30 December, 2009
குடிப்பதில்லை..
*************
வாழ்க்கையில் வெற்றிபெற சரியான வழி 'இல்லை' என்கிற சொல்லில் இருக்கிறது. நிறைய நேரம் தூங்குகிறாயா. நிறைய செலவுசெய்கிறாயா. நிறைய நண்பர்கள் இருக்கிறார்களா. குடும்ப உறுப்பினர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா. சங்கீதம் பிடிக்குமா. இப்படி என்னளவில் இக்கேள்விகள் இருநூறைத்தொடுகின்றன. இவைகளுக்கு எல்லாம் பதில் இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றிபெறுவது சுலபம். இதைவிட வாழ்க்கையில் வெற்றிபெற மிகச்சிறந்த வழி இருக்கிறதா? இருக்கிறது. அது 'சரி' என்னும் சொல். ராத்திரிக்கு பூ வாங்கிக்கிட்டு வா. இன்னைக்கே விடுப்புல போகனுமா, அடுத்த மாசம் போலாமே. டாய்லெட் கிளீன் பண்ணனும். மேடம் கிட்ட போய் குடுத்திட்டு அவங்க கேக்குறத செஞ்சுகுடுத்துட்டு வாங்க. இதுக்கு நிறைய செலவாகுமே. இந்த வகையில் நாநூறைத்தொடுகின்றன எனதான வாக்கியங்கள். இவற்றிற்கெல்லாம் பதில் 'சரி' என்றிருந்தால் உங்கள் வெற்றியின் வேகம் இருமடங்கு!
இதில் சரி அல்லது இல்லை என்கிற சொல்லை தேர்ந்தெடுத்தவர்கள் தப்பித்தார்கள். நான் அப்படி இல்லை. அப்படியா, பாக்கலாம். ஏன் இப்படிசெஞ்சா என்ன? எனக்கு என்ன தலையெழுத்தா? அதப்பத்தி என்னக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. மறந்துட்டேன். நான் சொல்றத ஏன் யாரும் புருஞ்சுக்க மாடீங்கறீங்க. அப்படியா சொன்னேன். எனக்கு வேற வேலை இருக்கு. இப்படி எதுகெடுத்தாலும் பதில் சொன்னால் வாழ்க்கையில் நான் எப்படி வெற்றி பெறுவது! இந்த பழக்கத்தால் எனக்கு புதியவர்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதனால் நான் என் நண்பர்களிடம் படும் அவஸ்த்தை இருக்கிறதே. முடியல.
விடுங்க, என் கேள்வியே வேற, வாழ்க்கையில வெற்றி பெறுதல் என்றால் என்ன?
*******
ஹரிக்ரிஷ்ணன் அமைத்த கலை இலக்கிய விழாவுக்கு சென்றிருந்தேன். நல்லதங்காள் பாவைக்கூத்து என்கிற அற்புதம் பார்த்தேன். முழுதாக பார்க்கவியலாமல் நண்பர்களுடன் கூத்து வேறு. போன வருடம் கிடைத்த கள் கிடைக்கவில்லை.
******
வழக்கம் போல வருடப்பிறப்பு. இரண்டாயிரத்து பத்து. நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். க சீ சிவக்குமாரின் வாழ்த்துப்பதிவு நன்றாக இருந்தது. இந்த வருடம் எனது தீர்மானம் குடிப்பதில்லை என்பது. தீர்மானம் வெற்றி பெற வாழ்த்துங்கள்.
*************
23 December, 2009
என்றொரு ஆதிப்பெண் 3
காமா..
நிதானம் இழக்கும் முன் ஒரு
புன்னகையை யாசிக்கும் தோள்நிமிர்
தகப்பன் நான். ஒருபோதும் அடங்காத குழழால்
காற்றை கலங்கடிக்கும் சிறுமியின்
குரூரம் நீ. கானகத்தீயில் வெந்துகருகும்
மூங்கில்களின் கவுச்சிவாசம் அது.
காமா..
என்பாதமறியா கானகம் நுழைகிறது
என்னுள் பிளவுண்ட கண்கள் வழியாக
நெருக்கிய காற்றை காணவில்லை என
கதறிவீழும் அருவியை உன்மத்தம்
ததும்ப குடித்து தீர்க்கிறேன். நீரின்
திசையில் நீளும் நாணலின் வேரை
பிடுங்க ஏலாத பேரச்சம் ஒன்றின்
இருள்மறைவில் காட்டுப் பூனையின்
கங்குவிழிகளாய் ஒளிர்கிறது அது..
காமா..
ஒற்றைப்புள்ளி நீ
அதன் இருள் நான்
காமா..
யார்கையிலும் கிட்டிவிடும் அந்தர அம்பு அது.
**************
மழையின் டிசம்பரில்..
பைத்தியக்கார மனநிலையிலிருந்தேன். வானம் தூவிக்கொண்டிருந்தது. புது ஊர். இதற்கு முன் சென்றதில்லை திருவாரூருக்கு. பேருந்து நிலையத்திற்கும் புகைவண்டி நிலையத்திற்கும் எத்தனைமுறை நடப்பது? மழையில் நனையும் மனநிலையை குளிர் போக்கிவிட்டிருந்தது. கொஞ்சம் வித்தியாசமான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை பகடி செய்தவிதமான திருவாரூர் பெரியகோவிலில் மனம் லயிக்கவில்லை. ஒழுங்காக யோசிக்க முடியவில்லை. மனம் விட்டேத்தியாக சோழநாட்டின் ஒருபகுதியில் திரியும் சம்சாரியெனகற்பனை செய்துகொண்டு கோவிலைவிட்டு வெளியேறி வரும்போது ஒருவர் ஏன் சாயரச்சை பாக்காமல் போறேள் என்றார். பதிலேதும் கூறாமல் சிரித்தவாறு வெளியேறினேன். அவருக்கு இரண்டு காரணங்களால் பதில் சொல்ல ஏலவில்லை. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை மற்றும் சாயரட்ச்சை என்றால் என்னவென்று தெரியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கு தொடங்கி இதே மனநிலை. திருவாரூர் பேருந்துநிலையம் முன்பாக வந்து நின்ற பொழுது விதி என்னைப்பார்த்து சிரித்தது. தைலம்மை திரையரங்கத்தில் வேட்டைக்காரன் போஸ்டர்!
நம்புங்கள் நண்பர்களே ஒரு பைத்தியக்கார மனநிலையை சரி செய்ய அந்தப்படம் பத்து நிமிட நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டது!
***************
அடுத்தவூரும் நான் முதன்முதலில் சென்றதுதான்: நாகப்பட்டினம். இந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணி பதினாலு நிமிடம். நாகூர் பத்தொன்பது நிமிடம். காரைக்கால் முப்பது நிமிடம். திருநள்ளாறு நாற்பத்துமூன்று நிமிடம். (ஆம்னி வேனில்). சுவாரஸ்யம் நாகப்பட்டினத்துக்கும் நாகூருக்கும் நடுவிலிருக்கும் மாநில எல்லை சோதனைச்சாவடி அருகில் நடந்தேறியது! சோதனைச்சாவடி தாண்டியதும் நான்கு புதுச்சேரி அரசு மதுக்கடைகள். பெரிது பெரிதாக... அடியேன் கண்களுக்கு பட்டது சற்று தூரம் தள்ளி தனித்து கைவிடப்பட்ட நிலையில் இயங்கி கொண்டிருந்த கள்ளுக்கடை! நடந்த சுவாரஸ்யங்கள் நண்பர்கள் யூகிக்கக்கூடியதுதான்!
******
சற்றும் எதிர்பாராத சமயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. "சார் எம்பேரு ஆர். பி. ராஜநாயஹம்.. உங்க பிளாக்ல என்னப்பத்தி எழுதியிருக்கிங்க.. எப்படி சார் கண்டுபிடிச்சிங்க.." என்னால் அவர்தான் பேசுகிறார் என்று நம்பமுடியவில்லை. அவரது மிருதுவான குரலால் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். நல்ல மனிதர். அவருடனான எனது நட்பு எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் அன்பு.
*******
Subscribe to:
Posts (Atom)