29 June, 2010

ஒப்புதல்

**********

நன்றி ரமேஷ் வைத்யா. என் தளத்திற்கு நீ வருகை தந்தது எனக்கு பெருமகிழ்ச்சி.

****************

நிதானமான தருணத்தில்
அச்சிறுமி என்னை அடையாளம் கண்டாள்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு அது எனக்கு பிடிக்கவேண்டும்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு மற்ற யாருக்கும் கொடுக்காததாய்
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு உன்னிடம் மட்டும்தான் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு நான் பார்க்காததாய் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க
எதுவாவது கொடு எதுமற்றவையாய் இருக்கவேண்டுமது
என்னவேண்டும் எனை நீ மறக்க ..
உனக்குத்தெரியுமினி என்னிடம் அதற்கு பதிலில்லை
என்ன செய்வாய் எனை நீ மறக்கவென கேட்டாள் சிறுமி
வறண்ட நிலத்தில் சிறிது நீரூற்றி
என்னை நட்டுவைப்பேன் என்றேன் நான்.

****************

8 comments:

ரமேஷ் வைத்யா said...

அரவங்கள் நழுவும் அநாதை வனத்தில்
உன் நினைவுகளைத் தொலைப்பேன்

சாத்தான் கோயிலின் ஸ்த‌ல‌ விருட்ச‌ த‌ள‌மெடுத்து
நெருப்பிட்டு சுவாசித்து ம‌திகுழ‌ம்பி உறைவேன்

என் உதிர‌த்தும் எனில்பாதி உத‌ர‌த்தும்
உதிர்ந்த‌ திர‌வியத்துக் குன்பெயரைச் சூட்டாம‌ல்
எப்போதும் வெறித்திருப்பேன்

அர‌விந்த ஹ்ருதயத்தில்
ஆலகால நெய்யூற்றி ஆகுதியாய்க் கொடுப்பேன் நான்

ஆள் கூட்டம் இடைநின்று
அரையாடை அசைய அதர்வண மந்திரத்தால்
அழிவினைகள் செய்திருப்பேன்

எந்த க்ஷணத்திலும் ஏதேனும் செய்து
உன்னை மறந்தபடியே
அனவரதம் இருப்பேன் நான்

adhiran said...

செம counter மக்கா .. Just I Love it. thanks ramesh.

Unknown said...

ம் :)

வசுமித்ர said...

வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க

மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்

சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்

குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்

கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்.


- பெரியாழ்வார் திருமொழி

par said...

Let me join the party as well :)
.............

ஒரு நொடி உனை மறக்க
வறள் குள விம்மலாவேன்
அசையா தண்டவாள விசும்பலாவேன்

ஆயிரம் கால்கள் நடந்து செல்லும்
மணல் துகளில் கசியும்
கடல் துளியாவேன்

காற்சுவடு அற்றுப்போன வீட்டினுள்
ஒளிரும் இரு கண்களின் இமையாவேன்

சமநிலை இழந்த மனதின்
ஒற்றைக்கை
குப்பையில் எடுத்துண்ணும்
மாம்பழத்தின் வண்டாவேன்

கண்ணொளி படாத அடர்வனப் பூக்களின்
காம்பாவேன்

ஓவியத்தின் பின்பக்கமாவேன்

தடுக்கத் திறனற்று
துளைத்த ரவை தாங்கி
பெட்டியில் அடங்கிய இன்னுமொரு சிறு பெண்ணின்
கடைசி ஆணியாவேன்

நதி உறையும் முன்
கடலினுள் சென்றுவிடத் தவறிய
மீனாவேன்

ஒரு நொடி உனை மறக்க
அந்நொடியை எரித்த சாம்பலாவேன்

adhiran said...

real one parth. thanks.


புறம்புல்குவான் - what its means vasu?

வசுமித்ர said...

எனை பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் என் மகன் கண்ணன்.

பத்மா said...

தன்னை நட்டு வைத்து மறக்க சொல்லும் நைச்சியம் கவிக்கே உரிய தைரியம் .
எத்தனை முறை வாசித்து இருப்பேன் என எனக்கே தெரியாது ஆதிரன் ..
இங்கு வந்து கவிதைகளால் பின்னூட்டமிட்ட நண்பர்கள் போல் யாதும் கூற வராதலால் கவிதை மட்டும் வாசித்து விட்டு போய்விடுவேன்..
ஆயின் மறக்க இயலா கவிதையாய் போனபடியால் இங்கு அடிக்கடி வர வேண்டியதை ஆயிற்று .

உங்கள் எல்லா கவிதைகளிலும்கூடி, இது வித்யாசமான வடிவம் .

மறக்க எதுமற்றவையை யாசிப்பவரிடம் தன்னையே தந்து தானாகி நிற்கும் போது எது மறக்கும ? கவி மறப்பினும் மறக்கவியலா கவிதை
வாழ்த்துக்கள்