29 December, 2011

புணர்ச்சி நாற்பது - 2




அதரம் இற்றுப்போகும்

விடிகாலைப் பனியில்

விரியிதழ் குவித்தூதி உடைக்கிறது

வெறிகொண்ட தனிமையை..

ஊறிய வெம்மையில்

வெளியேறும் ஆவி

வெண்மையாக்குகிறது சூரியனை.

நிதானமாய் கவிகிற ஒளியை

புணர்ந்து மலர்த்துகிறது

புல்வெளி

மஞ்சள் வண்ண நெருஞ்சிகளை


நினைவெங்கும். பின்

வீழ்ந்து கிடக்கும் மேகத்தில்

கரையுமென் முத்தம்

கொத்திச் செல்லும்

நிதானமிழந்த பால் பறவை

ஒலியுதிர்த்து பகிர்கிறது

முடிந்த கலவியை

வெட்கமுற்று.



22 December, 2011

வௌவ்வால் கவிதைகள் - 1







கரும்பழம் சிறகு
விரிக்கிறது
பால்வெளிச்ச
நதிகலக்கும் விசும்புக்கடலில்
கவிதையின்  பிரதான சொல் அர்த்தமிழக்கிறது...

இறகற்ற சிறகின் ஏழ்நுனிகள்
கவ்வி பறக்கிறது துயர தேவதையின்
இரண்டு பால்சுரப்பிகளை
இடைவிடாத குருதிக் கசிவுடன்
கவிதையின் தாளம் உடைந்து தெறிக்கிறது..

விடியும் வரை தூக்கிப்பாய்ந்த
கணம் தாங்காமல் தளரும்
புள்ளி   உடைகிற வானம்
திரும்பிப் பார்க்கையில்
தகித்து பழுத்து மலர்கிறது வெண்சாம்பல் காலம்..

பொருளற்ற
கவிதையின்
சுயமரணம்
மூலம்
நிர்மூலம் தொடங்குகிறது உயிர் கதிர் கசிவில்.



.

18 December, 2011

கூடலூர்.. !


ஒரு அற்புதமான மனித உறவுமுறை, பண்பாட்டு கலாசார வளர்ச்சி மற்றும் பொருளாதார பரிமாற்றம் புன்னகைததும்பும் காதல் என பலவற்றையும் அரசியல் செயல்பாடுகளில் சிதிலமடைய செய்வதற்கான பொறியை கேரளா அ-வாதிகள் உருவாக்கி விட்டார்கள். அறியாமை கொண்ட ஆட்டு மந்தைகள் போல ஊர்கூடி போருக்கு அழைக்கிறார்கள் இரு மாநில மக்களும். ஆரம்பத்தில் தன்னெழுச்சியான போராட்டம் இப்பொழுது சுய அடையாளத்தை நிறுவும் குழு நிகழ்வாக மாறத் தொடங்கியிருக்கிறது. கட்சி பேனர் தவிர்த்து அனைத்து மத ஜாதி தொழிற் சங்கங்களின் போஸ்டர்களை அடித்து பிரஸ் வியாபாரம் கடுமையாய் கொழித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மைக்கு 'உன்மை' என்றும் இறைவனின் பெயரால் இடுக்கியை மீட்போம் என்றும் வந்த போஸ்டர்கள் இன்றைய சுவாரஷ்யம்.


இப்படி ஒரு கலவையான மனித அனுபவத்தை நான் எங்கும் அனுபவித்ததில்லை. அது எனக்கு கடந்த 6 நாட்களாக கூடலூரில் வாய்த்தது. எத்தனை விதமான மனிதர்கள் ! அவர்களது பேச்சுக்கள் ! அசந்துபோனேன்.

எழுபதுகளில் முல்லைப்பெரியார் அணையில் கொத்தனாராக பணி செய்த ராமர் போயன் மகன் பாண்டிய போயனை பார்த்து பேசியது ஒரு அனுபவம்.

கி. பி 640  களில் பாண்டியன் குலசேகர பெருமாளும் சேரன் புலியூத்தி மகாராஜாவும் இணைந்து கட்டியதாக சொல்லப்படும் கூடலழக பெருமாள் கோவிலில் பரம்பரை பட்டரால் செழுமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அக்கோவிலில் இருக்கும் பாண்டிய சேர இலச்சினை உருவமும் சேர பாண்டிய பெண்களின் சிலைகளும் கலாச்சார பொக்கிசங்கள்.


 பெருமாள் கோவிலில் குலசேகரனின் நில தான கல்வெட்டு இன்னும் உள்ளது. தானம் செய்யப்பட்ட நிலம்தான் இப்போது எவரெவர் கையில் இருக்கிறது என்று தெரியவில்லை.


சேர பாண்டியர்கள் பெண் கொடுத்து பெண் எடுப்பதை சிலர் நினைவு கூர்கிறார்கள். மேற்கண்ட சிலைகளில் சேரத்தி யார் பாண்டியத்தி யார் என்பதை கேட்டால் அவர்கள் அணிந்திருக்கும் காதணிகளின் வித்தியாசத்தை காட்டுகிர்ரர்கள். வட்டம் சேரம். நீளம் பாண்டியம்.

பெருமாள் இப்படி கொழித்திருக்க அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஈஸ்வரன் பாழடைந்து கொண்டிருக்கிறான். இரண்டும் சம காலங்களில் கட்டப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால் அற்புதமான சில கோபுர சிலைகளை கொண்ட இந்த சிறிய கோயில் பராமரிப்பற்று பார்த்தீனியம் சூழ  நாசமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கென வழங்கப்பட்ட பதினைந்து கலம் நிலம் போன இடம் தெரியவில்லை. அழகானதொரு தாமரைக் குளம் இப்போது தூர்த்துப் போய்விட்டதாம்.


இதன் கோபுரத்தில் நான் கண்ட சிலைகளில் இருக்கும் புன்னகையும் ஒரு உன்மத்த அல்லது வெற்றி கழிப்போ.. அல்லது வேதனையின் வெளிப்பாடோ என அறியமுடியாத மகோன்னதச்சிரிப்பை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டின் சிரிப்பு அது..





கேட்பாரற்று கிடக்கும் இந்த வரலாற்றுச் சின்னத்தின் மற்றொரு அற்புதமான படம் இங்கே..

எனது ஆட்டோ போகஸ் கேமராவில் இன்னும் நிறையப்படங்கள் எடுத்திருக்கிறேன்.

தொடரும்...

03 November, 2011

புணர்ச்சி நாற்பது - 01







வேர் பிணைக்கும் முறுக்குடல்
நிலையில் வீழும் துளிநீரில்
நிறைகிறது நாவல் மணம்.
மென்துவர்ப்பு வண்ணத்தில்  
ஒளிர்கிறது நொதித்திராட்சை.
தனதான சைதன்யத்தை 
உதிர்த்து துவள்கிறது 
மயிர்நுனி. கோப்பையின் ரசம்
ஆடிகளில் தெறிக்க ஒளிபட்டு
கிழிகிறது இதழ்வரி. வடிகிற
குருதியுண்ணும்
நகங்களை காதலிக்க தொடங்கும்
அற்றுப்போனதோர்
அகாலத்தில் பிறந்து தொலைகிறது
பெருவெளியில்  
அழுத்தம் மிகுந்த கருந்துளை.

19 October, 2011

கடவுளின் வினை.




அவன் அமர்ந்திருந்தான்
மற்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை
ஆனால் மற்றவர்கள் அனைவரும்
அவனுக்காக அலைந்துகொண்டிருப்பதாக ...
அதாவது சிலர் நாட்டை ஆண்டுகொண்டிருந்தார்கள்
அவனுக்காக. சிலர் ஒரு பெரிய பண்ணையில்
சுவை மிகுந்த பன்றிகளை வளர்தெடுத்தர்கள்
அவனுக்காக சிலர் உணவு தேடும் மனிதர்களை
காரி உமிழ்ந்தார்கள் சிலர் காடுகளிடையே
பயணம் செய்து பசிதீர்க்கும் பூச்சிகளை
சேகரித்து பதப்படுத்தினார்கள் சிலர்
குதிரைகளுடனும் பசுமாடுகளுடனும்
சல்லாபத்தில் ஈடுபட்டார்கள்... ஒருவன்
குடிக்கவும் மற்றொருவன் ஈட்டியால்
மீன்களை வேட்டையாடவும் வேறொருவன்
சுயமைதூனம் செய்யவும் கூட இருந்தவன்
தானியங்களை பறவைகளுக்கு வீசவும்
மற்றும்
அனைவரும் அவனுக்காக
எதையாவது ஒன்றை செய்தவண்ணம்
இருந்தார்கள் ....

அவன் அமர்திருக்கிறான்
அவர்கள் செய்வதெல்லாம் எளிய
கேள்விகளாய் மாறி அவனது
கூர்மையான நாசித்துவாரத்தில்
கவுச்சியின் வாசமென நுழைகிறது...

மனிதர்கள் அயர்வுருகிரார்கள்
மனிதர்கள் உற்சாகமடைகிரார்கள்
மனிதர்கள் வாங்குகிறார்கள் எதையாவது
மனிதர்கள் நுகர்கிறார்கள் வாங்கியவற்றை
மனிதர்கள் திருப்தி அடைகிறார்கள்

அவன் அமர்ந்திருக்கிறான்
புதிய சீருடையுடன் ஒரு இளம் ஆண்
அவனை பார்க்கிறான்.. அவனை எங்கோ
பார்த்த ஞாபகத்தை பொருட்படுத்தவில்லை
அவனது மூளை ஏற்கனவே
சொல்லப்பட்டது..

தன்னிடமிருக்கும் ஒரு சிவந்த
மெல்லிய மொட்டுகளை கொண்ட
ருசியரியும் நாவை சுழற்றி சொல்லாக்குகிறான்..
வார்த்தையின் முடிவில் வளைந்து நிற்கிறது
கேள்விக்குறி ..

மௌனம் மறுக்கப்பட்ட புதிய
சூழலில் பதிலறியாத அவன்
ஒரு பாறையின் மீது அமர்திருக்கிறான்
மக்களிடம் கூவுகிறான் அவ்விளைஞன்
அவனை கண்டுபிடித்து விட்டதாக.
கூடிய மனிதர்கள் ஆராவாரத்துடன்
அழைத்துச் சென்றார்கள் பாறையை

பிருஷ்டம் கிழிய நின்றிருந்தவனின்
குதத்தில் கழி செருகி தொண்டை கனைத்து
தொடங்குகிறான் கனிவான முகம் கொண்ட
அதி ஆண் காரணம் வேண்டிய
முதல் கேள்வியை.

அவன்
பிறகு
எல்லாவற்றையும்
ஒப்புக்கொண்டு
மற்றவர்களைப் போலவே
அவனுக்காக
எதயாவது
செய்ய தொடங்கினான்
ஆசீர்வதிக்கும் கடவுலொன்றின்
நாமத்தை ஜெபித்தவாறு.

எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டிருந்த நான்
நீங்களான வினோதம்
என்பது
புதிர்

எல்லாம் அந்த கேடுகெட்ட.


14 October, 2011

sad jobs

இறந்த மனிதனை பற்றி அவதூறு பேசுவது தவறு - மனித அறங்களில் ஒன்று. இருந்தாலும் சற்று அறத்தை மறந்து ஒரு இறந்த மனிதனை பற்றிய ஒரு பதிவினூடாக சில சந்தேகங்கள்.

இறந்தவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

 எழுபத்து நாலிலிருந்து இந்த ஆண்டு வரை களத்தில் இயங்கி உடல் புற்றின் காரணமாக காலமாகிய அவருக்காக கார்பொரேட் உலகம் கதறிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் முக்குக்கு முப்பது பேர் நிமிசத்துக்கு செத்துக்கொண்டிருந்தாலும் இவர் செத்தது சற்று வருத்தம்தான். அதற்கான இரண்டு வலுவான காரணங்கள் இரண்டு எனக்குண்டு. ஒன்று அவர் புத்தனை தழுவியவர். இரண்டாவது அவரது போதைக்கான பரிசோதனை. இதற்காக அவர் இந்தியாவைத் தேர்தெடுத்தார். அவரது தந்தை ஒரு முசல்மான். அவரை தத்தெடுத்தவர் கிருத்துவர். வீணாய்ப்போன பால்யமாய் இருக்கலாம்.. ஆனால் நிர்வாகத்திறனும் சிக்கலானவற்றை எளிமைப்படுத்தும் கற்பனைத்திறனும் அவரை கார்பொரேட் அரசர்களில் ஒருவராக்கியது.

அவரது மரணம் துக்ககரமானது.

சரி சந்தேகம் ? அவரை பற்றி அல்ல. மூன்று சமீபத்திய செய்திகளை பற்றியது.

1 . சவரக்கடையில் நுழைந்து சிரைத்துக்கொண்டிருந்த எட்டுபேரை ஒருவன் சுட்டு கொன்றுவிட்டான். செத்த எட்டுபேர் எதற்காக செத்தார்கள்.. (அமெரிக்கா).

2 . நாங்கள் வாழ்க்கையை போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டோம் என்கிற 
குறிப்புக்கடிதத்தொடு 39 வயதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கம்ப்யூடர் வேலை செய்யும் தம்பதியினரின் அழுகிய உடலை அவர்களது பெற்றோர்கள் வாங்க மறுத்த காரணம் என்ன.. அப்படி அவர்கள் என்னதான் அனுபவித்தார்கள்.. (இந்தியா).

3 . சில கிலோகிராம்கள் எடை கொண்ட வெடிகுண்டை காரில் கண்டெடுத்து சில நூறு உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள் ..அப்படி காப்பாற்றப்பட்ட அந்த சில நூறு மனிதர்கள் எப்படி/என்னவாய்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

மேலும்..

4 . ஸ்டீவ் ஜாப் - ன் iPad தொழிற்சாலையில் (சீனாவில் இருக்கிறது !) மூன்று மாதத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்துகொண்டார்களே அவர்கள் யார்.. எதற்காக ஒரு புத்தம்  தழுவிய மனிதன் நிர்வகிக்கும்  நிறுவனத்தில் வேலை செய்யும் போது தம்மை மாய்த்துக்கொண்டார்கள் ...


திஸ் இஸ் நாட் iSad ,    பட் இட் இஸ் my Sad  !      

04 October, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 2








  
கவனமாய் தன் நித்திரையை
தவிர்கிறான் செவ்விழி ததாகன்
சிறுபிசகில் மூடிய விழித்திரையில்
தொங்கும் நெடும்கூந்தல் விரைந்து
நீள்கிறது அவனுள்ளிருக்கும் சிறுமலர்
நோக்கி. தாழம்பூ திரிந்த வாசனையில்
நாசி நடுங்க தரை பிராண்டுகிறான்.
தோல்கிழிந்து நகம் வழி கசியும்
குருதி ருசியை நுகர்கையில்
விறைக்கும் ஞானம் புணர்கிறது
ஞாபகத்தின் செதிலை. உதிரத் தொடங்கும்
காலம் வெளியெங்கும் ஏந்திச்
செல்கிறது ஒளிபொருந்திய
தத்துவத்தை.

விடிந்ததும்
இழந்தைதை எப்படி பெறுவது
என்று தெரியாமல் கிடைத்தை
பார்க்க கிடைத்த முதல்
மனிதனிடம் கைமாற்றுகிறான்

ததாகன்

பின் ஒருபோதும்
கூந்தல் நீண்டு பெண்ணாகிப்போன 
அவனை பார்க்கவில்லை

* * * * * *  

02 September, 2011

இரண்டு வியாபார அறிமுகங்கள்



தேனும் இளநீரும் குடித்து இனிய உண்ணாநோன்பை முடித்துக்கொண்ட முதியவர்  தனது வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டு ஊர் போய் சேர்ந்திருக்கிறார் இன்று. தொடர்ந்து பல ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் இனி அவர் முதலீடு செய்வார். லாபம் கொழிக்கும் சிறந்த வியாபாரமாக அதை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.  ஹசாரே தலைமையிலான (அப்படித்தான் நினைக்கிறேன்) இயக்கம் ஒரு முதலீடற்ற தொழில்முறையை நமது தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி ஜெயம் அடைந்திருக்கிறது. அவரது தொப்பியை நமது மக்கள் பயன்படுத்தும் விதத்தை பார்க்க எனக்கு நமக்கு மிகவும் தெரிந்த குரங்கு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மரத்தின் மீது மன்னிக்கவும் மேடையின் மீது நின்று கொண்டு அவர் தனது தொப்பியை அசைக்கிறார்.. நமது மக்கள்.. அசைகிறார்கள். ஆனாலும் இவ்வளவு பெரிய மக்கள் ஒருங்கிணைப்பை நாம் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் ஒட்டு மொத்த உளவியலை புரிந்து கொள்ள கடுமையான விவாதங்களை கிளப்பிவிட வேண்டும். ஏற்கனவே பல விவாதங்கள் பல சிந்தனையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது... அதன் அழுத்தமான பதிவாக அவுட் லுக்கில் வந்த சந்தீப் அட்வார்யு வரைந்த இந்த கார்டூனை பார்கிறேன்.


*********************
ஒரு சீன நாட்டு matrimonial  விளம்பரம் பற்றிய செய்தியொன்றை படித்தேன். சீன ஆண்கள் 40000 வரை பணம் கொடுத்தால் வியட்நாமிய பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் உத்திரவாதம்: பெண்ணின் கன்னித்தன்மை, அனைத்து அரசு செலவினங்கள் மற்றும் ஒருவருட உத்திரவாதம். அதென்ன ஒருவருட உத்திரவாதம் என்றால் ஒருவேளை ஒருவருடத்திற்குள் அந்த பெண் ஓடிப்போய்விட்டால் வேறு ஒரு பெண் இலவசமாக  தரப்படும் என்பதுதான் அது. திருமணம் செய்து கொண்டு வரப்படும் பெண்கள்  ஓடிபோயவிடுவது அதிகமாகி உள்ளது என்று சீன அரசு கூறியுள்ளது. உண்மையில் இவர்கள் காணாமல் ஆக்கபடுகிரார்கள். அதாவது அவர்கள் வாங்கிய விலையை விட அதிக அளவுக்கு உள்ளூர் ஆண்களிடம் விற்று விடுகிறார்கள்.
பெண் குழந்தைகைக் கூட விற்கும் நமது நாட்டு மக்களுக்கு இது ஒன்றும் அதிர்வு தரக்கூடிய விசயமில்லைதான்.

அது சரி ஊழலை ஒழிக்க என்னதான் வழி. என்னை பொறுத்த வரையில் அதற்கு ஒரு வழியும் இல்லை. கடைசி மனிதனும் வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வான். ஒழிக்க முடியாது. அறங்களை போதித்து குறைக்க வேண்டுமானால் செய்யலாம்..

 நண்பர்களே நாம் எத்தனை பேர் நமது கணினிகளில் ஒரிஜினல் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் ?

*********************

07 August, 2011

வெம்பும் பாழ்


நிரூபிக்க ஏலாமல் போகிறபோது என்னை 
அன்பரே உங்கள் முன் தாழ் பணிகிறேன் 
நீங்கள் உங்கள் துர்காரணிகளை நம்பினீர் 
செவிகளில் களிமண் பூச்சொன்று பூதகாலம் 
அறைந்துவிடதாக நிலையாக கூறினீர் 
எனக்குள் வீசுகிறதோ வண்டலின் வாசனை 
சொல்லுதற்குக் கூசும் சொற்களென 
மறுத்தளித்தீர். ஆயினும் உயிரைத்தின்னும் 
உடல் நானென்பதை அடிக்குறிப்பு செய்து 
வைக்கிறேன் உங்கள் முன் அதனுள் 
கசிகிறது நானான வன்குறிப்புகள்: 
வன்மம் குடித்து உணர்வாகிடு முடல்
நான் கற்றாழை மணக்கும் பெண்சதை 
நுகரும் விரிநாசி யுடல் நான் 
திகைப்படையும் மரணத்தின் தொழு 
பய நிழ லுடல் நான் சுகிக்க முகங் 
கோணாது உம்மை காட்டிக்கொடுக்கும் 
காட்டேறியின் மூலபொரு ளுடல் நான் 
வெளி காணும் கனவில் நுழையமுடியாத 
கனவில் முரண்பட்டு நீரில் குதிக்கும் 
பச்சைத் திரு தவளை உடல் நான். புலனற்ற 
பார்வையில் புறம் தள்ளினீர் நிகழ் வெப்பம் 
உள்நுழைய தொலைகிறேன் கேளீர் 


நிரூபிக்கபடாதவனின் 
வெதும்பிய சுக்கிலமென்பது
அரூப சர்ப்பமூறும் 
பாழ் பிரதி .

***************************

05 August, 2011

தனிமம்


சிற்றிதழ் தொடங்குகிறேன். அக்டோபர் நான்காம் வாரம் வெளியிட எண்ணம். விரும்புகிறவர்கள் கட்டுரைகள் மட்டும் அனுப்பலாம். விளம்பரம் கிடையாது. சந்தா கிடையாது. வருடத்திற்கு மூன்று இதழ்கள். 'கிரந்த'  போன்று தரமான புத்தகமாக வெளியிட எண்ணம். பேராசைதான். என்ன செய்வது. உயர்வுள்ளல்!  ஆதரவு கோருகிறேன். நன்றி. 

**************

கடந்த மூன்று வாரங்களாக கழுத்து - முதுகெலும்பில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலி உணர்வை சமாளித்து வருகிறேன். உடம்பில் கூடவே இருக்கும் வலி என்பது வினோதமான ஒரு ஆன்மீக பயணமாக இருக்கிறது. சில நேரங்களில் அது ஒருவித போதை நிலையை அளிக்கிறது.மேலும் வாழ்நாளில் இல்லாத அளவிற்கு தூக்கத்தில் கனவுகள். நேற்று மதியம் தூக்கத்தில்  ஒரு முழு திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். பழங்குடி கிராமம் ஒன்றில் பேசும் காட்டெருதுகள் நுழைந்து துவசம் செய்கிறது. அதன் தலைவனை மர ஈட்டியால் குத்தி கொல்கிறான் கிராமத்தின் தலைவன். என்னாமா எடுத்திருக்காங்க படத்த ! மருத்துவர்கள் என்னை நான்கு விசயங்களுக்கு தடை செய்திருக்கிறார்கள். 1. இரு சக்கர வாகனம் ஓட்ட கூடாது. 2. பயணம் செய்ய கூடாது 3. கணினி பக்கம் போகக்கூடாது 4. படிக்கக்கூடாது. என்ன வாழ்க்க சார் இது ?!


இன்றுடன் 19 நாட்கள் ஆகிவிட்டது. கூடவே இருந்த ஒரு இனிய காவலாளி இன்று பள்ளிக்கூடம் சென்று இருக்கிறார். மேட்டரை தட்டி விட்டேன் ! 

**********


01 July, 2011

கருப்பு நகைச்சுவை



கூலிக்கு வேலை செய்ய ஆட்கள் அருகிப்போனார்கள், முக்கியமாக விவசாயக்கூலிகள் என்று ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார். மனிதர்கள் மலிந்த இந்தியத்திருநாட்டில் அனைவரும் முதலாளிகள் ஆகிவிடிருக்கக்கூடும் என்று சொல்லி சிரித்தேன். நான் மிக சிறந்த கருப்பு நகைச்சுவை கூறியதாக நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அவருக்கு எங்கிருந்து வந்ததோ கோபம்.. சகட்டுமேனிக்கு மனிதர்களின் பரம்பரையை சொற்களால் குதறத் தொடங்கிவிட்டார். பேச்சு திசைதிரும்பியதும் அவர் கேட்டது என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது. "சாலையோரக்கடையிலிருந்து மெகா மார்ட் வரையிலும் தெருத்தெருவாய் பரவிக்கிடக்குது ஒவ்வொரு சுவத்துக்கும் இடையில ரெண்டு செல் போன் கட திறக்குராய்ங்க.. எல்லாத்திலையும் ஏவாரம் நடந்துகிட்டுதான் இருக்கு எங்கிட்டிருந்து இவங்களுக்கு ரூவா கெடைக்கிதுன்னு தெரியலை.." இவ்விதமான பொருளாதார பிரச்னையை புரிந்து கொள்ள குறைந்தது அமர்தியா சென் வரைக்கும் படிக்க வேண்டும் போல.. ஆனால் என் பார்வையில் வேறொன்றை காண்கிறேன்.. தமிழகத்தில் மிகப்பரவலாக பீகார், ஒரிசா போன்ற வடகிழக்கு மாகாண கூலிகள் மிகப்பெருமளவு வரவழைக்கப் பட்டு கொண்டிருக்கிறார்கள். சிறிது சிறிதாக அவர்களது குடும்பங்கள் இங்கு குடியேறத் தொடங்கியுள்ளன. சில குழந்தைகள் தமிழக பள்ளிகளும் சேர்க்கப் பட்டிருக்கலாம். பெரும்பான்மையான மில்களில் வேலைக்கு வரும் இவர்களுக்கு இங்கு கிடைக்கும் உத்தரவாதமான சம்பளம், உணவு இருப்பிடம் மற்ற மாநிங்களில் கிடைப்பதில்லை. தமிழக சிறு முதலாளிகளும் காசை பெற்று குவாட்டர் அடித்துவிட்டு கம்பி நீட்டும் உள்ளூர் கூலிகளை விட இவர்களின் வேலைத்திறன்களில் நம்பிக்கை கொள்கின்றனர். இப்போதைக்கு இது பெரிய விசயம் ஏதுமில்லை என்றாலும் வடகிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தால் எதிர்காலத்தில் தமிழ் நாடு ஒரு மிகப்பெரிய குழப்ப நிலைக்கு உள்ளாக நேரிடும் என்பதை புரிந்துகொள்ளலாம். நேபால் பூட்டான் வழியாக ஊடுருவிய மனிதர்களின் கையில் இன்று இந்திய ஓட்டுரிமை. அதன் உச்சபட்ச விளைவு மாவோஸ்ட்டுகள். தமிழ் நாட்டில் பயங்கரவாதத்திற்கு வாய்ப்பில்லை.. ஏனென்றால் தமிழ் இளைஞர்களுக்கு குடிக்கவே நேரம் போதவில்லை.. அல்லது குடிப்பதற்காவே கூலிக்கு செல்லுகின்றனர்.. அதே நேரத்தில் வெளியிலிருந்து வரும் பயங்கரவாதிகளுக்கு பயங்கர வாதச்செயல்களில் ஈடுபட்டு விட்டு சட்டென்று தப்பி செல்ல இங்கு வழிமுறை கிடையாது.. ஏனென்றால் இங்கு மொழி ஒரு பாதுகாப்பு சுவராக நிற்கிறது. ஆனால் ஒருவிதத்தில் நமக்கு இதே மொழிதான் வில்லங்கத்தைக் கொண்டுவரும் என நினைக்கிறேன். உதாரணமாக, சென்னைக்காரன் திருநெல்வேலி காரனிடம் பேசினாலே புரியாது.. அவனே ஆங்கிலத்தில் பேசினால் மரியாதையுடன் சற்று தள்ளி நிற்பான்.. வேறு பாசை பேசினாலோ பேசாமல் ஒதுங்கி போய்விடுவான்.. இவர்களுக்கு எப்படித்தெரியும் வருகிறவன் நல்லவனா பயங்கரவாதியா என்று. எனவே தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு வாய்ப்பில்லை என்று நான் சொன்னால் அது கருப்பு நகைச்சுவை நண்பர்களே.


***************


ஆனால் இன்று நான் ஒரு பயங்கரவாதியை தமிழ் நாட்டில் இனங்கண்டுகொண்டேன். அவர் பெயர் பாலா. தமிழ் திரைப்பட இயக்குனர். அவர் உபயோகிக்கும் ஆயுதம் சினிமா. கருப்பு நகைச்சுவை என்கிற அடிப்படையில் பார்த்தால் அவன் இவன் ஒருவகையில் மிக நல்ல சினிமாதான். படத்தில் இருப்பதை விட யதார்த்தம் படு கேவலமாக இருக்கிறது!


**************



24 May, 2011

மற்றொரு கல்.




நகம் கடித்துகொண்டிருந்தவனிடம்


அரும்பியது காதல்


காம்பின் குறுகுறுப்பை மறைக்க


உதடு கடிக்கையில் உணர்ந்தேன்


குருதியின் முதல் சுவையை


அடுக்கி வைக்கப்பட்ட


நேர்த்தியான புத்தகங்களில்


அற்ற சொற்களை உடலெங்கும்


ஊரசெய்தான்


விடியலின் தூரத்தில் வெடித்த


வெடிகளின் சத்தத்தில்


உடம்பில் பூத்தன நீலம்..





குளமென மாறிய எனதுள்

அவன் எறிந்தது மரணத்துக்கான ...




23 May, 2011

கித்தான் கோமாளி


ஓவியனும் சிற்பியும் கவிஞனுமான மனப்போக்கை கொண்ட பேய்காமனின் நிகழ்த்து கலை ஆர்வத்தில் உருவான கனவுக் கடவுளும் வளவிக் கிழவிகளும் என்று தலைப்பிட்ட கூத்து பாதி நாடகம் பாதி நிகழ்த்து கலை தன்னளவில் முழுமையாய் வெளிப்பட்டிருந்தது நேற்று மாலை தேனி முல்லை நகரில். நேரடியான எளிய கதைத்தளம் கொண்ட ஒல்லிக் கோமாளி குண்டுக்கோமாளி வாய்மொழியாக நிகழ்வு விரிகிறது. தூக்கக் கடவுள் பொம்மைக் கிழவிகளை செய்கிறார். பிறகு தூங்கிவிடுகிறார். கிழவிகளுக்கு பசிக்கிறது. கடவுளிடம் முறையிட அவர்களுக்கு வளவிகளை உருவாக்குகிறார். மீண்டும் தூங்குகிறார். வளவிகளை கதைகளை தேடும் பொம்மை பொடியன்களுக்கு விற்று பழங்களையும் தானியங்களையும் பெற்று மகிழ்கின்றனர் கிழவிகள். வளவிகள் மூலம் கதைப்பாடல் பெற்று மகிழ்கின்றனர் பொடியன்கள். தூக்கத்தில் வளவிகளை உடைக்கிறார் கடவுள். பொடியன்களின் சாபத்தில் கல்லாகிறார் கடவுள் நிரந்தரமாக.


நிகழ்த்துகலையின் உபகரணங்கள் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தன. குறைந்த கால அளவில் பையன்களை சரளமான நடிப்புக்கு தயார் படுத்தியிருந்தது பேய்காமனின் சாதனை. ஒரு ஆரம்ப கால நிகழ்த்துகலை இயக்குனனாக பேய்காமனிடம் அளப்பரிய சாத்தியப்பாடுகள் இருப்பதை இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. நாடக அறிவு சிறிதும் இல்லாத அதன் பாலான பெரும் ஆர்வம் ஒன்றும் அதிகம் இல்லாத எனக்கு அவனிடம் ஏற்படுகிற சிறு பொறாமையுணர்வு அந்த நிகழ்த்துகலையின் வெற்றியாக நான் கருத்துகிறேன்.

22 May, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 1

துயர் மிகுந்த நிலவொன்றை
குடிக்கிறான் ததாகன் தன் விரல்களில் முளைக்கத்தொடங்கும் வேர்களை மறைக்கவொன்னாமல். தன்னிடம்
உதிர்ந்த சொல் ஒன்று பச்சையமாய்
படரும் உடலை என்ன செய்வதென்று
அறியாமல் அவன் விழுங்கும் பாழ்
வெளிச்சம் பழுப்பேற்றுகிறது முகத்தை
சலிப்பேறிய இச்சையுடன் பத்மத்திலமரும்
அவனது ப்ருஷ்டதிலிருந்து நிலம்
துளைக்கிறது முதல் வேர். சொற்களற்ற
கணத்தில் தத்துவம் அவனை மரமாக்குகிறது
நிதானமாய் வளரத்தொடங்கிய விருட்சத்தில்
மறைகிறது பேராசை கொண்ட உடல்
காலத்தின் அடர்த்தியை சூழ் கொள்கிறது
பெருவிருட்சதின் மடி
பின் தினமந்தியில் வரும் மரங்கொத்தியை
அதன் அலகின் கொத்தலில் எழும் ஒலியை
யசோதரையின் முத்த சாயலை
துரோகமாக்கி
இடது கையில் மறைத்து
வலதுகை ஆள்காட்டி விரலை
பூமியில் புதைக்கிறான்

விளைகிறது நிழல் வண்ண ஞானம்.....

04 May, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் 2b


சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான செம்பாலத்தின் படத்தை கொண்ட ஒரு நாள்காட்டியும் பழைய வகையான - மணிக்கொருதரம் ஒரு மரங்கொத்தி தனது அலகால் தட்டி ஒலி எழுப்புவதுபோன்ற - கடிகாரமும் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. மேசையில் ஒரு கோப்பை நிறைய பச்சை தேநீர் இருந்தது. கோப்பையை தொட்டேன். அது இன்னும் தனது உஷ்ணத்தை இழக்கவில்லை. அடுப்பில் கரி கங்குத்துண்டுகளாய் புகைந்து கொண்டிருந்தது. அறையில் இரண்டு மெத்தைகள் இருந்தன. ஒன்று அகலமாகவும் மற்றொன்று சற்று குறுகியும் இருந்தது. குறுகிய மேத்தைமேன் பூப்போட்ட பாவாடை ஒன்று கிடந்தது. மகளுடையது. நான் குறுகிய மெத்தையை தேர்ந்தெடுத்தேன். அதில் படுத்துக்கொண்டு துருபிடித்த மேல் சுவரை பார்த்தேன். கடந்த சில மணிநேரங்களை பற்றி யோசித்தேன். எதிலும் அக்கறை செலுத்த முடியாதளவுக்கு அலுப்பாய் உணர்ந்தேன். மேலும் கடும் குளிராகவும் இருந்தது.. வானத்திலிருக்கும் முறையில்லாமல் பிறந்த கடவுளே.. நான் ஈரமான மேல்சுவர் போன்ற கடும் குளிரை உணர்ந்தேன்.


ஒரு முழு மாதம் கடந்தபின்னும் யாரும் வரவில்லை. யாருமற்ற அவ்வீட்டிற்கு வருகைதரும் ஒரே ஆள் நானாகத்தான் இருந்தேன். தினமும் இரவில் செலவில்லாமல் அங்கு உறங்கினேன். மாத முடிவில் எனக்கொரு வேலையும் தங்குவதற்கு புதிய இடமும் கிடைத்தன.


இஞ்சி மலையை விட்டு வெளியேறி எனது வலது காலை வைத்தவுடன் எனது இடதுகாலும் என்னுடன் இணைந்து கொண்டது. நாலு வருஷம் ஆகிப்போனது. இந்த நாலு வருடங்களில் கிட்டங்கியின் இருள்மூலையில் மறந்து விடப்பட்ட உதிரி நாற்காலி போல இருந்தேன். பீஜிங் - ல் எனக்கு முதலில் கிடைத்த வேலை தினசரி மக்கள் விடுதியில் துப்புரவு பணி. வரண்டாவையும் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அறைகளை சுத்தம் செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை. நான்கு துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து எனக்கு ஒரு படுக்கையை ஒதுக்கியிருந்தார்கள். ஏறக்குறைய ஒரு வருடம் அந்த வேலையில் ஒட்டியிருந்தேன். பிறகு பிளாஸ்டிக் துப்பாகிகளையும் விமானங்களையும் தயாரிக்கும் அரசு பொம்மை தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் பெண்கள் பணி புந்தார்கள். அந்த கூட்டத்தில் ஏற்படும் சத்தைதையும் அறைகளில் வெளியேறும் கழிவு வாடையையும் என்னால் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான் அந்த வேலையையும் விட்டொழித்தேன். அன்றிலிருந்து பலவிதமான வேலைகள் செய்தேன். தகர பாத்திரம் செய்யும் தொழிற்சாலையில் அதன் இயந்திரத்தை கண்காணிக்கும் வேலையும் அதிலொன்றாய் இருந்தது. கடைசியாக நான் ஒரு வேலையில் சேர்ந்தேன். திரையரங்கத்தில் துப்பரவு செய்யும் பணி. 'இளம் முன்னோடிகள்' என்ற அந்த திரையரங்கில் பெயருக்கு ஏற்ற மாதிரி அல்லாமல் சீன தற்காப்புக் கலை சினிமாக்களையே ஓட்டினார்கள். துறவிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்கிற வகையான திரைப்படங்கள் அவை. படம் முடிந்த ஒவ்வொரு தடவையும் அரங்கினுள் சிதறிக்கிடக்கும் கரும்பு சக்கைகள், பாதி தின்ற கோழிக்கால்கள், நிலக்கடலை தொலிகள், பழ விதைகள் மற்றும் பலவகையான கழிவுகளை - சில நேரங்களில் வேகவைத்த தவளைகள் கூட - கூட்டி துடைக்கவேண்டும். இருந்தாலும் எனக்கு இந்த வேலை பிடிக்க தொடங்கியிருந்தது. ப்ரொஜெக்டர் அறையில் கிடந்த ஒரு உடைந்த மேசையில் படுத்துக்கொள்வேன். தினமும் சினிமா பார்ப்பதும் மக்கள் மறந்து விட்டு செல்லும் பொருட்களை வைத்துக்கொள்வதும் இந்த வேலையில் எனக்கு கிடைத்த கூடுதல் விஷயங்கள். ஒரு நாள் நான் ஆங்கில அகராதியை கண்டெடுத்தேன். கொந்தளிப்பான கண்டுபிடிப்பு அது. ஒரு ஷாங்கை மாணவன் - பெயர் நினைவில்லை - அகராதி முழுவதையும் மனப்பாடமாக ஒப்புவித்து ஹார்வர்ட் பலகலைகழகத்தில் இடம் பிடித்தது ஞாபகத்திற்கு வந்தது.. யார்கண்டது இந்த அகராதி எனக்கும் அந்த உலகத்திற்கு செல்ல வைக்கும் ஒரு கடவுச்சீட்டாக இருக்கக்கூடும்தானே.. போகட்டும் நான் அதிலிருந்து வார்த்தைகளை படிக்கத்தொடங்கினேன். சொல்கிற அளவுக்கு அதைப்படிப்பது சிரமமாக இருக்கவில்லை என்றாலும் படிப்பது எனக்கு அலுப்பை வரவழைத்தது. அதை படிப்பதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும் என்னால் அரங்கத்திற்கு வரும் வெளிநாட்டு நபர்களுடன் சில வார்த்தைகள் பேச அது எனக்கு உதவியது. எனக்கு அந்த திரையரங்கம் வாழ்வதற்கு உகந்த இடமாக பட்டது. எனக்கு கிடைத்த உபரி பணத்தைஎல்லாம் சினிமா பத்திரிக்கைகள் வாங்கவும் வேறு அரங்குகளுக்கு சென்று புதிய சினிமாக்களை பார்க்கவும் செலவு செய்தேன்.


அந்த நாட்களில் எனக்கு ஒரு முக்கிய அனுபவம் நிகழ்ந்தது. நான் ஒரு திரைப்பட உதவி இயக்குனரை சந்தித்தேன். அரங்கினுள் தொலைந்து போன குடையை கண்டுபிடிக்க உதவினேன். அவனது தோழி, ஷேன்சன் என்கிற ஊருக்கு போய்விட்டதாகவும் அவள் போகும் போது அந்த குடையை பரிசாக தந்து சென்றாள் என்றும் சொன்னான். அந்த குடை அவளது பிரிவின் பரிசு அதனால் வியப்பொன்றும் எனக்கு ஏற்படவில்லை. அவளைப்பற்றி பேசும்போது அவனது குரல் துயரத்தில் தோய்ந்திருந்தது. பென்சில் போல ஒல்லியாகவும் மிலிடரி கட் முடியலங்காரமும் சந்தையில் கிடைக்கக்கூடிய மலிவான சிவப்புநிற வி கழுத்து விவசாயிகள் அணியும் ச்வட்டரை அணிந்திருந்த அந்த சோகமான குடை மனிதனுக்கு எனது தொலைபேசி எண்ணை எதற்காககொடுத்தேன் என்று விளங்கவில்லை. அதற்காக நான் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ள வில்லை. அவன் வேலை பார்த்த படங்களின் நடிகர்களை - காங் லி, சங் எமோவ், சென் கைஜ் - எனக்கு பிடித்தமானவர்களும் கூட - பற்றி பேசிக்கொண்டிருந்தான். மேலும் அவன் பார்பதற்கு திருடனைப் போலவோ அல்லது பொய் சொல்பவனைப் போலவோ தெரியவில்லை. நான் அவனிடம் எனது அடையாள, அரங்க, கைபேசி, தொலைபேசி, எனது அடுத்தவீட்டு மனிதரின் எண்களை சொன்னேன். அதை வாங்கிக்கொண்டு ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பீஜிங் பிலிம் ஸ்டுடியோ விற்கு போகுமாறு சொன்னான்.

ஒன்றுக்கும் உதவாத பழைய குடையை அவனிடம் திரும்ப கொடுத்த ஒரு மாதத்திற்கு பிறகு நான் பீஜிங் பிலிம் ஸ்டூடியோவில் ஒரு உதிரி நடிகையாக நாளொன்றுக்கு இருபது யோன் சம்பாதிக்கத்தொடங்கினேன். ஒரு குடை எனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சாவியாக இருக்கும் என்று யார் கண்டது..?


**************


03 May, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் - 2 a



சுளை இரண்டு:


பென் பாங் மூர்கமானதும் தனது வேர்களை பீஜிங் -ல் பரப்பியதும் ....






சில்லுனு ஒரு கேன் கோக்கை குடிப்பதையே பெருசுன்னு நெனச்சிருந்த காலம். பதினேழு வயசு. வீட்ட விட்டு வந்து பீஜிங் - ல என்னோட முதல் இரவு. என்னோட பெட்டிய இழுத்துகிட்டு விடுதி விடுதியா ஏறி எறங்குறேன்.. எனக்கு தெரியும் விவசாயிகளுக்கு தங்க இடம் கிடைக்காதுன்னு.. எங்கிட்ட நிறைய பணமிருந்தாலும்.. என் முகத்தை பார்க்கும் ஒவ்வொரு காவலாளியும் .. விவசாய பெண்ணே.. உனக்கு இங்க என்ன வேலை.. என்பதுமாதிரிதான் பாக்கிறாங்க. என்ன பாத்ததும் அந்த தேவிடியா பசங்க அப்படிதான் நினைக்கிறாங்க. நான் ஒரு குறைஞ்ச வாடகை அறையை எடுப்பதானால் நிலவறைகளை தான் எடுக்கணும்.. பீஜிங் - ல அதுதான் குறைவு.. அது எனக்கு பிடிக்கல. இந்த நகரம் முரட்டுத்தனமான புது உலகம்..இரவில் கூட பிரகாசிக்கும்..அதை நான் தடவி பார்க்க விரும்பினேன்.




கடைசியா நான் வந்த நின்ன இடம் பெய் ஹி யான். ஹுட்டங் பகுதி. சேரி கட்டிடங்கள். அங்கு வசிப்பவர்கள் ஹுடாங்க்ஸ். நீண்ட குறுகிய சந்துகளை கொண்ட இரைச்சல் மிகுந்த பழுப்பு நிற வீடுகள். கணக்கற்ற சந்துகளில் நிரம்பியிருந்த கணக்கற்ற வீடுகளில் வசிக்கும் கணக்கற்ற குடும்பங்கள். இந்த பூர்வகுடிகள் தங்களை பேரரசின் மக்கள் என்று நெனசுகிறாங்க. எனக்கு அவர்களை பார்க்கும் போது உயர்குடியில் பிறந்தவர்கள் போல தெரியவில்லை.




சாலையோரமாக பெட்டியை வைத்து அதன் மீது உட்கார்ந்தேன். எனக்கு பக்கத்தில் இரண்டு கிழவர்கள் குத்தவைத்து உட்கார்ந்து டீ குடித்தவாறு செஸ் விளையாடி கொண்டிருந்தார்கள். அவர்களை பார்க்கும்போது பலமணி நேரங்களாக அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் போல தெரிந்தது.. அல்லது வாரக்கணக்காக.. அல்லது நூற்றாண்டுகளாக அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்திருக்கலாம். சிறிது நேரம் கழித்து நான் பசியை உணர்ந்தேன். அடிவயிற்றில் ஏற்பட்ட முனுமுனுப்பு இது எனக்கு ஏற்படும் சாதாரண பசியில்லை என்பதை உணர்ந்தேன். கடுமையான பசி. மூன்று நாட்கள் சரியான உணவில்லாமல் புகைவண்டி பயணம் செய்த பின் ஏற்படும் பசி போன்றது. சாலையோர வியாபாரியிடம் போய் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கை வாங்கிக்கொண்டு திரும்ப வந்து பெட்டி மேல் உட்கார்ந்து கொண்டேன். சூரியன் மறையத்தொடங்கியதும் தெரு விளக்குகள் எரியதொடங்கின. சற்று இருட்டானதும் வீடுகளின் ஜன்னல்களில் விளக்கு வெளிச்சங்கள் தெரியதொடங்கின. மனித நடமாட்டம் இல்லாமல் போனது. இரண்டு கிழவர்களும் போய்விட்டிருந்தனர். . எனது எதிர்காலத்தை நினைத்து.. முக்கியமாக நாளையை நினைத்து நான் கவலைப்பட தொடங்கினேன்.. என்னுள் பதற்றம் தொற்றிக்கொண்டது.




அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக மகளும் தாயும் வாதிட்டுக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவர்களின் சத்தம் புரிந்துகொள்ளமுடியாததாகவும் , கடுமையான உணர்வுடனும் சிறிது சிறிதாக அதிகமாகத்தொடங்கியது. ஒரு மகளுக்கும் தாயிக்கும் இவ்வளவு பேசிக்கொள்ளும் அளவிற்கு விஷயங்கள் இருக்குமா என்ன.. அவர்கள் மிகவும் நெருக்கமானவகளாக இருக்க வேண்டும். என் குடும்பத்தில் யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அப்பா அம்மாவிடம் ஒருபோதும் பேசியதில்லை. அவர்கள் இரண்டுபேரும் ஒருபோதும் பாட்டியிடம் பேசியதில்லை. அவர்கள் ஒருவர்கூட என்னிடம் பேசியதில்லை. எனது கிராமத்தில் மக்கள் பூச்சிகளை போல, புழுக்களைப் போல, கதவுகளின் பின்பக்கம் தொங்கும் லாடம் போல வாழ்ந்தார்கள். அவர்களிடம் பேசுவதற்கு அதிகம் இல்லை. நான் இந்த வீட்டிலிருந்து வரும் சத்தத்தில் மூழ்கிவிடுவது போலவும் அதே சமயம் இந்த வீட்டிற்கும் எனக்கும் எதோ ஒரு சம்மதம் இருக்கிறது என்றும் உணர்ந்தேன்.




திடீரென்று அவ்வீட்டு கதவு திறக்க வெளியே ஓடிவந்த மகளை துரத்திக்கொண்டு தாய்க்காரி வந்தாள். எல்லாம் சடுதியில் முடிவடைந்து விட்டது. மிக வேகமாக கடந்த வாகனத்தினடியில் அவர்களது இரண்டு உடல்களும் பதற்றத்தில் எனது கையிலிருந்து தவறி உருண்ட உருளைக்கிழங்குடன் சேர்ந்து நசுங்கிப்போனது. காதால் தாங்கமுடியாத ஒரு சத்தத்துடன் அந்த வாகனம் நின்றது. வண்டியை ஒட்டியவன் வேகமாக இறங்கினான். இரண்டு உடல்களையும் இழுத்து வாகனத்தின் பின் பகுதில் ஏற்றினான். ஒன்றும் சொல்லாமல், என்னை ஏறிட்டு கூட பார்க்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். நான் திகைத்து நின்றேன். திரும்பவும் நான் அந்த இடத்தை பார்த்தபோது தரையில் சிறிது ரத்தம் தெருவிளக்கில் மிளிர்ந்து கொண்டிருந்தது. அந்த பெருநகரத்தில் எனது முதல் இரவை என்ன செய்வது என்று தெரியாமல் அதே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் யாரும் இல்லை. தாயும் மகளும் வெளியேறிய வீட்டின் கதவுகள் இன்னமும் திறந்து கிடந்தன. அதன் விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. பிசாசுகள் எதுவும் வெளிவரவில்லை. அரைமணி நேரம் கழித்து அந்த வீட்டினுள் சென்று பார்க்க முடிவு செய்தேன்.








**********************








05 April, 2011

எப்போதும் குறையுள்ள வெளிச்சம்.

அவன்

குடிக்கிறான்


கூர்மையடைகிறது


அறிவு


அவள்


குடிக்கிறாள்


இளகுகிறது.


உடல்.


மேலும்


உடலுக்கு


எதிரானது


அறிவு


கொடுபவரின் நேர்மை அறிய


பெறுபவரின் ஒற்றை துரோகம்


போதும்


அவன்


திமிருடன்


வளர்ந்த


பெருமரம்


அவள்


அக்கிளைகளில்


பூக்கும்


தண்மீன்கள்



மேலும்


பறிப்பவர் நேர்மை அறிய


உண்பவர் முகபாவம் போதும்


அவன்


அவளை


சாட்டையால்


அடிக்கிறான்


அவள்


அவனுக்கு


வலியை


கொடுக்கிறாள்


மேலும்


திகைப்படைபவர் வாழ்விழக்கின்றனர்


பார்வையாளர்கள் காயடிக்கப்படுகின்றனர்


அவன்


அவள்


நெடுஞ்சாலை


முடிவுறும்


வனத்தில்


பசிய


இலைகளுக்கிடையே


இளம்பரிதி


மரத்தினை


காண்கிறார்கள்


வெளியெங்கும்


வீசுகிறது


மாம்சம்


பச்சை


வண்ணமாய்



அவன்


அவள்


மாயகணத்தில்


பொய்யாகி


மீள்கிறார்கள்


தெருசாலைகளில்


ஊளையிடும்


நாயின்


ஒலிவடிவில்


மெழுகு தீர்ந்த


திரி கருகும்


ஓசையில்


பிறக்கிறது ...





.............. மீசைக்காரன் நீட்ஷே நினைவில்.

04 April, 2011

சொற்களின் நதி..

நதி ... அமைதியற்று தவிக்கிறது. அதன் தேவைகளை தீர்மானித்த பின்னே தனது பாதைகளை தீர்மானிக்கிறது. பாதைகளின் திசையறிவு குரூரமானது அது நினைவுகளை நொதிக்கசெய்து விடுகிறது. போதம். நதியின் பாதைகள் பிளவுபடுகிறது. நதி ... பிளவுபட்ட பாதைகண்டு குதூகலிக்கிறது தனதான ஆயிரமாயியிரம் நீண்ட விரல்கால் திசைகளை உண்கிறது. தீர்ந்து போன திசைவெளியில் தானே திசையென தன்னையே தொடர்கிறது. மோகம். அதன் ஒலிவாங்கும் சவ்வில் சிறு வெடிப்பு. நிதானம் மாற்றுகிறது. நதி... பாதையற்ற சமவெளியில் பரவுகிறது. காவு கொள்கிறது வெளியலையும் உயிர்மரங்களை. நீரின்றியமையாத அவைகள் நீரை சபிக்கின்றன. அதன் வேர்களை கற்களாய் உருட்டி நதியின் பாதைகளில் உருட்டுகின்றன நிரம்பிபரவுகிறது கூலாங்கற்கள் .. நதி .. ஒவ்வொரு கல்லின் உருலளிலும் சமனிழக்கிறது தொடர்ந்து.. நதி ஆனந்த கூத்தாடுகிறது.



......................................................................... நண்பன் வசுவுக்கு.



28 March, 2011

சாயலற்றுபோகலாம்...


ஒரு வேளை நாளை எனது பயணத்தை தொடங்கிவிடலாம். கிழக்கின் தூர நிலத்தின் கதகதப்பான அமைதி தேடி. காலைபனி கசியும் மிருதுவான நிலத்தில் சில கிழங்குகள் எனக்கு கிடைக்கலாம். ஒரு பகலின் ஏகாந்தம் புல்முனையில் வெளியேறும் காற்றின் ஒலியால் கிடைக்கலாம். வெயிலின் மஞ்சளில் எனது முகம் உருகி சில சொட்டுகள் ஆவியாகலாம். களைப்பற்ற மாலையில் கரும்பாறை சூட்டில் என் நிர்வாணம் குளிர் காயலாம்.


அல்லது


ஒரு இரவு என்னில் நுழையலாம். ஒற்றைக்கரு தானியமாய் சிறகு நீண்ட இளமஞ்சள் கழுத்து நிற பறவையின் அலகில் கவ்வப்பட்டு அதன் இருள்வயிர் சேரலாம். அதன் உதிரம் கலந்து பழுப்பு கழிவாய் அரண்மனை சுவரில் விதைபடலாம். பெருமரமாய் நீண்டு அரண்மனைகதவுகளை பிளக்கலாம். வெட்டுண்டு மரதுண்டுகளாய் மிதக்கலாம் தலைகீழாய் ஓடும் நதியொன்றில்.


அல்லது


ஒரு வேளை நாளை நானொரு பதில் சொல்ல நேரலாம். அதன் விளைவால் எனது நேரங்கள் பறிக்கப்பட்டு எனதுடல் ஒரு பெண்டுலமாய் நடமாட தொடங்கலாம். பனிமூச்செரியும் ஓநாயின் நாவுகள் எனது பாதங்களை சுவைக்கலாம். அதன் சுவை புணரப்பட்ட பிணத்திற்கு உயிர் ஊட்டலாம்.


அன்பே


அதற்குமுன் உனது சாயலை என்னிடமிருந்து எடுத்துவிடு. அது என்னை சாஸ்வதமாகுகிறது. சுயசாயலற்ற உயிரின் காலமாய் வெடிக்கசெய்கிறது. வெளியெங்கும் நிரம்பும் ஒளிதுகலாக்குகிறது. என்னையும் மற்றமையையும் ஒன்றாக்குகிறது. தாங்கவொண்ணா குதூகலத்தின் நீர்துளியாகின்றது. ஆம் அன்பே ... உன் சாயல் ...என்னை மகாவெடிப்பின் காரணியாக்குகிறது..


அன்பே


இன்று மாலை போதுமெனக்கு. ஒரு வேளை நாளை நான்.....


**********************

08 March, 2011

maaaaarch ........ 8

பெண் இனம் என்பது ஒற்றை உயிர் - குட்டி ரேவதி. பிரமாண்டமான கற்பனைக்கு நன்றி சொல்லி இந்த பெண்கள் தினத்தை கொண்டாடும் பெண்களுக்கு என் இனிய வாழ்த்துகளை சொல்கிறேன்.
கடந்த மாதங்களின் சில நாட்கள் உடலை மூலதனமாகிய நாற்பத்தைந்து பெண்களிடம் அலுவல் ரீதியாக பேச நேர்ந்தது. நாற்பத்தைந்து நாவல்கள்! இந்திய மண்ணின் விதவிதமான முக அமைப்புகள் மற்றும் மொழிகள். (எனக்கு ஒரிய மொழியை பெயர்த்து சொன்ன அந்த ஒரியப் பெண் பேசிய சென்னை தமிழ் ஒரு இனிய அனுபவம்) தாய்லாந்தை தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது உடலை மூலதனமாக்கும் பெண்ணகளை வைத்திருப்பதில். உடலை மூலதனமாக்கும் முதலாளிகள் கணிசமானவர்கள் பெண்களே. இவர்களுக்கான அடியாட்கள் கூட சிலர் பெண்களாக இருக்கிறார்கள். அரசு இவர்களை விபச்சாரிகள் என்று சொல்லவேண்டாம் பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்று சொல்லுங்கள் என்கிறது. அவர்களை சம்பவ இடத்தில் கைது செய்தால் சிறைக்கு அனுப்பக்கூடாது. பாதுகாப்பு இல்லத்தில் அடைத்து அவர்களது ரத்த உறவினர்களுடன் நீதிமன்றம் மூலமாக அனுப்புகிறார்கள். நான் கவனித்த வரை புதிதாக இந்த பணிக்கு வருபவர்களிடம் குற்றவுணர்வு எதுவுமிருப்பதாக தெரியவில்லை. இது நல்லதா கெட்டதா என்று எனக்கு புரியவில்லை. நிறைய சிக்கல்கள். பெண் இனம் என்பது ஒற்றை உயிர் என்கிறார் குட்டி ரேவதி தனது தளத்தில். யாருக்கு என்கிற கேள்வி என்னை குடைகிறது. (ஒரு ஆணாக இதை சொல்லவில்லை என்பதையும் மனிதன் என்கிற விலாச பார்வையில் புரிதலை சொல்கிறேன் என்பதையும் தெளிவு செய்கிறேன்). வாழ்க்கை இங்கு ஆண், பெண் அல்லது இண் என்று பார்ப்பதில்லை. வாழ்வு என்பது ஒரு குரூர நிகழ்வுப்போக்கு அவ்வளவே.
*****************************************************
இன்று எனது துணையின் பிறந்த நாள்: லியோனார்ட் கோகனின் பாடலை நினைவு கூர்கிறேன்.


If you want a lover
I'll do anything you ask me to
And if you want another kind of love
I'll wear a mask for youIf you
want a partnerTake my hand
Or if you want to strike me down in anger
Here I stand
I'm your man

If you want a boxer
I will step into the ring for you
And if you want a doctor
I'll examine every inch of you
If you want a driver
Climb inside Or if
you want to take me for a ride
You know you can
I'm your man

Ah, the moon's too bright
The chain's too tight
The beast won't go to sleep
I've been running through these promises to
youThat I made and I could not keep
Ah but a man never got a woman back
Not by begging on his knees
Or I'd crawl to you baby
And I'd fall at your feet
And I'd howl at your beauty
Like a dog in heat
And I'd claw at your heart
And I'd tear at your sheet
I'd say please, pleaseI'm your man
And if you've got to sleep
A moment on the road
I will steer for you
And if you want to work the street alone
I'll disappear for you
Or only want to walk with me a whileAcross the sand
I'm your man


*************************

கோவிலுக்கு கூட்டிகிட்டு போ.. என்றாள். கோவிலுக்கு போகலாம் தப்பில்லை. நல்லதுதான்.. சாமிகிட்டதான் போககூடாது என்றேன்.! முறைப்பில் கண்டேன் கடவுளை..!

*************************

21 February, 2011

தீர்க்கிற தனிமை

வேனிலில் நிகழ்ந்தது வாதை

வானம் புத்தனைப் பொழிவது போல

மண்கீறி இருஇலைநீட்டிவெளியேறும் துரோகம்

போல. ஒரு சட்டத்தில் அடைக்கப்பட்ட

மலையடிப்புணலில் மிதக்கும் ஏழாம் நிலா போல

ஒன்றுமறியா குழந்தைபோல புன்னகைக்கும் தனிமைபோல ...

வாதை உருவாக்குகிறது ஒரு சொல்லை

மென்மயிர் பெண்ணின் குழிநாபி போல. மேய்ந்துறங்கும்

குதிரையின் மடுவீச்சம் போல. தொலைந்தலையும்

கிடைக்குட்டியின் தேடல் போல. சாவின்

கருணை நிறைந்த விழியீரம் போல..

சொல்லிலிருந்து பிறக்கிறது ஏதுமற்ற

மற்றொரு சொல். அர்த்தமில்லாமல்.

சொல்.

பிறகு அர்த்தமில்லாமல் போய்விடும்போது

பறவை கூடைகிறது சில தானிய மணிகளுடன் ...

தனிமை தன்தீரா பசிக்கு யாசிக்கிறது சொல்லை

அதற்காக நிலத்தில் அது தனது பாதத்தை

இருத்துகிறது. தனது நிழலை எனக்கு

திண்ணக்குடுக்கிறது.

பசியற்றுப்போய் விடுகிற துரோகத்தை

துணைக்கழைக்கிறேன்..எக்காளத்துடன்

குதூகலித்து என்னிடத்தில் அளிக்கிறது

நீண்ட நாளாய் மறைத்து வைத்திருந்த

குறுவாளை.

நான் குறுவாளை உபயோகிக்கிறேன். பீய்ச்சி

வழிகிறது சொற்கள்.

தின்று தீர்கிறது தனிமை.

**************

18 February, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் 1


ஒரு மொழிபெயர்ப்பு - கத்தியை நட்டுவைத்து அதன் மேல் உட்காரப்போகிறேன். என்ன நடக்குமென்று தெரியவில்லை. பார்க்கலாம்.
(Xiaolu Guo's Novel: Twenty Fragments of a Ravenous Youth) *********************************************************************************

பசித்த இளமையின் இருபது சுளைகள்


சுளை ஒன்று.
பென்பாங் - ன் குணஇயல்புகள், துண்டுக் காகிதத்தில் பதியபட்டவாறு..


இருபத்தியொரு வயதில் தொடங்கியது என் இளமை. குறைந்தது அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என முடிவுசெய்தேன். அந்த காலத்தில்தான் வாழ்கையின் பிரகாசமான விசயங்களில் சில எனக்கானதாக இருந்திருக்கக் கூடும். இளமை தொடங்குவதற்கு இருபத்தியொரு வயது என்பது சற்று தாமதம் என்று நினைப்பீர்களானால், யோசித்துப்பாருங்கள்.. குழந்தைப் பருவத்திலிருந்து நேரடியாக மத்தியப் பருவத்திற்கு தாவிய ஒரு சராசரி சீன விவசாயப் பெண்ணை. எதை நான் தவறவிட்டிருக்கக் கூடும் எனது தொடக்க வயதுகளைத் தவிர. நான் திட்டமிட்டிருந்தேன்: இளமையுடன் இரு இல்லாவிட்டால் இற.
நான் அறியாமைவாய்ந்த நாட்டுபுற பெண்ணாயிருந்தேன். நிலத்தில் சீனிக்கிழங்குகளை தோண்டுவது அல்லது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது அல்லது தொழிற்கூடங்களில் லீவர்களை இழுப்பது போன்ற வேலைகள் தவிர வேறொன்றும் தெரியாது . இருபத்தியொரு வயதில் நான் பூர்த்தி செய்த ஒரு விண்ணப்ப படிவம் என் வாழ்கையை மாற்றியது. இருக்கட்டும் அப்போது நான் பீஜிங் கிற்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தன.. ஆனாலும் இன்னும் நான் விவசாயப் பெண்ணாகவே இருந்தேன்.
ஒரு வெப்பம் மிகுந்த மதியப் பொழுதில் 'பீஜிங் பிலிம் ஸ்டுடியோ' வேலைவாய்ப்பு வளாகத்தில் அந்த முக்கியமான நிலைமாற்றம் நடந்தது. வளாகத்தின் சுவர்களில் இன்னும் அழுக்கு படிந்த நிலையில் "மக்களுக்கு சேவை செய்யுங்கள்" என்கிற மாவோவின் வாசகங்கள் தெரிந்தன. உணவுப் பாத்திரத்தினருகில் சிதறிய நூடுல்ஸ் மீதங்கள் மீது பச்சைத் தலை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதற்கு பின்னால் ஒரு நாற்காலியில் ஒருவன் ஒரு மந்த தூக்கத்தில் அமர்ந்து இருந்தான். அவன் உதிரி நடிகர்களின் மேற்பார்வையாலனாக இருக்கவேண்டும். அந்த நிலை அவனை மிகவும் பாதிப்புற செய்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையாக தெரிந்தது. எங்கள் மீது அவனுக்கு எந்த கவனமும் இல்லை. அங்கு நாங்களும் ஈக்கள் போலவே இருந்தோம்.
என்னைத்தவிர அங்கு மூன்று பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் பதற்றப் படுபவர்கள் போலில்லை. சாயம்பூசிய கூந்தல், பச்சை குத்தப்பட்ட தோள்கள், போலி தோல்பைகள், துளையிடப்பட்ட ஜீன்ஸ்சுகள் போன்று அவர்களிடம் இன்னும் நிறைய இருந்தாலும் உள்ளில் அவர்கள் என்போலவே மரநிற சருமம் கொண்ட, மஞ்சள் புழுதி படிந்த மாகாணத்திலிருந்து வந்த விவசாயப்பெண்களே.

மேசையிலிருந்து பேனாவை எடுத்தேன். ஹீரோ பேனா. பழைய கம்யூனிய வாதிகள் இன்னும் இந்த ஹீரோ பேனாவைத்தான் உபயோகிக்கிறார்கள். பயன்பாடுகள் ஏதுமற்ற அவர்களை நான் ஒரு போதும் விரும்பியது இல்லை. நான் எழுதத்தொடங்கியதும் பேனாவிலிருந்து மை கசிந்து எனது உள்ளங்கையையும் விண்ணப்ப படிவத்தையும் கரையாகியது. கரை படிந்த உள்ளங்கை உள்ளங்கை வீட்டிற்கு தீவைக்கும் என்று எனது அம்மா சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நான் கரை படிந்த உள்ளங்கைக்கும் எனது வரப்போகிற துரதிஷ்டத்துக்கும் சேர்த்து வருத்தப்பட்டேன்.

அந்த அலுவலக வளாகம் முழுவதும் விண்ணப்ப படிவங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தரையிலிருந்து கூரை வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தூசுகள் பால்வீதியில் அலைவது போல வளாகத்தில் மிதந்தலைந்து கொண்டிருந்தது. விண்ணப்பத்தின் வலது மேல் முனையில் எனது புகைப்படத்தை ஓட்டினேன்.

*************************************************************************************

பீஜிங் பிலிம் ஸ்டுடியோ - உதிரிகள் சேர்க்கை படிவம்



  1. பெயர் - பென்பாங் வாங்

  2. பாலினம் - பெண் பால்

  3. பிறந்த தேதி - 1980

  4. பறந்த இடம் - இஞ்சி மலை கிராமம், மஞ்சள் பாறை தாலுகா, சிஜாங் மாகாணம்

  5. பெற்றோர் சமூக நிலை - உழவு, கம்யூனிசம் அல்லாதவர்.

  6. படிப்பு - நடுநிலை படிப்பு பட்டம்.

  7. உயரம் - 168 Cm

  8. மார்பு சுற்றளவு - 85 Cm

  9. மேலுடை சுற்றளவு - 69Cm

  10. கீழிடை சுற்றளவு - 90 Cm

  11. குருதிப் பிரிவு - ஆ

  12. ராசி - குரங்கு

  13. நட்சத்திரம் - தேள்

  14. ஆளுமை - வளைந்து போகும் தன்மையில் வெளிநிலையிலும் உள்நிலையிலும் பணி புரிதல், வெளிப்படையாகவோ அல்லது கூச்ச சுபாவத்துடனோ.
  15. தொடர்பான அனுபவங்கள் - 'தின மக்கள்' விடுதியில் துப்புரவாளர், தொழிற்கூட பணி, யங் பயனீர் திரையரங்கத்தில் இருக்கைகள் பரிசோதிக்கும் பணி.
  16. தனி திறமை - தட்டச்சு இரண்டாம் நிலை ஆங்கிலம், தொழிற்கூடங்களில் தகர டப்பாக்களை தயாரிப்பது (நாற்பத்தியைந்து வினாடிகளில் ஐந்து டப்பாக்கள்)
  17. அளவீடுகள் - ஏதுமில்லை.
  18. பொழுதுபோக்கு - சினிமா பார்ப்பது, முக்கியமாக அமெரிக்க ஆங்கில படங்கள், மேற்கிலிருந்து மொழிபெயர்க்கப் படும் நாவல்களைப் படிப்பது.

*************************************************************************************

புகைப்படத்தை ஒட்டிய போது மந்தமாக தூங்கிக்கொண்டிருந்த நாற்காலிக்காரன் எழுந்தவுடன் நேராக சென்று ஒரு மின்சார ஈ ஓட்டியை எடுத்து வந்து தனது உணவு டப்பாவினருகில் ரீங்கரித்துக்கொண்டிருந்த ஈக்களை பார்த்து வீசினான். பாம்.. முதல் வீசில் ஒரு ஈ. பாம்.. ரெண்டாவது வீசில் ஒரு ஈ. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த மூன்று பெண்களும் அந்த திடீர் வன்முறையை பயந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் மறுபடியும் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவன் முன்னாள் இருந்த மேசையில் இரண்டு இறந்த உடல்கள் கிடந்தன.

நான் விண்ணப்ப பணம் பதினைந்து யுவானை கொடுத்தேன். தொடர்ந்து என்னை கவனிக்காமல் அவன் அந்த படிவத்தை வாங்கிக்கொண்டு இடுப்பில் கட்டியிருந்த வாரில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து முன்னாள் குனிந்து அந்த பழைய மேசை இழுவையை திறந்தான். உள்ளே இருந்து ரப்பர் ஸ்டாம்ப்பை எடுத்து சில எண்களைத் திருத்தி எனது படிவத்தில் குத்தினான். உதிரி 6787 . ஆக நான் பீஜிங்கின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையில் வேலை வேண்டுவோரில் ஆறாயிரத்து எழுநூத்து எம்பத்து ஏழாவது ஆளாய் இருந்தேன். எனக்கு முன்னால் இளமை-அழகுமாய் அல்லது முதிய - அசிங்கமானதுமாய் 6786 பேர்கள் இருந்தார்கள். நினைத்துப்பார்த்தேன், சீன மக்கள் தொகையில் (ஒன்றரை பில்லியன்) இந்த எண்ணிக்கை ஒன்றும் பெரிதில்லைதான்.. எனது கிராமத்து மக்கள் தொகை அளவுதான்.. இந்த கிராமத்தை ஆளும் ஒரு பேரவா எனக்குள் எழுந்தது.

இன்னும் என்னை நேராய் பார்க்காமல் மைக்கரை படிந்த படிவத்தில் எனது புகைப்படத்தை பார்த்த ஈயோட்டி சொன்னான் ;

"பாதகமில்லை சிறுபெண்ணே..உனது முகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிட்டுப்பார்க்க உனது நெற்றி சற்று வித்தியாசமாய் இருக்கிறது.. அது தியானமென் சதுக்கம் மாதிரி அகண்டு.. பிறகு உன் தாடை.. அதுவும் பரவாயில்லை.. நம்பு என்னை .. அது உனக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் .. சதுர தாடை நல்லது செய்யும்.. அதுபோலவே காத்து மடல்களும் தடிமனாக - புத்தனுக்கு இருப்பது போல - எவ்வளவு தடிமனோ அவ்வளவு அதிர்ஷ்டம்.. தெரியுமா.. ம்ம்ம் .. நீயொன்றும் அவ்வளவு அசிங்கமில்லை.. இங்கே வரும் அசிங்கமானவர்களின் எண்ணிக்கையை உன்னால் கற்பனை கூட செய்ய முடியாது.. அவர்கள் தங்களை கண்ணாடியில் பார்ப்பார்களா என்று கூட எனக்கு தெரியவில்லை.. "

நான் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு மற்ற மூன்று பெண்களுக்கும் வழிவிட்டு அவனிடம் நன்றி சொல்லி வெளியில் வந்து தெருவில் நடக்கத்தொடங்கினேன். மதிய நேர காட்டமான வெயில் எனது தலைமுடியை பொசுக்கத்தொடங்கியது. கடும் வெப்பம் கான்க்ரீட் நடைமேடை லிருந்து கிளம்பிப்பரவியது. வெப்பம் மிகுந்த அந்த சந்தடி நிரம்பிய தெருவில் ஏறக்குறைய மயங்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன். நிஜமாவே நான் மயங்கி விழுந்திருக்கலாம்.. நினைவில்லை. ஆனால் அன்றைய முக்கியம் எனக்கு என்னவென்றால், எனக்கென ஒரு எண் ஒதுக்கப்பட்டது. அந்த நாளிலிருந்து நான் ஒருபோதும் கரிய மண்ணுக்கடியில் மறந்து விடப்பட்ட சீனிக்கிழங்கு போல வாழமாட்டேன் என தீர்மானித்தேன்.

*******

தொடரும் ...

*********

17 February, 2011

towards f word...

லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவும் மினர்வா @ பிரியா தம்பியின் பதிவும் ஒரே நேரத்தில் படித்தது எனக்கு இருவிதமான மனவுணர்வுகளைஏற்படுத்தின.. முதலாவது கையாலாகாத்தனத்தின் கழிவிரக்கச் சோர்வு நிலை.. இரண்டாவது பாலைவெயில்தரும் எரிச்சல்.. (பிரியாவின் 'ஷோபா மற்றும் ம க இ க பற்றிய குறிப்புகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அது நல்ல பதிவாக அறியபட்டிருக்க வாய்ப்புண்டு..!). முகப்புத்தகம் எனக்கு ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் சாயலை அளித்துக்கொண்டிருந்தது அனால் இப்போது மெகா சீரியல் போல தெரிகிறது.. ஆண்களும் பெண்களும் மாற்றி மாற்றி கருத்துகளையும் விமர்சனங்களையும் எழுதிக்குவித்து கொண்டிருக்கிறோம்.. "எதுக்காக...... எல்லாம் எதுக்காக.. உடலும் உடலும் ஒட்டியிருக்கணும் அதுக்காக .." என்று சந்திரபாபுவின் குரலில் பாடவேண்டும் போல இருக்கிறது.. சமுதாயப்பணி, களசேவை, ஆழ உரையாடல்கள், உடல்மொழி, தேசம், சர்வதேசம், ஆணாதிக்கம், பெண்ணியம், அரசு, வக்கிர செயல்பாடுகள், உலகமயம், உலகாய்தம், தனிமனித சுதந்திரம், பால் நிலை கடந்த அன்பு இன்னும் .. இன்னும் எத்தைனையோ மனித விருப்பங்கள்.. எல்லாம் ........ எதுக்காக கண்ணே எதுக்காக ... to fuck off or to be fuked up..?

01 February, 2011

மூன்று முட்டாள் தருணங்கள்

1
14.09.2010 - 29.01.2011 - நாலரை மாத சென்னை வாழ்வு முடிவுக்கு வருகிறது நண்பர்களே.. பெரிதான மாற்றமேதுமில்லை. கிடைத்த அனுபவங்கள் எதிர்பாராதது. எப்பவும் போல சென்னை என்னை மிகுந்த சுனக்கத்துடனே அனுப்புகிறது.. இனிமே இந்த ஊருபக்கமே வரக்கூடாது என்கிற எண்ணம் புதிதாய் சோரம் போகிற ஆண் மனம் போல கிடந்தது குமுறுகிறது. சென்னையில் எனது அனுபவங்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். எனது வேலைத் தளம் அடுத்தவாரத்திலிருந்து திண்டுக்கல்.. !
****************
2
'fish that fake orgasm' என்கிற நூலைப் படித்துவருகிறேன். மிருகங்களின் வினோத பழக்கவழகங்களை பற்றிய குறிப்பு நூலது. மேசையில் கிடந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு orgasm - அப்படினா என்னப்பா என்று கேட்டான் மகன். லேசான தடுமாற்றத்துடன் அப்படினா glad ன்னு அர்த்தம்டா.. என்றேன். யாரிடம் போய் I am very glad - என்பதற்கு பதிலாக - I am very orgasm - என்று சொல்லப்போகிறான் தெரியவில்லை..! அப்பனுகளுக்கு வர சோதனைகள்தான் எத்தனையெத்தனை..!!
*****************
3
தேர்தல் காலம். மலடாக்கப்பட்ட மனித மனம் பற்றி புரியாமல் மக்கள் தங்களை ஆளுவதற்கு சில மனிதர்களை தேர்தெடுக்கும் வைபவம். உண்மை என்று இங்கு எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் வாய்மையே..! ஆம்.. வாய்..மை தான் வெல்லும்! தமிழ் சொற்களுக்கு பூடகமில்லை. இந்த வாய் மற்றும் மை சேர்ந்தால் கிடைக்கும் அதிகாரம் என்பது பணங்காய்ச்சி மரம் அல்ல தோப்பு.. ஆளாளுக்கு ஒரு மரத்தை சுவிசில் நட்டிருக்கிறார்கள்..! நாம் இங்கு தண்ணீர் ஊற்ற ஊற்ற மரம் பிச்சுகிட்டு வளரும்.. ! எனவே மக்களே நமது வாக்கு வாளியில் நமது வாழ்வெனும் நீரை நிரப்புவோம் .. ஊற்றுவோம்.. வளரட்டும் அவர்களது தலைமுறைகள்.. நாம் தெருவோரம் நின்று பஞ்சு மிட்டாய் காரனுடன் வியாபாரம் பேசுவோம்.
***********************

26 January, 2011

கனவு தின்பவன்

எல்லாம் கிடைத்துவிடுகிறது
நொடிகளுக்குள்

ஒரு தீவு
பசிய ஒளியுடன் ஆம்பர் மணக்கும்
குளிர் மரங்கள்

ஆழ்கடல் கூட்டிச்செல்லும்
குட்டிதிமிங்கலம் பேசும்
நீலச்சுடர் கடல் கதைகள்

நிகழ்த்திய சாகசங்களுக்கு கிடைக்கும்
முடிவுறா கன்னி முத்தம்

ஒரு நாடு அல்லது இருக்கும் நாட்டின்
நிரந்தர அமைதியும் இனிய மாலை
ரோஜாக்காடுகளுக்குள் புணர்ந்து கொழிக்கும்
மனிதர்களும் தடைச்சான்றுகளை
கூளங்கலாக்கி எரித்துகுளிர்காய
மக்கள்களை அழைக்கும் மென்னரசு


எதைக்கேட்டாலும் தரும்
சக்தி கொண்ட
ஒரு கடவுள் அதனிடம்
ஒன்றும் வேண்டாம் என
அடம்பிடிக்கும் குழந்தை

புகையிலை மணக்கும் ஈரப்பெண்
நட்சத்திரங்களை கடக்கும்
அவளுடனான நீண்ட பயணம்

இன்னும்
இன்னும்

நிறைய கிடைக்கும் நொடிகளில்
நிறுத்தத்தில் எரியும் சிவப்பு விளக்கு
மாறும் வரை.

25 January, 2011

சொற்குருகு

தானம் பெற்ற விளைநிலங்களில் சற்று ஈரம் செய்ய நாம் முடிவுசெய்தோம் திருவாசகா.. பின் கருவிகள் கொண்டு அறுவடைக்காலம் வரை காத்திருந்தோம். இல்குருகு கூவித் தொடங்கிய வசந்தம் கழிய வரக்காணோம் அக்காலம்.. துண்டு மேகம் ஒரு பிடி நீரை தெளித்தபோது நாம் நினைத்தோம் புதுவுலகின் தண்சிசு ஜனிக்குமென.. மண் கிளறினாய் திரு வாசகா நானும் சேர்ந்துகொண்டேன் உன்னுடன்.. புழுக்கள் ஊதிபெருக்க பொங்கியநிலம் பூப்படைந்தது.. விதைப்பின் காலமென நெகிழ்மனத்தில் சற்று நொதிநீர் ஊற்றினோம்.. பின் நீர் பொழிந்த மேகமேறி நான் சென்றேன் பூர்வ விதை வாங்க.. வருகையில் நிலம் மலர்த்தியிருந்தது ஓராயிரம் வார்த்தைப் பூக்களை.. நிதானமாய் சொன்னாய் என்னை விதைத்தேன் விளைந்தது வார்த்தைகளென.. நான் விழுங்கிய விதை பூக்கிறது மௌனமாய்..

அறுவடைகருவிகள் வேடிக்கைப் பார்க்க உதிர்த்து வாடுகிறது மூப்பிப் பழுத்த விளை சொற்கள்.. திரு வாசகா வா கடல் நீர் குடிப்போம்.

09 January, 2011

a day with 'shoba open'



ஒரு இனிமையான நிகழ்வை எப்படி விளக்கி எழுதுவது. பனியூசியால் இதயத்தை குத்துகிற ஒரு சோக நிகழ்வை எப்படி விளங்கிக்கொள்வது. இன்று நாள் முழுவதுமான இனிய நிகழ்வு வாய்த்தது. இதயம் கிழிக்கிற ஒரு சோகத்துடன் நிறைவுக்கு வந்தது.

முதலிவாக்கத்தில் திரு ஜேசுதாசன் வீட்டில் இன்று மதிய உணவு. கடல் பிராணிகளின் கூட்டம் தட்டுகளில் நிரம்பிக்கிடந்தன. பனங்கிழங்கு மாவில் செய்யப்பட்ட இலங்கைத்தமிழர்களின் பிரத்தியேகமான கூழ் இதில் பிரதானம். எழுபத்து நாலு வயது அப்பாவும் அறுபத்து எட்டு வயது அம்மாவும் பாட்டுப்பாடி ஒரே அமர்க்களம். உற்சாகத்தில் நானே சில வரிகளைப் பாடுகிற அளவிற்கு நிலைமை மோசமாகப்போய்விட்டது! கைகுத்தல் அரிசிச்சோறு, மீன் குழம்பு, கணவாய் சாப்ஸ், நண்டும் இறாலும் கலந்த கூழ். வயிறு முட்ட பார்லி நீர்! சிரிக்க சிரிக்க கடந்த கால நினைவுகளை அள்ளி தெளித்த தம்பதிகள். அம்மாவின் பாட்டு அய்யாவின் எதிர் பாட்டு களைகட்ட கவின்மலரின் இனிய குரலில் சில பாட்டு. இந்த இனிய பகலை எனக்களித்த ஷோபாசக்தி, காந்திராஜன், மணிவண்ணன், சுந்தர், சந்திரா, கவின் அனைவருக்கும் நன்றி. விருந்தோம்பலில் நெகிழ்திவிட்ட இனிய தம்பதிகள் ஷோபாசக்தியின் பெற்றோர்!


அப்புறம் shoba open என்றால் சிகரட் லைட்டரின் துணை கொண்டு பீர் பாட்டிலின் மூடியை சிறு சொடுக்கில் ஒரு இனிய சத்தத்துடன் திறக்கும் நுட்பம். நானும் மணிவண்ணனும் சிறு முயற்சிக்குப் பின் அந்த நுட்பத்தை கற்றுக்கொண்டோம். பாருங்கள் அதற்கு மட்டும் எங்களுக்கு ஆறு பாட்டில்கள் தேவைப்பட்டன!

******************************
மாலை ஞானியின் 'கேணி'. இசை விமர்சகர் திரு மம்மதுவின் பேச்சை கேட்க முடியாமல் தாமதித்து போனேன். இசைக்கலைஞர் அகிலாவின் தமிழிசை பாடல்கள். பன்னீர் குரல். இசையின் நுணுக்கங்கள் தெரியாவிட்டால் என்ன.. இதுபோன்ற பாடல்கள் உயிர் வளர்க்கும். மம்மது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சுவாரஷ்யமானவை. அவர் பதில்களும். அவர் மொத்தத்தில் சொன்னது 'மனிதன் சந்தோசத்தை வாழ்ந்து தீர்த்து விடுகிறான்.. சோகத்தை கலையாக்கி விடுகிறான் .. கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அநேகமாமாக (almost all) சோகமாகத்தான் அதன் மையம் இருக்கும்'. தீவிர யோசிப்பில் அது உண்மை என்றே படுகிறது.
*******************

book fair ! மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள் புத்தகத்தை வாங்குகிறார்கள். எல்லோரும் படிப்பார்கள் போல. ஆனால் போர்வையைப் போர்த்திக்கொண்டு நிம்மதியாய் தூங்கிப்போகிறவர்களுக்கு இந்த புத்தகத்தால் என்ன பயன் என்று தெரியவில்லை. சாகித்திய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அண்ணாச்சி புத்தகங்கள் விற்று தீர்த்தது சந்தோசம். புத்தகம் பதிப்பித்து பன்னிரண்டு வருடங்களுக்கு பின் அதன் முதல் பிரதி நேற்று விற்பனை ஆனது. புத்தகத்தின் பெயர் 'அம்மாவின் அத்தை' ஆசிரியர் சச்சிதானந்தம். பதிப்பாளர் அண்ணன் வசந்தகுமார் (தமிழினி).

******************

போன வாரம் லீனாவின் 'செங்கடல்' முன்னோட்ட காட்சி பார்த்தேன். லீனாவின் drama தவிர்த்துப் பார்க்கையில் நன்றாக இருந்தது. தமிழக சென்சார் இப்படத்தை நிராகரித்து இருக்கிறது. மேல்முறையீடில் படம் pass ஆக வாழ்த்துக்கள்.

************
நாளின் முடிவு சோகமானது. அது என்னுள் புதையட்டும். ஒரு வேளை அது கலையாகக்கூடும்.
******************