் பதினோராம் படிக்கும் போது இயற்பியலும் தியாகராஜன் ஆசிரியரும் என்னை கடந்தார்கள். அப்பொழுதுதான் மேற்படி கேள்விகளும் என்னை கடந்தன.

matter, light year, black hole... இம்மூன்று வார்த்தைகளை பற்றி நான் யோசித்தபோது

எனக்கு முதலில் பயம் வந்தது. மீண்டும் சில நாள் வானத்தை பார்த்து விட்டு யோசித்தபோது மரணபயம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மரணபயத்திற்கு அடிமையானேன். ஆனாலும் பிரபஞ்ச கூறுகளின் வசீகரம் என்னை பித்து நிலைக்கு அனுப்பியது. நான் அவற்றை பற்றி எதையும் படிக்கவில்லை. வானத்தை பார்ப்பேன் எதயாவது கற்பனை செய்வேன் அவ்வளவுதான். அதிகமாக கற்பனையில் விமானம் ஓட்டுவேன். அதிலிருக்கும் அழகான பெண்களுக்கு ஆபத்து வரும்.. அவர்களை காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபடுவேன். இரும்புக்கை மாயாவியும் மந்திரகம்பளமும் என் ஆதர்ஷன நாயகர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய குழந்தை பருவ கடவுள் கிருஷ்ணனாய் இருந்தார்! ஐந்துதலை நாகம் எனக்கு பெரும் பயம். தூக்க கனவுகளில் என்னை அதிகம் மிரட்டிய ஜந்து அரவங்கள். பின்னாளில் பாம்பு கனவில் வருவது பொதுவான பாலியல் பிரச்சனை என்று கனவு சாஸ்திரம் சொன்னதும் சற்று வெட்கப்பட்டு கொண்டேன்.

பொருள் என்றால் என்ன?

என்ன அற்புதமான கேள்வி! சற்று திரும்ப திரும்ப கேட்டால் இந்த கேள்வியின் தீவிர தன்மை வெளிப்படும். இயற்பியலின் ஆதாரக்கேள்வி இது. நீங்கள் இந்த கேள்வியை வெற்றுவெளியில் கேட்டுப்பாருங்கள் அதன் தீவிரம் உங்களை தாக்கினால் நீங்களும் பயப்படத்தொடங்கலாம். ஒருவேளை!

ஒளிஆண்டு என்றால் என்ன?

ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோமீட்டர்கள். ஒரு வினாடிக்கு என்பதை நாம் அறிவோம். இதே வேகத்தில் ஒரு வருடம் பயணம் செய்தால் கடக்கிற தூரம் ஒரு ஒளியாண்டு. இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தூரம் உடையவை.! நம்மிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பத்தாக கேள்வி.! யோசியுங்கள். என்னை போல நீங்களும் பயம் கொள்ளலாம். ஒருவேளை.!

கருந்துளை என்றால் என்ன?

ஈர்ப்புமையம்! பிரபஞ்சங்களை கூட விழுங்கி சேமிக்கும் ஒற்றை புள்ளி.! ஒன்றுமே இல்லைஎன்று கூட அதனுள் ஒன்றுமில்லை என்கிறார்கள்! இதன் தத்துவத்தில் நான் மிகவும் மயங்குகிறேன். ஆம். மயங்குகிறேன். ஒரு நிலையில் என் மரண பயத்தை வெல்ல கற்றுக்கொடுத்தது இந்த கருந்துளை! இப்பொழுது நான் ஏறக்குறைய மரணபயமற்று இருப்பதற்கு இந்த பிரபஞ்ச கருந்துளைகள் ஒரு முக்கிய காரணிகள். நான் இதனடிப்படையின் நீண்ட காலம் எழுதிவரும் ஒரு நாவலுக்கு கருந்துளை என்றே தலைப்பிட்டிருக்கிறேன். எப்பொழுது எழுதி முடிப்பேன் என்றுதான் தெரியவில்லை.

இந்த கேள்விகளால் நீங்கள் பயம் கொள்ள நேர்ந்தால், ஒருவேளை, உங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதன் மூலம் பயத்தை கடக்கலாம்.. அல்லது இக்கேள்விகள் உங்களுக்கு அறிவு விசாலத்தை ஏற்படுத்துமானால், ஒருவேளை, நீங்கள் அறிவுஜீவியாக மாறி உங்களை நீங்களே வருத்திக்கொள்ளலாம்!

இந்த பிரபஞ்சத்தையும் பெண்களையும் பற்றி நாளைக்கு எழுதுவதாக எண்ணம்.

*******