24 May, 2011

மற்றொரு கல்.




நகம் கடித்துகொண்டிருந்தவனிடம்


அரும்பியது காதல்


காம்பின் குறுகுறுப்பை மறைக்க


உதடு கடிக்கையில் உணர்ந்தேன்


குருதியின் முதல் சுவையை


அடுக்கி வைக்கப்பட்ட


நேர்த்தியான புத்தகங்களில்


அற்ற சொற்களை உடலெங்கும்


ஊரசெய்தான்


விடியலின் தூரத்தில் வெடித்த


வெடிகளின் சத்தத்தில்


உடம்பில் பூத்தன நீலம்..





குளமென மாறிய எனதுள்

அவன் எறிந்தது மரணத்துக்கான ...




23 May, 2011

கித்தான் கோமாளி


ஓவியனும் சிற்பியும் கவிஞனுமான மனப்போக்கை கொண்ட பேய்காமனின் நிகழ்த்து கலை ஆர்வத்தில் உருவான கனவுக் கடவுளும் வளவிக் கிழவிகளும் என்று தலைப்பிட்ட கூத்து பாதி நாடகம் பாதி நிகழ்த்து கலை தன்னளவில் முழுமையாய் வெளிப்பட்டிருந்தது நேற்று மாலை தேனி முல்லை நகரில். நேரடியான எளிய கதைத்தளம் கொண்ட ஒல்லிக் கோமாளி குண்டுக்கோமாளி வாய்மொழியாக நிகழ்வு விரிகிறது. தூக்கக் கடவுள் பொம்மைக் கிழவிகளை செய்கிறார். பிறகு தூங்கிவிடுகிறார். கிழவிகளுக்கு பசிக்கிறது. கடவுளிடம் முறையிட அவர்களுக்கு வளவிகளை உருவாக்குகிறார். மீண்டும் தூங்குகிறார். வளவிகளை கதைகளை தேடும் பொம்மை பொடியன்களுக்கு விற்று பழங்களையும் தானியங்களையும் பெற்று மகிழ்கின்றனர் கிழவிகள். வளவிகள் மூலம் கதைப்பாடல் பெற்று மகிழ்கின்றனர் பொடியன்கள். தூக்கத்தில் வளவிகளை உடைக்கிறார் கடவுள். பொடியன்களின் சாபத்தில் கல்லாகிறார் கடவுள் நிரந்தரமாக.


நிகழ்த்துகலையின் உபகரணங்கள் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தன. குறைந்த கால அளவில் பையன்களை சரளமான நடிப்புக்கு தயார் படுத்தியிருந்தது பேய்காமனின் சாதனை. ஒரு ஆரம்ப கால நிகழ்த்துகலை இயக்குனனாக பேய்காமனிடம் அளப்பரிய சாத்தியப்பாடுகள் இருப்பதை இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. நாடக அறிவு சிறிதும் இல்லாத அதன் பாலான பெரும் ஆர்வம் ஒன்றும் அதிகம் இல்லாத எனக்கு அவனிடம் ஏற்படுகிற சிறு பொறாமையுணர்வு அந்த நிகழ்த்துகலையின் வெற்றியாக நான் கருத்துகிறேன்.

22 May, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 1

துயர் மிகுந்த நிலவொன்றை
குடிக்கிறான் ததாகன் தன் விரல்களில் முளைக்கத்தொடங்கும் வேர்களை மறைக்கவொன்னாமல். தன்னிடம்
உதிர்ந்த சொல் ஒன்று பச்சையமாய்
படரும் உடலை என்ன செய்வதென்று
அறியாமல் அவன் விழுங்கும் பாழ்
வெளிச்சம் பழுப்பேற்றுகிறது முகத்தை
சலிப்பேறிய இச்சையுடன் பத்மத்திலமரும்
அவனது ப்ருஷ்டதிலிருந்து நிலம்
துளைக்கிறது முதல் வேர். சொற்களற்ற
கணத்தில் தத்துவம் அவனை மரமாக்குகிறது
நிதானமாய் வளரத்தொடங்கிய விருட்சத்தில்
மறைகிறது பேராசை கொண்ட உடல்
காலத்தின் அடர்த்தியை சூழ் கொள்கிறது
பெருவிருட்சதின் மடி
பின் தினமந்தியில் வரும் மரங்கொத்தியை
அதன் அலகின் கொத்தலில் எழும் ஒலியை
யசோதரையின் முத்த சாயலை
துரோகமாக்கி
இடது கையில் மறைத்து
வலதுகை ஆள்காட்டி விரலை
பூமியில் புதைக்கிறான்

விளைகிறது நிழல் வண்ண ஞானம்.....

04 May, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் 2b


சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான செம்பாலத்தின் படத்தை கொண்ட ஒரு நாள்காட்டியும் பழைய வகையான - மணிக்கொருதரம் ஒரு மரங்கொத்தி தனது அலகால் தட்டி ஒலி எழுப்புவதுபோன்ற - கடிகாரமும் சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்தன. மேசையில் ஒரு கோப்பை நிறைய பச்சை தேநீர் இருந்தது. கோப்பையை தொட்டேன். அது இன்னும் தனது உஷ்ணத்தை இழக்கவில்லை. அடுப்பில் கரி கங்குத்துண்டுகளாய் புகைந்து கொண்டிருந்தது. அறையில் இரண்டு மெத்தைகள் இருந்தன. ஒன்று அகலமாகவும் மற்றொன்று சற்று குறுகியும் இருந்தது. குறுகிய மேத்தைமேன் பூப்போட்ட பாவாடை ஒன்று கிடந்தது. மகளுடையது. நான் குறுகிய மெத்தையை தேர்ந்தெடுத்தேன். அதில் படுத்துக்கொண்டு துருபிடித்த மேல் சுவரை பார்த்தேன். கடந்த சில மணிநேரங்களை பற்றி யோசித்தேன். எதிலும் அக்கறை செலுத்த முடியாதளவுக்கு அலுப்பாய் உணர்ந்தேன். மேலும் கடும் குளிராகவும் இருந்தது.. வானத்திலிருக்கும் முறையில்லாமல் பிறந்த கடவுளே.. நான் ஈரமான மேல்சுவர் போன்ற கடும் குளிரை உணர்ந்தேன்.


ஒரு முழு மாதம் கடந்தபின்னும் யாரும் வரவில்லை. யாருமற்ற அவ்வீட்டிற்கு வருகைதரும் ஒரே ஆள் நானாகத்தான் இருந்தேன். தினமும் இரவில் செலவில்லாமல் அங்கு உறங்கினேன். மாத முடிவில் எனக்கொரு வேலையும் தங்குவதற்கு புதிய இடமும் கிடைத்தன.


இஞ்சி மலையை விட்டு வெளியேறி எனது வலது காலை வைத்தவுடன் எனது இடதுகாலும் என்னுடன் இணைந்து கொண்டது. நாலு வருஷம் ஆகிப்போனது. இந்த நாலு வருடங்களில் கிட்டங்கியின் இருள்மூலையில் மறந்து விடப்பட்ட உதிரி நாற்காலி போல இருந்தேன். பீஜிங் - ல் எனக்கு முதலில் கிடைத்த வேலை தினசரி மக்கள் விடுதியில் துப்புரவு பணி. வரண்டாவையும் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அறைகளை சுத்தம் செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை. நான்கு துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து எனக்கு ஒரு படுக்கையை ஒதுக்கியிருந்தார்கள். ஏறக்குறைய ஒரு வருடம் அந்த வேலையில் ஒட்டியிருந்தேன். பிறகு பிளாஸ்டிக் துப்பாகிகளையும் விமானங்களையும் தயாரிக்கும் அரசு பொம்மை தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் பெண்கள் பணி புந்தார்கள். அந்த கூட்டத்தில் ஏற்படும் சத்தைதையும் அறைகளில் வெளியேறும் கழிவு வாடையையும் என்னால் அதிக காலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. நான் அந்த வேலையையும் விட்டொழித்தேன். அன்றிலிருந்து பலவிதமான வேலைகள் செய்தேன். தகர பாத்திரம் செய்யும் தொழிற்சாலையில் அதன் இயந்திரத்தை கண்காணிக்கும் வேலையும் அதிலொன்றாய் இருந்தது. கடைசியாக நான் ஒரு வேலையில் சேர்ந்தேன். திரையரங்கத்தில் துப்பரவு செய்யும் பணி. 'இளம் முன்னோடிகள்' என்ற அந்த திரையரங்கில் பெயருக்கு ஏற்ற மாதிரி அல்லாமல் சீன தற்காப்புக் கலை சினிமாக்களையே ஓட்டினார்கள். துறவிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்கிற வகையான திரைப்படங்கள் அவை. படம் முடிந்த ஒவ்வொரு தடவையும் அரங்கினுள் சிதறிக்கிடக்கும் கரும்பு சக்கைகள், பாதி தின்ற கோழிக்கால்கள், நிலக்கடலை தொலிகள், பழ விதைகள் மற்றும் பலவகையான கழிவுகளை - சில நேரங்களில் வேகவைத்த தவளைகள் கூட - கூட்டி துடைக்கவேண்டும். இருந்தாலும் எனக்கு இந்த வேலை பிடிக்க தொடங்கியிருந்தது. ப்ரொஜெக்டர் அறையில் கிடந்த ஒரு உடைந்த மேசையில் படுத்துக்கொள்வேன். தினமும் சினிமா பார்ப்பதும் மக்கள் மறந்து விட்டு செல்லும் பொருட்களை வைத்துக்கொள்வதும் இந்த வேலையில் எனக்கு கிடைத்த கூடுதல் விஷயங்கள். ஒரு நாள் நான் ஆங்கில அகராதியை கண்டெடுத்தேன். கொந்தளிப்பான கண்டுபிடிப்பு அது. ஒரு ஷாங்கை மாணவன் - பெயர் நினைவில்லை - அகராதி முழுவதையும் மனப்பாடமாக ஒப்புவித்து ஹார்வர்ட் பலகலைகழகத்தில் இடம் பிடித்தது ஞாபகத்திற்கு வந்தது.. யார்கண்டது இந்த அகராதி எனக்கும் அந்த உலகத்திற்கு செல்ல வைக்கும் ஒரு கடவுச்சீட்டாக இருக்கக்கூடும்தானே.. போகட்டும் நான் அதிலிருந்து வார்த்தைகளை படிக்கத்தொடங்கினேன். சொல்கிற அளவுக்கு அதைப்படிப்பது சிரமமாக இருக்கவில்லை என்றாலும் படிப்பது எனக்கு அலுப்பை வரவழைத்தது. அதை படிப்பதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும் என்னால் அரங்கத்திற்கு வரும் வெளிநாட்டு நபர்களுடன் சில வார்த்தைகள் பேச அது எனக்கு உதவியது. எனக்கு அந்த திரையரங்கம் வாழ்வதற்கு உகந்த இடமாக பட்டது. எனக்கு கிடைத்த உபரி பணத்தைஎல்லாம் சினிமா பத்திரிக்கைகள் வாங்கவும் வேறு அரங்குகளுக்கு சென்று புதிய சினிமாக்களை பார்க்கவும் செலவு செய்தேன்.


அந்த நாட்களில் எனக்கு ஒரு முக்கிய அனுபவம் நிகழ்ந்தது. நான் ஒரு திரைப்பட உதவி இயக்குனரை சந்தித்தேன். அரங்கினுள் தொலைந்து போன குடையை கண்டுபிடிக்க உதவினேன். அவனது தோழி, ஷேன்சன் என்கிற ஊருக்கு போய்விட்டதாகவும் அவள் போகும் போது அந்த குடையை பரிசாக தந்து சென்றாள் என்றும் சொன்னான். அந்த குடை அவளது பிரிவின் பரிசு அதனால் வியப்பொன்றும் எனக்கு ஏற்படவில்லை. அவளைப்பற்றி பேசும்போது அவனது குரல் துயரத்தில் தோய்ந்திருந்தது. பென்சில் போல ஒல்லியாகவும் மிலிடரி கட் முடியலங்காரமும் சந்தையில் கிடைக்கக்கூடிய மலிவான சிவப்புநிற வி கழுத்து விவசாயிகள் அணியும் ச்வட்டரை அணிந்திருந்த அந்த சோகமான குடை மனிதனுக்கு எனது தொலைபேசி எண்ணை எதற்காககொடுத்தேன் என்று விளங்கவில்லை. அதற்காக நான் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ள வில்லை. அவன் வேலை பார்த்த படங்களின் நடிகர்களை - காங் லி, சங் எமோவ், சென் கைஜ் - எனக்கு பிடித்தமானவர்களும் கூட - பற்றி பேசிக்கொண்டிருந்தான். மேலும் அவன் பார்பதற்கு திருடனைப் போலவோ அல்லது பொய் சொல்பவனைப் போலவோ தெரியவில்லை. நான் அவனிடம் எனது அடையாள, அரங்க, கைபேசி, தொலைபேசி, எனது அடுத்தவீட்டு மனிதரின் எண்களை சொன்னேன். அதை வாங்கிக்கொண்டு ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பீஜிங் பிலிம் ஸ்டுடியோ விற்கு போகுமாறு சொன்னான்.

ஒன்றுக்கும் உதவாத பழைய குடையை அவனிடம் திரும்ப கொடுத்த ஒரு மாதத்திற்கு பிறகு நான் பீஜிங் பிலிம் ஸ்டூடியோவில் ஒரு உதிரி நடிகையாக நாளொன்றுக்கு இருபது யோன் சம்பாதிக்கத்தொடங்கினேன். ஒரு குடை எனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சாவியாக இருக்கும் என்று யார் கண்டது..?


**************


03 May, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் - 2 a



சுளை இரண்டு:


பென் பாங் மூர்கமானதும் தனது வேர்களை பீஜிங் -ல் பரப்பியதும் ....






சில்லுனு ஒரு கேன் கோக்கை குடிப்பதையே பெருசுன்னு நெனச்சிருந்த காலம். பதினேழு வயசு. வீட்ட விட்டு வந்து பீஜிங் - ல என்னோட முதல் இரவு. என்னோட பெட்டிய இழுத்துகிட்டு விடுதி விடுதியா ஏறி எறங்குறேன்.. எனக்கு தெரியும் விவசாயிகளுக்கு தங்க இடம் கிடைக்காதுன்னு.. எங்கிட்ட நிறைய பணமிருந்தாலும்.. என் முகத்தை பார்க்கும் ஒவ்வொரு காவலாளியும் .. விவசாய பெண்ணே.. உனக்கு இங்க என்ன வேலை.. என்பதுமாதிரிதான் பாக்கிறாங்க. என்ன பாத்ததும் அந்த தேவிடியா பசங்க அப்படிதான் நினைக்கிறாங்க. நான் ஒரு குறைஞ்ச வாடகை அறையை எடுப்பதானால் நிலவறைகளை தான் எடுக்கணும்.. பீஜிங் - ல அதுதான் குறைவு.. அது எனக்கு பிடிக்கல. இந்த நகரம் முரட்டுத்தனமான புது உலகம்..இரவில் கூட பிரகாசிக்கும்..அதை நான் தடவி பார்க்க விரும்பினேன்.




கடைசியா நான் வந்த நின்ன இடம் பெய் ஹி யான். ஹுட்டங் பகுதி. சேரி கட்டிடங்கள். அங்கு வசிப்பவர்கள் ஹுடாங்க்ஸ். நீண்ட குறுகிய சந்துகளை கொண்ட இரைச்சல் மிகுந்த பழுப்பு நிற வீடுகள். கணக்கற்ற சந்துகளில் நிரம்பியிருந்த கணக்கற்ற வீடுகளில் வசிக்கும் கணக்கற்ற குடும்பங்கள். இந்த பூர்வகுடிகள் தங்களை பேரரசின் மக்கள் என்று நெனசுகிறாங்க. எனக்கு அவர்களை பார்க்கும் போது உயர்குடியில் பிறந்தவர்கள் போல தெரியவில்லை.




சாலையோரமாக பெட்டியை வைத்து அதன் மீது உட்கார்ந்தேன். எனக்கு பக்கத்தில் இரண்டு கிழவர்கள் குத்தவைத்து உட்கார்ந்து டீ குடித்தவாறு செஸ் விளையாடி கொண்டிருந்தார்கள். அவர்களை பார்க்கும்போது பலமணி நேரங்களாக அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் போல தெரிந்தது.. அல்லது வாரக்கணக்காக.. அல்லது நூற்றாண்டுகளாக அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்திருக்கலாம். சிறிது நேரம் கழித்து நான் பசியை உணர்ந்தேன். அடிவயிற்றில் ஏற்பட்ட முனுமுனுப்பு இது எனக்கு ஏற்படும் சாதாரண பசியில்லை என்பதை உணர்ந்தேன். கடுமையான பசி. மூன்று நாட்கள் சரியான உணவில்லாமல் புகைவண்டி பயணம் செய்த பின் ஏற்படும் பசி போன்றது. சாலையோர வியாபாரியிடம் போய் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கை வாங்கிக்கொண்டு திரும்ப வந்து பெட்டி மேல் உட்கார்ந்து கொண்டேன். சூரியன் மறையத்தொடங்கியதும் தெரு விளக்குகள் எரியதொடங்கின. சற்று இருட்டானதும் வீடுகளின் ஜன்னல்களில் விளக்கு வெளிச்சங்கள் தெரியதொடங்கின. மனித நடமாட்டம் இல்லாமல் போனது. இரண்டு கிழவர்களும் போய்விட்டிருந்தனர். . எனது எதிர்காலத்தை நினைத்து.. முக்கியமாக நாளையை நினைத்து நான் கவலைப்பட தொடங்கினேன்.. என்னுள் பதற்றம் தொற்றிக்கொண்டது.




அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக மகளும் தாயும் வாதிட்டுக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவர்களின் சத்தம் புரிந்துகொள்ளமுடியாததாகவும் , கடுமையான உணர்வுடனும் சிறிது சிறிதாக அதிகமாகத்தொடங்கியது. ஒரு மகளுக்கும் தாயிக்கும் இவ்வளவு பேசிக்கொள்ளும் அளவிற்கு விஷயங்கள் இருக்குமா என்ன.. அவர்கள் மிகவும் நெருக்கமானவகளாக இருக்க வேண்டும். என் குடும்பத்தில் யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அப்பா அம்மாவிடம் ஒருபோதும் பேசியதில்லை. அவர்கள் இரண்டுபேரும் ஒருபோதும் பாட்டியிடம் பேசியதில்லை. அவர்கள் ஒருவர்கூட என்னிடம் பேசியதில்லை. எனது கிராமத்தில் மக்கள் பூச்சிகளை போல, புழுக்களைப் போல, கதவுகளின் பின்பக்கம் தொங்கும் லாடம் போல வாழ்ந்தார்கள். அவர்களிடம் பேசுவதற்கு அதிகம் இல்லை. நான் இந்த வீட்டிலிருந்து வரும் சத்தத்தில் மூழ்கிவிடுவது போலவும் அதே சமயம் இந்த வீட்டிற்கும் எனக்கும் எதோ ஒரு சம்மதம் இருக்கிறது என்றும் உணர்ந்தேன்.




திடீரென்று அவ்வீட்டு கதவு திறக்க வெளியே ஓடிவந்த மகளை துரத்திக்கொண்டு தாய்க்காரி வந்தாள். எல்லாம் சடுதியில் முடிவடைந்து விட்டது. மிக வேகமாக கடந்த வாகனத்தினடியில் அவர்களது இரண்டு உடல்களும் பதற்றத்தில் எனது கையிலிருந்து தவறி உருண்ட உருளைக்கிழங்குடன் சேர்ந்து நசுங்கிப்போனது. காதால் தாங்கமுடியாத ஒரு சத்தத்துடன் அந்த வாகனம் நின்றது. வண்டியை ஒட்டியவன் வேகமாக இறங்கினான். இரண்டு உடல்களையும் இழுத்து வாகனத்தின் பின் பகுதில் ஏற்றினான். ஒன்றும் சொல்லாமல், என்னை ஏறிட்டு கூட பார்க்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். நான் திகைத்து நின்றேன். திரும்பவும் நான் அந்த இடத்தை பார்த்தபோது தரையில் சிறிது ரத்தம் தெருவிளக்கில் மிளிர்ந்து கொண்டிருந்தது. அந்த பெருநகரத்தில் எனது முதல் இரவை என்ன செய்வது என்று தெரியாமல் அதே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் யாரும் இல்லை. தாயும் மகளும் வெளியேறிய வீட்டின் கதவுகள் இன்னமும் திறந்து கிடந்தன. அதன் விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. பிசாசுகள் எதுவும் வெளிவரவில்லை. அரைமணி நேரம் கழித்து அந்த வீட்டினுள் சென்று பார்க்க முடிவு செய்தேன்.








**********************