29 March, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 8

அந்தரச் சொல்லொன்றில் மெல்லிய நூல்கட்டி தொங்கவிடுகிறேன் என்னை. குன்டூசல் போல குறிப்பிட்ட இடைவெளியில் சோர்வுறாமல் இடமும் வலமுமாய் ஆடும் என்னை குறிவைக்கின்றன உனது நிதானமும் துரோகமும். கடக்கிறது காலம் 'கலுக்.. கலுக்' என்கிற மெல்லொலியில். தப்பப்போவது இல்லை இம்முறை இரண்டு குறிகளும். இடப்பக்கம் நான் வர உன் நிதானம் என்னை வீழ்த்தும். வலப்பக்கம் நான்வர உன் துரோகம் என்னை வீழ்த்தும். என்னால் செய்யமுடிந்ததெல்லாம் என்னை இரட்டை இலக்காக உன் முன் நிறுத்தியதுதான். இரண்டு இலக்குகள். இரண்டு வீழ்ச்சிகள். ஒரே நேரத்தில். அச்சம்.

குறுக்குச் சுவர்மீது குறிப்பிட்ட வீசை எடைகொண்டு பொன்வண்ண வரிகொண்ட வெளிர்சாம்பல் நிறப்பூனை எதிரெதிர் திசையில் நடக்க எனது ஒவ்வொரு விழியும் தனித்தனியாக அவற்றை பின்தொடர்வதை அறிகிறாய் வெயிலொழுகும் பகல் ஒன்றின் மத்தியில். சமநிலை இழந்த என் கால்நடை பிறழ்ந்து கீழிறங்கி செல்லுகிறேன் தனிமை வழி. மௌனம்.

நீர் வராக்குழாயடியில் அதே பகலில் வெற்றுப்பானையுடன் நிற்கும் தாவணிப்பெண்ணின் வியர்வைக் கோடுகள் போல திசையறியாது வழுக்கியோடுகிறது என்னுள் உனதான கூர் அவதானிப்புகள். கூரைமீதேறி நிற்கிறேன். வழியும் சொட்டுகள் ஈர்க்குச்சி முனைகளில் நிதானமாக சேகரமாகின்றன. ஊறும் அரவத்தின் அதிர்வு போதும் சொட்டுகள் உதிர. விழுகிற ஒவ்வொரு துளியும் வெற்றுப்பானையில் நிரம்பினால் சாந்தமடைவேன் என்கிற உன்னிடம் சமர் ஒன்றுமில்லை. அமைதி.

****************************************************

மழைபெயர்ப்பு. ஒரு நிராதரவான வேளையில் நீ என்னை கொல்ல உத்தேசித்திருப்பதாக ஒற்றனின் கூற்றை கருமேக நடுவில் சமிக்கையாக நான் கண்ட பொழுது வீழ்கிறது மழை.

கொலை என்பது ஒரு எளிமைகூடிய வீகரமான தாதுப்பொருள் என்பதையோ அது எல்லாவற்றிற்குமான ரசாயன மாற்றத்தின் மூலப்பொருள் என்பதையோ அறியாத என் அறியாமையை கழுவித்துடைக்கிறது இந்த மழை.

அகன்றுவிட்ட அறியாமையின் முதல்தாகம் குருதிஎன்பதை உன் விபூதியும் வவ்வால்கழிவும் கலந்த சுகந்தம் எனக்குணர்த்துவதை மறைக்காமல் என்முகபாவத்தை மணலள்ளி பூசுகையில் மீண்டும் கழுவி வெளியேற்றுகிறது மழை.

வாய் நிறைய குருதிவழியும் ஓநாயின் படமொன்றை ஒற்றனின் சட்டைப்பையில் திணித்து கழுத்தறுத்து கொல்கிறேன் அவனை உன் பார்வைக்கு படும்படிக்கு. வழிந்தோடும் திசையனைத்தையும் என் இருப்பின் பாதைகளாக மாற்றுகிறது எனை நோக்கி நீ வர, தோதாக மழை.

வா. இம்மழை என்னுள் வெளியேற்றும் வெக்கையை எனைக்கொன்று அடக்கு. பின்னும் வா. என்னுடல் தின்ன. என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை.

******************************

மதுவுண்ண தொடங்கி விட்டான் கலிபுத்தன். கோரைப்பற்கள் உதடு தாண்டி நீள்வதை சிரிப்பின் அடையாளமென்கிறான். சுய போதனையில் துப்பும் எச்சிலில் உடையும் ஆடியில் ஆயிரமாயிரம் பிக்குகள் சிரித்து நெளிகிறார்கள். உடல் கூசி விஹாரம் நுழைந்து யசோதரையை கொல்கிறான் மீண்டுமொருமுறை. தலைக்குமேல் கைகளை தூக்கி கும்பிடும் அவனது விலாவில் முளைத்த வேனல் கட்டியில் குவிகிறது உயிர். ரணம் குணமாகும் மருந்தென காரணம் கண்டடைகிறான். இந்த எளிய புத்தன் மதுவுண்ண தொடங்கிவிட்டான் மீண்டும். கலிபுத்தன்.

பாவம் சரணம் கச்சாமி....

போதம் சரணம் கச்சாமி...

மரணம் சரணம் கச்சாமி...

*******************************

2 comments:

padma said...

என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை

அப்பா!

நேசமித்ரன் said...

அடிபொலியானு சேட்டா !!!