01 December, 2009

பயம்

நீங்கள் கீழ் கண்ட கேள்விகளை உங்கள் வாழ்க்கையில் எப்போது சந்தித்தீர்கள்:

1 பொருள் என்றால் என்ன?
2 ஒளிஆண்டு என்றால் என்ன?
3 கருந்துளை என்றால் என்ன?

நாம் எல்லோருக்கும் வாழ்வில் மல்லாக்க படுத்து வானத்தை பார்த்த அனுபவம் இருக்கும் என்றே நம்புகிறேன். எனக்கு பள்ளி நாட்களில் ஏறக்குறைய தினமும் இந்த அனுபவம் உண்டு. தூக்கமே வானத்துக்கு கீழ்தான். மழை நாட்களில் நான் நல்ல பிள்ளையாக வீட்டுக்குள் அடங்கி விடுவேன். இப்பொழுது மாதிரி என்னால் சிறுவயதில் குளிர் தாங்கமுடியாது. நான் பதினோராம் படிக்கும் போது இயற்பியலும் தியாகராஜன் ஆசிரியரும் என்னை கடந்தார்கள். அப்பொழுதுதான் மேற்படி கேள்விகளும் என்னை கடந்தன.

matter, light year, black hole... இம்மூன்று வார்த்தைகளை பற்றி நான் யோசித்தபோது

எனக்கு முதலில் பயம் வந்தது. மீண்டும் சில நாள் வானத்தை பார்த்து விட்டு யோசித்தபோது மரணபயம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் மரணபயத்திற்கு அடிமையானேன். ஆனாலும் பிரபஞ்ச கூறுகளின் வசீகரம் என்னை பித்து நிலைக்கு அனுப்பியது. நான் அவற்றை பற்றி எதையும் படிக்கவில்லை. வானத்தை பார்ப்பேன் எதயாவது கற்பனை செய்வேன் அவ்வளவுதான். அதிகமாக கற்பனையில் விமானம் ஓட்டுவேன். அதிலிருக்கும் அழகான பெண்களுக்கு ஆபத்து வரும்.. அவர்களை காப்பாற்றும் சாகசத்தில் ஈடுபடுவேன். இரும்புக்கை மாயாவியும் மந்திரகம்பளமும் என் ஆதர்ஷன நாயகர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய குழந்தை பருவ கடவுள் கிருஷ்ணனாய் இருந்தார்! ஐந்துதலை நாகம் எனக்கு பெரும் பயம். தூக்க கனவுகளில் என்னை அதிகம் மிரட்டிய ஜந்து அரவங்கள். பின்னாளில் பாம்பு கனவில் வருவது பொதுவான பாலியல் பிரச்சனை என்று கனவு சாஸ்திரம் சொன்னதும் சற்று வெட்கப்பட்டு கொண்டேன்.

பொருள் என்றால் என்ன?

என்ன அற்புதமான கேள்வி! சற்று திரும்ப திரும்ப கேட்டால் இந்த கேள்வியின் தீவிர தன்மை வெளிப்படும். இயற்பியலின் ஆதாரக்கேள்வி இது. நீங்கள் இந்த கேள்வியை வெற்றுவெளியில் கேட்டுப்பாருங்கள் அதன் தீவிரம் உங்களை தாக்கினால் நீங்களும் பயப்படத்தொடங்கலாம். ஒருவேளை!

ஒளிஆண்டு என்றால் என்ன?

ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோமீட்டர்கள். ஒரு வினாடிக்கு என்பதை நாம் அறிவோம். இதே வேகத்தில் ஒரு வருடம் பயணம் செய்தால் கடக்கிற தூரம் ஒரு ஒளியாண்டு. இந்த பிரபஞ்சம் கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தூரம் உடையவை.! நம்மிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருப்பத்தாக கேள்வி.! யோசியுங்கள். என்னை போல நீங்களும் பயம் கொள்ளலாம். ஒருவேளை.!

கருந்துளை என்றால் என்ன?

ஈர்ப்புமையம்! பிரபஞ்சங்களை கூட விழுங்கி சேமிக்கும் ஒற்றை புள்ளி.! ஒன்றுமே இல்லைஎன்று கூட அதனுள் ஒன்றுமில்லை என்கிறார்கள்! இதன் தத்துவத்தில் நான் மிகவும் மயங்குகிறேன். ஆம். மயங்குகிறேன். ஒரு நிலையில் என் மரண பயத்தை வெல்ல கற்றுக்கொடுத்தது இந்த கருந்துளை! இப்பொழுது நான் ஏறக்குறைய மரணபயமற்று இருப்பதற்கு இந்த பிரபஞ்ச கருந்துளைகள் ஒரு முக்கிய காரணிகள். நான் இதனடிப்படையின் நீண்ட காலம் எழுதிவரும் ஒரு நாவலுக்கு கருந்துளை என்றே தலைப்பிட்டிருக்கிறேன். எப்பொழுது எழுதி முடிப்பேன் என்றுதான் தெரியவில்லை.

இந்த கேள்விகளால் நீங்கள் பயம் கொள்ள நேர்ந்தால், ஒருவேளை, உங்கள் வாழ்க்கையை கொண்டாடுவதன் மூலம் பயத்தை கடக்கலாம்.. அல்லது இக்கேள்விகள் உங்களுக்கு அறிவு விசாலத்தை ஏற்படுத்துமானால், ஒருவேளை, நீங்கள் அறிவுஜீவியாக மாறி உங்களை நீங்களே வருத்திக்கொள்ளலாம்!

இந்த பிரபஞ்சத்தையும் பெண்களையும் பற்றி நாளைக்கு எழுதுவதாக எண்ணம்.

*******

3 comments:

ஸ்ரீராம். said...

ஆயிரக் கணக்கான கேலக்சிகளும் அந்த ஆயிரக் கணக்கான கேலக்சிகளை விழுங்கக் கூடிய கருந்துளைகளும் விடை காண முடியாத இயற்கையின் மாபெரும் அற்புதங்கள். பிரபஞ்சமும் பெண்களும் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்...?!

p said...

The one thing about the sky that always fascinates me, apart from its vastness, is the fact that there is no 'live' show in the sky, only a deferred live. The star we see may be dead by now. We only see its images of yesterday or yesteryear.

adhiran said...

that is the point I totally absurd and getting facinate. we see the courior of light from the stars.! but is that true.. P..?

sriram, I post a blog about your qustion!