21 December, 2010

வானவில்வண்ண மின்னல் 10


அசந்துறங்கிய தேஜாவை எழுப்ப மனமில்லாமல் அவளுக்கான குறிப்பை எழுதத்தொடங்கினேன்:

நான் ஆண்தான். ஆனாலும் சொல்கிற விஷயத்தை முழுதாய் கேட்டு அதிலிருக்கும் ஆணின் பார்வையைப் பற்றி கேட்டால் நன்றாய் இருக்கும் பதில் சொல்வதற்கு. சேர்ந்து வாழுதலுக்கு இந்திய தீபகற்பத்தில் சட்ட அங்கீகாரம் இருக்கிறது. அவர்கள் பிரிவதற்கும் அவர்களுக்கிடையேயான பிரச்சைனைகளுக்கும் உதவ நேரடியான சட்டம் ஏதுமில்லை என்றாலும் அனைத்து விதமான பிரச்சனைகளும் உதவ சட்டம் இருக்கிறது.

பொதுவாய் பார்த்தால் சேர்ந்து வாழ்தல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவை உள்ளடக்கியதான அனைத்து குடும்பப்பண்புகளையும் கொண்ட திருமணச்சடங்கு மற்றும் தாலி போன்ற அடையாளங்கள் மட்டும் இல்லாமல் போகிற ஒரு உறவு முறை என்று அறிந்துள்ளோம். ஆனால் உண்மை வேறு. அதன் தன்மையும் வேறு. அதைப் புரிந்துகொள்ளாமல் இவ்வுறவு முறையை ஒரு திருமண அமைப்பை போலி செய்தால் பிரச்சனை வராமல் எப்படி இருக்கும்?

என்ன ஏது என்று அறியாத, நுகர்வுக் கிறக்கத்தில் அதீத பணவரவுகளைக் கொண்ட இளையவர்களிடம் ஒரு உயர்ரக style -ஆகவே இம்மாதிரியான உறவுகள் அமையும்போது அவர்களின் உறவுக்காலங்கள் m.30 மற்றும் a.60 ஆகிப்போவது உறுதி. ஆக கடுமையான கலாச்சார ஊடுருவல், இளவயது வேலைவாய்ப்பு மற்றும் அதிகப்படியான பணவரவு போன்றவைகளால் இப்பொழுது கிளம்பத் தலைப்பட்டிருக்கும் இச்சேர்ந்து வாழும் முறை.. ஒரு திருமண முறையின் பகடி/போலி அல்லது நகல். அவற்றில் ஒரு பாதுகாப்பும் கிடையாது. இருபாலருக்கும் இது பொருந்தும். பொம்பளைக்கு என்ன பாதுகாப்பு என்கிற கேள்விக்கு சற்றும் குறைந்ததல்ல ஆம்பளைக்கு என்ன பாதுகாப்பு என்கிற கேள்வியும். இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு அவன் மேல் கற்பழிப்பு வழக்கு தொடுத்த மகராசியையும் மூன்றாவது நாளில் நண்பனை அழைத்துவந்து 'விருந்து' கொடுக்க சொன்ன மகராசனையும் ஊடகம் அறியும்.

அப்படிஎன்றால் நான் விதந்தோதும் சேர்ந்து வாழ்தல் முறை என்றால் என்ன:

அதற்கு முதலில் குடும்ப முறையை - என்கிற கருத்தாக்கத்தை மனதிலிருந்து முதலில் அகற்றவேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஆணும் (doctor) ஒரு பெண்ணும் (lawyer) காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரும் திருமணம் தேவையில்லை என்றும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழவும் முடிவு செய்கிறார்கள். வாழத்தொடங்குகிரார்கள். இருவரும் தமது பணிகளை சிறப்பாக செய்யத்தொடங்குகிரார்கள். வீட்டிற்கு இரண்டு சாவிகள். யார் முதலில் வந்தாலும் சமைக்க வேண்டும் . பணி ஆட்கள் இருந்தால் இந்த பிரச்சனையும் இல்லை. வர இயலாத நாட்களில் கடைகளில் உண்ணலாம். ஓய்வு நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் இருவரும் தமது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் இந்த இலகுவாக போருந்திபோகிற வாழ்க்கைச்சூழலில் அவர்களுக்கு மூன்றுவித சுதந்திரங்கள் வாழ்வை மேலும் இனிதாக்குகின்றன.

ஒன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சுதந்திரம். குழந்தை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். குழந்தைகள் வேண்டாம் என்றால் நல்லது. குழந்தைகள் கிடைக்காத நாடா இது?

இரண்டாவதாக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அதை வளர்ப்பது எப்படி என்று ஒரு வெளிப்படையான உரையாடலை நிகழ்த்தும் சுதந்திரம். இதன் சாத்தியப்பாடுகள் அளப்பரிய உணர்வு பரிமாற்றத்தை அளிக்க வல்லது.

மூன்றாவதாக உடலுறவுத் தேர்வு சுதந்திரம். இது யாரும் யாருடனும் என்கிற அடிமட்ட சிந்தனை இல்லை. மாறாக தங்களுக்கான தேவைகளை தங்களுக்குள் தேர்வு செய்து கொள்ளலாம். வேறோருவருடனான பாலுறவு என்பது தனிமனித உரிமை. தாகத்திற்கு ஒரு செம்பு தண்ணீர் குடிப்பதற்கும் சட்டரீதியாக வயதுக்கு வந்த ஆரோக்கியமான ஆணும் பெண்ணும் அவர்கள் இருக்கிற சூழலில் விருப்பட்டு உறவு வைத்துக் கொள்வதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அதன் செயல்முறைகள்தான் சற்று வித்தியாசமானவை!

ஆணாதிக்கம்/பெண்ணியம் போன்ற கருத்தாக்கங்களையும் இங்கு கழற்றி எரிந்து விட வேண்டும். நாம் அனைவரும் போலிகள். நமைச் சுற்றி இருப்பதும் போலியின் நகல்கள். ஆடிகளில் ஒளிக்கற்றை ஆட்டங்களின் பிரதியாக்கங்களில் வாழும் நம் கண்களின் அனுமானதூரத்தை விடவும் அனைத்தும் முன்னால் இருக்கிறது. நம்பிக்கை என்பது மிகப் பெரிய பொய். இங்கு ஒருவருக்கொருவர் தியாகம் செய்துதான் வாழ்கிறார்கள். தியாகம் என்பதற்கு இங்கு விட்டுக் கொடுத்தல் என்கிற நளினமான சொல்லை உபயோகிக்கிறோம்.

அனைத்தையும் பணம் தீர்மானித்துவிடும் . அன்பு காதல் போன்றவைகள் எல்லாம் பணத்தின் கண்ணுக்குத்தெரியா அடிமைகள். குடும்ப / சமூக கருத்தாக்கங்களின் குப்பைகளையும் நுகர்வுப்பண்பாடு என்கிற கழிசடையையும் தூக்கி வீசிவிட்டு சிந்திக்கும் ஒரு மனித மனம் இந்த தூய உறவை காதல் என்னும் கண்ணாடியில் கண்டுகொள்ளும்.

"என்ன மகி எழுதிக்கிட்டு இருக்க .." என்றவாறு வந்தாள் தேஜா.

"ஒண்ணுமில்ல .. உனக்கு சொல்லாம்முனுதான் எழுதினேன்.." என்றாவாறு எழுதிய குறிப்புக்காகிதத்தை கிழித்துப்போட்டேன்.

பின்பு நிதானமாக சொல்லத்தொடங்கினேன் எழுதியவற்றை அவளிடம்.

********************************

1 comment:

arasan said...

நல்ல பதிவு