01 February, 2010

அன்பு, நட்பு, கனவு.

****************

அன்பு.

" அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்; உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது" (deepaneha.blogspot.com) .மகளைப்பற்றி எழுதும் போது இவ்வரிகளை இவர் எழுதியிருக்கிறார். மகள் என்பதை எடுத்து விட்டு பார்த்தோமானால், காதலை அல்லது அன்பை இதைவிட அழுத்தமாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். எனது விருப்பப்பட்டியலில் இவர் "சிதறல்கள்" என்ற வலைப்பதிவை இணைத்து இருக்கிறேன்.

**********************

நட்பு.

இந்த உறவுமுறைக்கு மனிதர்கள் எவ்வளவு தெளிவுரைகளை எழுதிவிட்டார்கள்.! ஆனாலும் சில நேரங்களில் எவற்றிற்கும் அடங்காமல் தனித்து நிற்கிறது இவ்வுறவு. வாழ்வின் பெருந்துயரங்களில் ஒன்று நட்புமுறிவு. எனக்கு வாழ்வில் ஒருமுறை இது நடந்திருக்கிறது. ஒரேமுறை..! கல்லூரி காலத்தோழனவன். இன்றுவரை அது ஒரு கடுமையான கனவாக என் தூக்கத்தில் விழித்தெழுகிறது. சம்பவங்கள், அதற்கான காரணிகள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எல்லாம் கலவையாக கனவில் பரிமானங்களை வெல்லுகின்றன. நேற்றிரவு கனவில் நடந்த பயங்கரம் என்னவென்றால் ஒரு காரணம் இடமாக எனக்கு காட்சியளித்தது. அதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை.. ஒரு காரணம் எனக்கு சம்பவ இடமாக தெரிந்தது. சம்பவ இடம் அங்கில்லை. இப்பொழுது கனவில் வந்த எந்த முகமும் நினைவில் இல்லை.. சமீபத்தில் இறந்து போன எனது தாத்தா மற்றும் நடிகர் கவுண்டமணியைத்தவிர ! மறுபடியும் எனக்கொரு நட்பு முறிவுக்கான அறிகுறிகள் தெரிகிறது. இம்முறை தவறு என்னுடையதாகவே இருக்க விருப்பம்.

******************************

கனவு.

கனவு பற்றியும் நிறைய படித்தும் எழுதியும் இருக்கிறார்கள். என் நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இந்த உலகமே நான் காணும் கனவாய் இருத்தால் எப்படி இருக்கும் என்றார். "கனவில் பட்டுப்பூச்சியை கண்டேன். விழித்ததும் அதைக்காணவில்லை, இது நான் கண்ட கனவா அல்லது பட்டுப்பூச்சியின் கனவில் நான் விழித்திருக்கிறேனா" என்று எப்போதோ ஒரு வரி படித்த ஞாபகம். யார் சொன்னது என்று தெரியவில்லை. இந்த உலகத்தை நான் கனவு கண்டால் நன்று. என்னை யாரோ ஒருவர் கனவு கண்டுகொண்டிருந்தால்... அய்யோ.

************************

1 comment:

ஸ்ரீராம். said...

சில சமயங்களில் எனக்கும் ஒரு எண்ணம் தோன்றும். இதோ விழித்தெழுந்து விடுவோம்..நாம் இத்தனை நாள் வாழ்ந்தது கனவு என்று சிறுபிள்ளையாய் எழுந்து விடுவோமோ..என்று தோன்றும்..