31 March, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 9

கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகள் என்னென்ன.

அநேக நேரங்களில் ஜாதககாரனாகவும் பூர்வத்தில் கதைசொல்லியாகவும் இருக்கும் அவன் இன்றயதினத்தில் பங்குனி உத்திரமாம் பௌர்ணமியில் பால் பொழியும் நிலா பார்க்க மிதிவண்டியில் சாலை கடக்கும்போது வகையறியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் வீசப்பட்டான். அவனுக்கு நினைவு தப்பும் கணத்துக்கு முன்: அப்பா.. பேய்களுக்கு தப்புவித்து கைப்பிடித்து குளம் கடத்தி வீடு சேர்த்துவிடு என்னை.. என்கிற பின்னி மோஸசின் கவிதை வரிகளும் சில துளிகள் கண்ணீரும் உணர்ந்தான். குருதி அவன் சிரசில் வழிய அவன் கோமாவில் எழுந்தான்.

********************************

நான் மாந்தரநாட்டுக்கு நுழைந்தபோது பங்குனி இருபத்தியோராம் நாள். மன்னன் அத்துவன் உடம்பில் பொட்டு புண்ணில்லாமல் மூக்குப்பீளை நோய் தாக்கி மாண்ட தினத்தில் என் வருகை இருந்தது. மேழ ஓரை கார்த்திகை நாளில் பங்குனி பதினைந்து தினத்துள் உச்சமைடையும் உத்தர மீன். அந்த உத்தரம் கீழ் சாய எதிர்மேல் எழும் பின் எட்டாம் மீன் மூலம். மூலம் எழ முன் எட்டாம் மீன் மிருகசீரி துறை தாழும். அக்கணத்தில் எரிந்து கருகும் பெருமீன் ஒன்று கிழக்கோ வடக்கோ நகராது நிலத்தில் பெருவெளிச்சம் காட்டி வீழும். வீழ்த்த ஏழாம் நாள் அத்துவன் மரணிக்க, நான் நகர் நுழைந்தேன்.

மன்னனின் ஈமத்தில் கலக்க நேரிட்டது ஊழ்சாபம். குடநீரும் குடிப்பூவும் கொண்டுசெல்லும் வரிசையில் நான் என்னை நுழைத்துக்கொண்டேன். தீப்பந்தங்கள் வெளிச்சம் காட்ட இரண்டு பெரும் வேப்பமரங்களின் நடுவில் அவர்கள் கூடியிருந்தார்கள். அரண்மனை வாசிகள். தோற்றம் பொழிவு கலைந்திருந்தது. தீப்பந்த வெளிச்சம் எழுசூரியனின் மெல்லிய வண்ணத்தில் அடர் இருளில் பரவியிருந்தது. ஒரு சிறு பெண்டிற்கூட்டம் மரத்தடியில் ஒரு பொழிவான பெண்ணை சுற்றி நின்றிருந்தது. அவளது பொழிவு அவளது இருப்பிலேயே தெரிந்தது. மஞ்சள் துகிலில் அவளுடம்பு சுற்றப்பட்டிருந்தது. சூரியனிடம் பெறும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மஞ்சள் திங்கள். முகம் காணமுடியவில்லை எனக்கு. ஆண்களின் கூட்டம் சற்று பரபரப்பானது. தொலைவில் இருந்த குரும்பனையுயர சுவர்களில் சீரான இடைவெளியில் தீப்பந்தங்களுடன் ஆட்கள் நின்றிருந்தார்கள். இருட்டுக்குள்ளிருந்து ஒரு காத்திரமான சங்கொலி எழுந்தது. கட்டிலில் கிடந்த அத்துவன் உடலைச்சுற்றி அவர்கள் நின்றார்கள். தோள் அகன்ற கருத்த வீரனொருவன் இடைக்கச்சையில் தொங்கிய வாளை உருவி மிகப்பணிவான உடலசைவுகளுடன் அந்த உடம்பின் மார்பில் குறுக்காக நீண்ட ஒரு கிழிப்பை செய்தான். இடது மார்பிலிருந்து வலது வயிற்றிக்கு கீழ் வரை தோல் பிளந்தது. குருதிக்கசிவு இல்லாத அந்த பிளவில் வெண்மையான உட்தோல் தெரியவும் சுற்றியிருந்தவர்கள் முகத்தில் ஒருவித சிலிர்ப்பு தோன்றியதாகப் பட்டது எனக்கு. பின் சடங்குகள் விரைவாக நடந்தேறின. நான் இருளும் வெளிச்சமும் ஒன்று கூடும் கணத்தில் நல்லினியின் முகத்தைப்பார்த்தேன். நல்லினி. அத்துவனின் மனைவி. பட்டத்து அரசி. மாந்தர நாடு அவள் வசம். பிள்ளைப் பேரற்றவள்.

கணமற்றதொரு கணம். குளத்திற்குள்ளிருந்து வெளியேறும் குறுமுனிச்சூலி அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப்போனது.

உழிஞை கொண்டுவாடா என்றதட்டும் குரல் என்னை நோக்கி வந்தது. அவள் என் கையிலிருந்த பூக்களை வாங்கி மன்னனின் உடம்பு நோக்கி நடந்தாள். அவள் பார்வை என் விழியை தொட்டு மீண்டது. துலக்கமில்லை. துக்கமில்லை. வெற்றுப்பார்வை. புதரிருளில் ஒதுங்கினேன். தொடைக்குக் கீழ் கெண்டை சதை நடுங்கியது. அரை நாழிகையில் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நல்ல வெளிச்சத்தில் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கடுமையான சிரிப்பை மற்றவர் அறியாமல் உதிர்த்த கூடலூர்கிழாரை முதன்முதலில் பார்த்தேன். மொத்த உடம்பும் நடுங்குவதை உணர்ந்தேன்.

***************************

தொடரும்.

29 March, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 8

அந்தரச் சொல்லொன்றில் மெல்லிய நூல்கட்டி தொங்கவிடுகிறேன் என்னை. குன்டூசல் போல குறிப்பிட்ட இடைவெளியில் சோர்வுறாமல் இடமும் வலமுமாய் ஆடும் என்னை குறிவைக்கின்றன உனது நிதானமும் துரோகமும். கடக்கிறது காலம் 'கலுக்.. கலுக்' என்கிற மெல்லொலியில். தப்பப்போவது இல்லை இம்முறை இரண்டு குறிகளும். இடப்பக்கம் நான் வர உன் நிதானம் என்னை வீழ்த்தும். வலப்பக்கம் நான்வர உன் துரோகம் என்னை வீழ்த்தும். என்னால் செய்யமுடிந்ததெல்லாம் என்னை இரட்டை இலக்காக உன் முன் நிறுத்தியதுதான். இரண்டு இலக்குகள். இரண்டு வீழ்ச்சிகள். ஒரே நேரத்தில். அச்சம்.

குறுக்குச் சுவர்மீது குறிப்பிட்ட வீசை எடைகொண்டு பொன்வண்ண வரிகொண்ட வெளிர்சாம்பல் நிறப்பூனை எதிரெதிர் திசையில் நடக்க எனது ஒவ்வொரு விழியும் தனித்தனியாக அவற்றை பின்தொடர்வதை அறிகிறாய் வெயிலொழுகும் பகல் ஒன்றின் மத்தியில். சமநிலை இழந்த என் கால்நடை பிறழ்ந்து கீழிறங்கி செல்லுகிறேன் தனிமை வழி. மௌனம்.

நீர் வராக்குழாயடியில் அதே பகலில் வெற்றுப்பானையுடன் நிற்கும் தாவணிப்பெண்ணின் வியர்வைக் கோடுகள் போல திசையறியாது வழுக்கியோடுகிறது என்னுள் உனதான கூர் அவதானிப்புகள். கூரைமீதேறி நிற்கிறேன். வழியும் சொட்டுகள் ஈர்க்குச்சி முனைகளில் நிதானமாக சேகரமாகின்றன. ஊறும் அரவத்தின் அதிர்வு போதும் சொட்டுகள் உதிர. விழுகிற ஒவ்வொரு துளியும் வெற்றுப்பானையில் நிரம்பினால் சாந்தமடைவேன் என்கிற உன்னிடம் சமர் ஒன்றுமில்லை. அமைதி.

****************************************************

மழைபெயர்ப்பு. ஒரு நிராதரவான வேளையில் நீ என்னை கொல்ல உத்தேசித்திருப்பதாக ஒற்றனின் கூற்றை கருமேக நடுவில் சமிக்கையாக நான் கண்ட பொழுது வீழ்கிறது மழை.

கொலை என்பது ஒரு எளிமைகூடிய வீகரமான தாதுப்பொருள் என்பதையோ அது எல்லாவற்றிற்குமான ரசாயன மாற்றத்தின் மூலப்பொருள் என்பதையோ அறியாத என் அறியாமையை கழுவித்துடைக்கிறது இந்த மழை.

அகன்றுவிட்ட அறியாமையின் முதல்தாகம் குருதிஎன்பதை உன் விபூதியும் வவ்வால்கழிவும் கலந்த சுகந்தம் எனக்குணர்த்துவதை மறைக்காமல் என்முகபாவத்தை மணலள்ளி பூசுகையில் மீண்டும் கழுவி வெளியேற்றுகிறது மழை.

வாய் நிறைய குருதிவழியும் ஓநாயின் படமொன்றை ஒற்றனின் சட்டைப்பையில் திணித்து கழுத்தறுத்து கொல்கிறேன் அவனை உன் பார்வைக்கு படும்படிக்கு. வழிந்தோடும் திசையனைத்தையும் என் இருப்பின் பாதைகளாக மாற்றுகிறது எனை நோக்கி நீ வர, தோதாக மழை.

வா. இம்மழை என்னுள் வெளியேற்றும் வெக்கையை எனைக்கொன்று அடக்கு. பின்னும் வா. என்னுடல் தின்ன. என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை.

******************************

மதுவுண்ண தொடங்கி விட்டான் கலிபுத்தன். கோரைப்பற்கள் உதடு தாண்டி நீள்வதை சிரிப்பின் அடையாளமென்கிறான். சுய போதனையில் துப்பும் எச்சிலில் உடையும் ஆடியில் ஆயிரமாயிரம் பிக்குகள் சிரித்து நெளிகிறார்கள். உடல் கூசி விஹாரம் நுழைந்து யசோதரையை கொல்கிறான் மீண்டுமொருமுறை. தலைக்குமேல் கைகளை தூக்கி கும்பிடும் அவனது விலாவில் முளைத்த வேனல் கட்டியில் குவிகிறது உயிர். ரணம் குணமாகும் மருந்தென காரணம் கண்டடைகிறான். இந்த எளிய புத்தன் மதுவுண்ண தொடங்கிவிட்டான் மீண்டும். கலிபுத்தன்.

பாவம் சரணம் கச்சாமி....

போதம் சரணம் கச்சாமி...

மரணம் சரணம் கச்சாமி...

*******************************

26 March, 2010

பச்சையிலை.

பால்யம். அடைகாக்கும் காக்கைச்சூட்டில் வெளியேறும் குயில். நிராதரவான பகலுக்கும் நிர்பந்தமற்ற இரவுக்கும் இடையில் அது கூவுகிறது. திறக்கிறது உயிர். அதன் மரத்தில் காற்றுக்கு நடுங்குகிறது இளம்பச்சை இலை. உதிரும் போது காற்றில் நடுங்குகிறது இலை. வீழ்ந்த நதியில் இலையை நடுங்கச் செய்கிறது ஓடும் நீர். மழையில் துவளும் போதும் நீரில் அமிழும்போதும் நடுக்கமடங்குகிற இலையில் முதிர்கிறது பச்சை.

நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் மணிக்கட்டில் வைத்து வித்தைக்காட்டும் அண்ணனின் விரல்கள் பார்த்து வியக்கிறாள். அடர்வெளிச்சத்தில் விரிகிறது கண்கள். காணாமல் போன பந்துக்கான அழுகையை மறந்து வைக்கிறாள். உருட்டி கொடுத்த சோற்றை கையில் வாங்கி மீண்டும் தட்டில் வைத்து பந்து கேட்டு அழத்தொடங்கும் தங்கையின் அறிவை வியக்கிறான்.

தாத்தாவிடம் தான் தனது முதல் நடையை செய்து காண்பித்தான் தம்பி. வாரியணைத்த தாத்தாவிடம் மீண்டும் நடக்கவிடுவென சொல்லி பூரிக்கிறாள் பாட்டி. தெருப் பெண்களை மாட்டுவண்டியில் அமர்த்தி மாட்டுகாரவேலனைப் பார்க்க போன தாத்தாவின் உருமாளில் சொக்கிய பாட்டிக்கு பதினாலாவது பேரன் தம்பி. எளிமையாய் கடந்தது அவர்களின் மரணம் துளி கண்ணீரில்லாமல்.

ஊதாப்பூ மொக்கவிழ்வது போல விரிகிறது. உதிர்கிறது அந்தியில். அதன் மணம் நீர் தின்ற புழுதியின் வண்ணம். நின்ற மழை பெய்யும் பொருட்டு நிமிர்கிற நேரத்தில் சருகான இலையின் பச்சையில் கூடியிருக்கிறது கருமை. பால்யம்.

**********************

நூறாவது பதிவு. அய்யோடா..!

**********************

உங்களுக்கு என்ன பிரச்சனை?


*****************
தலைப்புக்கு முன்:

இன்று எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அனைத்து வாழ்த்துகளையும் பத்மாவின் தளத்தில் சொல்லி என்னை பரவசப்படுத்தியிருகிறீர்கள். நன்றி..நன்றி.. நன்றி.
*****************
பிறகு:
தலைப்பை மீண்டும் படிக்கிறேன். இந்த கேள்விக்கு என்ன அர்த்தம் என தெரியாமல் விழிக்கும் என்னை ஏலனப்படுத்துகிறது துயருத்தும் வாழ்வு. வேதனை. தெரிந்த உண்மைகளுடன் வாழும் துயரம் எனக்கு சாபமாக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சொன்ன வான்கோழி கதை: உலகின் மிகச்சிறந்த தாய்மை வான்கோழி. தனது குஞ்சுகளை காப்பதிலும் அன்பு செலுத்தி அரவணைப்பதிலும் நிகரில்லாதது. கீ கீ எனும் குஞ்சு என்றால் அதற்கு உயிர். பாருங்கள் நண்பர்களே... அந்த குஞ்சு கீ கீ என மட்டுமே கத்தவேண்டும். அது அப்படி கத்தாமல் ஊமையாக இருந்தாலோ கீ கீ என கத்தாமல் வேறு ஒலியில் கூவினாலோ அந்த அன்புத்தாய் தன் குஞ்சை கொத்திக் கொத்தியே கொன்றுவிடும். புரிகிறதா... அந்த தாய்க்கு குஞ்சென்றால் கீ கீ என கத்தவேண்டும்.. இல்லையென்றால் அது குஞ்சு இல்லை. குஞ்சு அல்லது குஞ்சு இல்லை! இதுதான் அதன் புரிதல். பைனரி.
நீதி: வான்கோழிதான் பைனரி! மனிதன் அல்ல. men are multiple. women are multiple and infinity.
****************
கடந்த சில தினங்கள் எனது வாழ்வின்மீதான மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்த வேண்டிய தருணங்களைத் தந்தது. கடுமையான மனஅழுத்தத்தை அளித்த இந்த அனுபவத்தை கதையாக்க எண்ணம். பார்க்கலாம்.
*********************
ஆணி என் நடுநெற்றியில் நுழைய உன் சுத்தியலின் ஒற்றை அறைபோதும். ஏனித்தனை முறை. கபாலம் பிளந்து தெறிக்க நீ துப்பும் ஒற்றை வார்த்தை போதாதா.
****************

15 March, 2010

ஆளுமைகள்

Mr. BT
வாருமையா பி வீ.. சௌக்கியம்தானே.. ஊனு எடுத்தாச்சோ? பாத்து பலவருசம் ஆகுதே. எப்பிடியிருக்கு நம்ப ஜனங்க நெலை.. எல்லா பயல்களும் பெசிவேச்சமாதிரி ஆயிட்டனுங்கோ.. அப்ப நாம நெனச்சது சரிதானடே...

Mr. BV
நோ நோ மிஸ்டர் பி டி.. நான் பொதுவா என்னோட நாட்டு உணவு பொருள்கள் அடங்கின வேஸ்டேஜ.. முக்கியமா அதனோட காலை உணவு பழக்கங்கள நான் தொடுறதே இல்ல. புல்ஷிட்.. நானே சமைக்கிறேன்.. யு நோ .. நான் ஆலிவ் ஆயில்தான் உபயோகிக்கிறேன். . காலையில ப்ரீ டாய்லேட் தான் எனக்கு குறிக்கோள்.
Mr. BT
என்னடே உனக்குன்னு என்ன ஒரு நாடு இருக்கு எழவு.. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுத.. இதபாரு பலவருசத்துக்கபுறமா நாம இதே நாளுல பாத்துக்கிடனும்னு பேசிகிட்டோமில்ல.. அதுக்காகத்தானே இப்போ ஏகப்பட்டபேர ஏமாத்தி யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.. எப்படி போகுது நாம செஞ்ச யோசன..

Mr. BV

மேன்.. அதுக்காக நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா.. என்னோட வேலையை பிடுங்கினது கூட எனக்கு கோவமில்ல .. எம்பையன் என்னை போடா தேவிடியாப் பையான்னு திட்டுனது கூட எனக்கு கோவமில்ல.. நான் .. நானே எழுதுன எல்லாத்தையும் நான் எழுதலன்னு சொல்லிகினு திரியுறாங்களே.. அவங்க அம்மாக்கள என்ன செஞ்சா தகும்..
Mr. BT
அதுக்காகத்தான் இவங்கள சுலபமா திசைதிருப்புற வழிவகை ஒன்ன கோதாவரி தாண்டி இல்ல தாண்டாம மேற்கு மலை தொடர்ச்சி முடியுற இடத்துல ஒரு வெள்ளைக் கல்ல கண்டுபிடுச்சு அதுக்கடியில முன்னூறு நாலு தியானம் பண்ணினேன்.. அந்த சோர்வுலதான் என்னோட ஆயிரம் பக்க நாவல எழுதினேன்.. அதுக்குப்பிறகு நா சிறுகதைகளை எழுதுன மகத்தான செயலையும் .. இரண்டு சிறுகதைகளுக்கு நடுவுல என்னோட மண மற்றும் மன நிலைய சமன்செய்ய நாவல்கள எழுதவும் தொடங்கினேன்.. பின்னால நான் என்னை உற்சாகப்படுத்தவும் நான் மொத்தமா எழுததொடங்கிட்டேன் ... மொத்தத்துல..
Mr. BV
.. நிறுத்து மேன்.. இன்னும் நீ பதினஞ்சு மார்க் பதில் சொல்ற பழகத்த விட்டு தொலைக்கலையா.. அவனவன் ஒன் வோர்டுக்கு மாறி இப்போ ட்வீட் வரைக்கும் வந்துட்டானுங்கோ.. நானும் அந்த சமயத்தில சீனா லேர்ந்து ஷெலே வரைக்கும் பலவித கலாச்சாரங்கள்ள புகுந்து திளச்சு.. கடைசியில இப்போ மலையாளம் கத்துக்கினு இருக்கேன்..
.....................

இவர்களைப்பற்றி எதுவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமைகள். புத்தகம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இவர்களிடமிருந்து எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களைப்பற்றி வெகுஜன ஊடக வடிவிலான ஒரு கற்பனை உரையாடலைத் தொடங்கினேன். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசினால் எப்படியிருக்குமென்று. சுவாரஷ்யமாய் இருந்தது. ஆனால் தொடரப் பிடிக்கவில்லை. இது ஆரோக்கியமாக படவில்லை.
***********************
ஜெயமோகனின் சில சிறுகதைகளும், விஷ்ணுபுரம், கொற்றவையும் ஏழாம் உலகமும் தமிழுக்கு கொடைசாருவின் சிறுகதைத்தொகுதியும், ராசலீலா நாவலும் இதே தமிழுக்கு கொடை. எழுத்தாளர்களுக்கு தற்பெருமை அடிப்படை குணம். இவர்களின் தம்பட்டம் அவ்வாறானதே. இந்த எழுத்தாளுமைகள் - அனைத்து எளிய மனிதர்களை போன்றே - மதிக்கப்படவேண்டியவர்களே. என்னைப்பொருத்தவரையில், வரலாறு தொன்மம் போன்றவற்றை தேடி கொள்ள ஜெயமோகன் சிறந்த வழிகாட்டி. உலக எதிர்கலாச்சாரம், திரைப்படம் போன்றவற்றை தேடி கொள்ள சாரு. ஆக, ஜெயமோகன் ஒரு biological typewritter. சாரு நிவேதிதா ஒரு biological vibrator.
*****************

வழை

நண்பர் சுரேஷ் தனது நண்பருடன் பேசும்போது வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு கருத்தை விவாதித்ததாக சொன்னார். அதன் சாரம் ஒரு கேள்வியாக இருக்கிறது. வலைப்பதிவில் கருத்துக்களைப் பதிவதற்கும் பகிர்வதற்கும் கட்டணம் வாங்கினால் எத்தனைப்பேர் பதிவுலகில் தங்கள் எண்ணங்களைப் பகிர்வார்கள்? முக்கியமான கேள்விதான் இல்லையா ? வலைப்பதிவர்கள் இணைய வலையில்/வளையில் இரண்டுவிதமாக மாட்டிக்கொள்கிறார்கள் என்று படுகிறது. இலவசமாய் பதிவுவெளியை அளிப்பதின் மூலம் சர்வதேச நிறுவனங்கள் விரிக்கும் வலை ஒன்றிலும், தொடர்ந்து பதிவு மற்றும் பகிர்வு செய்வதில் கிடைக்கும் மனச்சுகிப்பிற்கு ஒன்றிலுமாக. இத்தகைய பதிவுவெளி சேவை இலவசமாக கிடைக்காவிட்டால் நாம் எத்தனை பேர் கைக்காசு செலவு செய்து நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்?

பதிவு வழக்கம் மெல்லியதொரு போதைப்பழக்கமாக உருவகிக்க தொடங்குவதை பதிவர்கள் கண்டுகொள்ளக்கூடும். முதலில் எண்ணத்தைப் பகிர நல்ல களமாய் இருக்கும் இவ்வெளி தன்னை இட்டு நிரப்ப ஏதேனும் ஒரு கருத்துக்கும் அதன் தொடர்ச்சியாக ஒரு சார்புக்கும் பதிவர்களை நிர்பந்திக்கிறது. இச்செயல்பாடு படிப்படியாக நிகழும். ஒருவரின் வேலை மற்றும் சூழல் சார்ந்தே இதன் தன்மை காலவெளியை எடுத்துக்கொள்ளும். ஆனால் தொழிநுட்ப யுகத்தில் நாம் இதிலிருந்து தப்ப முடியாது.

ஏற்கனவே நமது பருண்மையுலகில் இணையத்தின் வழியாக ஒரு பிரபஞ்ச வெளியைப் போன்ற தன்மையில் ஒரு மாயச்சமூகம் மனித எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நாம் நமது சமூகத்தில் ஒரு உறுப்பினர் போன்றே இந்த மாயச்சமூகத்திலும் உறுப்பினர்கள். நமது கட்டற்ற எண்ணங்களை மிகச்சுலபமாக பரப்ப முடிகிற வெளியாய் இது தன்னை தொடர்ச்சியாக விரிவு செய்து கொள்கிறது. அதைவிட ஒரு சிறப்பம்சம் உண்மைச்சமூகத்தில் ஒரு தனிமனிதனுக்கு சாத்தியப்படாத பன்மை நுழைவுத்தன்மை இந்த மாயச்சமூகத்தில் சாத்தியமாகிறது.

அதாவது, ஒருவர் இச்சமூகத்தில் எத்தனை பேராகவும் உறுப்பினராக்கிக்கொள்ளலாம். அனாலும் இது உண்மைச்சமூகத்தின் ஒரு புள்ளி மாற்றமற்ற மாயப்பிரதியாக மட்டுமே இருக்கிறது. மொத்தத்தில் ஒரு தனியறையில் தன்னை யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு தனிமனிதன் செய்யும் அத்தனைக்காரியங்களையும் எல்லாம் அறிகிறபடி தன்னை யாரென்று வெளிக்காட்டிக்கொள்ளாமல் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை இவ்வெளி நமக்கு அளிக்கிறது.

என்னவொரு பயங்கரம்!

***********

வலை/வளை இரண்டு வார்த்தைக்குப் பிறகு 'வழை' என்கிற வார்த்தை இருக்கிறதா என்று தேடினேன். இருக்கிறது. வழை என்றால் இளமை என்ற ஒரு அர்த்தமும் புதுமை என்ற ஒரு அர்த்தமும் இருக்கிறது வர்த்தமானன் தமிழ் - தமிழ் அகராதியில்.

********

12 March, 2010

தானமடைகிறது நிர்வாணம்.

தானமிடும் மனிதன் தன்னை தேவனென கொள்கிறான்.


கண்மூடிய இமைவழி தெரிகிறது தகிப்பின் சிவப்பு. ரசமிழக்கும் ஆடியின் முன் என்ன செய்துவிட முடியும் வெப்பமூச்சு. கருகி அழிகிறது தனித்தலையும் இரட்டைவால் மிருகம். பொறி தேடும் பறவையிடமிருந்து கூண்டை மறைக்கிறான் வேடன். பாழடைந்த காட்டில் ஒற்றையடிப்பாதை ஒன்றை கண்டுபிடிக்கிறான் அகழ்வு செய்பவன். தங்கக்குழம்பின் ஊற்றுவழிஎன கொக்கரிக்கும் அவன் சர்ப்பதோஷம் பெற்று வீழ்கிறான் முதலடியில்.


தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்.


காற்றின் குளிர்பெற்று ஊற்றுகிறது மேகம். இரவு. இருள். காடு. குளிர் பொறுக்கா ஒளிதேவதை சிலந்தியின் கூட்டில் தஞ்சம் கேட்கிறாள். இரைகளுக்கானது அதன் கூடு. இறக்கம் கொள். மழைத்துளி ஆகிவிடு. இருண்டவனக்கிளையில் பனித்துளியில் தன்னை ஒளித்துக்கொள்கிறது ஒளி.


*************************



wrong

"there should be somethin wrong..." என்றான் அவன்.
"there should be somethin wrong..." என்றாள் அவள்.
"there should be somethin wrong..." என்றது அது.
"where" என்றேன் நான்.
"there" என்றாய் நீ.

................வேறொன்றும் இல்லை நகுலனை மீண்டும் எடுத்தேன்.

********************

இரண்டு நாவல்கள் ஒற்றை மூச்சில் படித்தேன். மீண்டும். ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு மண்ணாய் இருந்திருக்கிறேன்! (இப்ப மட்டும்..?) இப்போதைய என் இருப்பை ஒரு கேலியாக்கி, அற்பத்தின் அற்பமாக்கி, திருவிழாக்கூட்டத்தில் துணியற்றவனாக்கி .... ன்னும் என்நெல்லாமொவாக்கியது அப்புத்தகங்கள். படித்துமுடித்த கணத்தில். இப்பொழுது இந்த மனநிலை இல்லை. பரபரப்பு அடங்கி நிதானமாகிவிட்டேன். ஒரு மனதின் கற்பனைசக்தியை, அந்த கற்பனை மூலம் ஏற்படும் பரவசத்துடிப்பை வாசகனுக்கு பரிமாற்றம் செய்வதில் ஒருநூலும் மனிதர்களின் சாதாரண உறவுமுறைகளில் கீழ் மற்றும் உள் அடுக்கில் நிகழும் மன உரையாடல்களை ஒரு மூன்றாம் ஜாம நாய் குரைப்பு போல குரூரப்புதிர் வழி வெளியேறும் வார்த்தைகளைக் கொண்ட மற்றொரு நூலும்.

நித்தியகன்னி - எம்.வி.வெங்கட்ராம்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

படித்து துன்புறுங்கள் நண்பர்களே.
****************

10 March, 2010

சொல்லுவதெல்லாம் பொய்

***************

நாட்குறிப்பில் மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் சிதறலாய் கிடந்த எழுத்துக்கள். இவ்வரிகளில் சன்னாசியின் கையெழுத்து மாதிரி இல்லாத சில குறிப்புகளை ஜாதகக்காரர் எழுதியிருக்கலாம் அல்லது அங்கயர்கன்னியாக கூட இருக்கலாம்.

**********************

......... ஒரு மடையனுக்கு.... இல்லை ... ஒரு மடையனின் எழுத்துக்கள் யாருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றை அவன் எப்பொழுதும் உளறிய வண்ணம் உள்ளான். கேள் நண்பனே .. பொருளும் காமமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உச்ச இன்பமும் பணமும் அவற்றின் மீச்சிறு அலகுகள். அதிகாரம் பாலுணர்வையும் பணத்தையும் கண்ணாடித்துண்டுகளாக அரைத்து ஆசையென்னும் சாட்டையில் பூசியிருக்கிறது. வாழ்வெனும் ஒளி அந்த சாட்டையின் கண்ணாடிக்கலவையில் ஒளிர்கிறது. தொடர்ந்து அது மனித பூச்சிகளை தன்பால் இழுக்கிறது. மனிதனின் பிரக்ஞையால் உருவாகும் அதிகாரம் சூழலலால் நெய்யப்பட்டிருக்கிறது. இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது. நிகழ்தகவின் விளைவுகளையும் தற்செயல் தன்மையையும் ஆளுமை செய்யும் அளவுக்கு நாம் பயங்கரவாதிகள் ஆகிவிட்டிருக்கிறோம். நமது விஞ்ஞானகூடங்களில் இயற்கை செயற்கையாக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. .............................................


அதுசரி.. எதற்காக இப்படி எழுதுகிறேன்?
************

நிராதரவற்ற இவ்வேளையில் இருப்பு அர்த்தமற்றது என கொள்ளவேண்டாம் சன்னா. உற்றுநோக்கப்பட்ட ஒரு காட்சியாவது நேசம் மிக்கதாக இருக்கும். ஒருவேளை தனனைத்தானே முழுவதுமாக அழித்துவிடவும் கூடும். நிராதரவு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். பின் எப்போதும் உன் சுயம் குற்றவுணர்வு கொள்ளத்தொடங்கலாம். எனவே, சன்னா.. தேவையற்ற கணம் என ஒன்று கூட இல்லை. எதிர்மாறாக ஒவ்வொரு கணமும் தேவையற்றதாக இருக்கலாம். சாத்தியப்பாடுகள் பற்றி நாம் பேசத்தொடங்கினால், நாழிகை கழிவதே மீதம். மூச்சிழுத்து வெளியேற்றும் ஒவ்வொரு முறையும் நீ வாழ்கிறாய். உன் உடல் முழுதும் குருதி இளஞ்சூட்டுடன் பாய்ந்தலைகிறது. நீ பசியுணர்வாய். பசியடக்கும் ஒவ்வொரு கவளமும் உன் மனக்கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படும். உன்காமம் பசித்த வேங்கை போல குகை விட்டு வெளியேறும். இரை வேண்டி காடதிர உறுமும். அழியும் வரை காத்திருக்கப்போகிறாயா. மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது. வேறொரு இருப்புக்கு வேறு விசும்பு இது. மீண்டும் கேள்.. ஒவ்வொரு மரணத்திலும் முற்றும் முழுவதுமாக அழிந்துவிடும் இயக்கமிது. உனக்கிருப்பது இறந்தவனுக்கு இல்லை. மரணத்திற்கு நீ இருக்கிறாய். உனக்கு மரணம் இருக்கிறது. இறந்தவனுக்கிருப்பது உனக்கில்லை. பின் என் உன்னதம் மற்றும் உன்னதமின்மையைப் பற்றி போகம் கொள்கிறாய். கவனம். நான் யாரென்று உனக்குத்தெரியும். நீண்ட காலவெளியின் அனுபவம் எனக்கு உண்டு. நம்பிக்கைன்மையின் பெருந்திரள் நான். புணர்ச்சி யோகம். மெல்லிய தோல் கொண்டு என் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என் இருப்பு குற்றம். அது உன்னை கூசச்செய்யும். பேராபத்தின் குழந்தை நான். வேங்கையென உருவகிக்கும் இச்சை நான். என்னைக் கொல்ல உனது கற்கால ஆயுதம் போதாது. என்னைக்கொல்ல தந்திரமான ஆயுதம் தேடாதே. எளிமையாய் எதிர்நில். ஒரு வேளை அது உனக்குள்ளே இருக்கலாம். உபயோகிக்கத் தெரிந்தவனின் ஆயுதம் அடிமையென இயங்கும்.

*********************

மேகங்களின் அமைப்பை வரைமுறைப் படுத்தும் சாத்தியமின்மை தெரிந்தே வானம் பற்றிய குறிப்புகளை தொடங்குகிறேன். நிலக்காட்சியை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத வானம் ஒரு குட்டைநீரில் அடங்கிவிடும் என்பது வெறும் காட்சி தர்மம். புல்நுனியில் தொங்கும் ஒரு சொட்டு பனித்துளியில் நுழைந்துவிடும் மலையைப்பற்றி வானம் எப்பொழுதும் கவலை அடைவதில்லை. தன்னளவில் பெரிய வெளியை உருவாக்கி அதன் விளிம்புகளில் மேகங்களை அனுமதிக்கும் வானம் மேகத்தாலானது என சொல்வதற்கில்லை. பின் எப்படி மேகங்களின் அமைப்பை வானம் ஆளுமை கொள்ளும். இன்றைய மேகம் ஒரு ஐரோப்பிய பெண்ணாய் மருவி மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தது. அவள் கருநீல நிறத்தாலான பிரில் வைத்த அகன்ற பாவாடையும் பொழிவான வெண் சட்டையும் அணிந்திருந்தாள். தனது மிதிவண்டியில் முன்கூடையில் சில பூக்களை வைத்திருந்தாள். கணக்கரைவில் அவள் மீண்டும் வகையறியா மேகமானாள். பின்பு அவளைக் காணவில்லை. நான் மட்டுமே அங்கிருந்தேன். என் விளிம்பில் இனி அவள் வர வாய்ப்பில்லை. துக்கம் உள்ளது.

***************

கண்களை மூடி தன்னைத்தானே பலமுறை சுற்றினால் திசை மறக்கும் மீண்டும் கண் திறக்கும் போது. ஆனாலும் சொற்ப கணங்களில் மூளைஅடுக்குகள் மீட்டு விடுகிறது திசையறிவை. அவ்வளவு சுலபமாக அமைந்துவிட்டது இருப்பிடங்களின் தகவமைப்பு. பிரிதொருநாளின் கனவில் பெரும்பறவையொன்று என்னை தூக்கிப்பறந்தது. பதினோரு மலைகள், நான்கு பள்ளத்தாக்குகள், ஒரு பாலைவனம் மற்றும் முப்பத்துஏழு ஆறுகள் கடந்து ஒரு சிறிய கடலுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது என்னை. மூவுலகமும் அறிந்தது எனது நீச்சல் திறன். மேற்குலகில் வண்ணத்திப்பூச்சி வகையும் கிழக்கில் மல்லாந்த வகையும் மத்தியில் எனது மிதத்தல் வகையும் பெருமை. ஆனால் இது கடல். சமுத்திரங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டது. பாதைகள் நிரம்பியது. கடல் அப்படியல்ல. பெரும்பாலைவனம் ஒன்றின் தண்ணீர் திரிபு. திசைபற்றிய அறிவுமட்டுமே ஒரு நீச்சல்காரனின் பாதுகாப்பு. உணவு தேடும் சில சுறாக்களுக்கு என்னைப்பற்றிய அக்கறையில்லை என்பது எனக்கு பயத்தை அளித்தது. மேலும் திசையறிய ஒற்றைச் சூரியன் போதுமான பகல் அப்போது இல்லை. வெளுத்துக்கிடந்த அலையும் மீன்கள் சூரியன்படாத தகவலைச் சொல்லித்திரிந்தன. செய்வதறியாது மல்லாந்து மிதக்கத்தொடங்கினேன். நேர்பார்வையில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லச்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு விண்மீன்கள் தெரிந்தது. இவற்றில் எது என் திசை காட்டும். திசை பற்றிய அறிவு பார்வைக்கா புலனுக்கா. ஒரு சுறா என்மீது உமிழ்நீரை துப்பியது. தலைக்கனம் பிடித்த சுறாக்களின் மத்தியில் வாழ்வது இவ்வளவு சுலபமா என்ன. வெறும் உமிழ்நீரை தாங்கும் சக்தி மட்டும் போதுமா. கடல் நீரே அதை கழுவியும் சுத்தம் செய்கிறது. திசையறிய இச்சுறாக்கள் உதவுமா தெரியவில்லை. மீண்டும் விண்மீன்களை பார்த்தேன். அதிசயம். இடம் மாறியிருந்தன அவைகள். முதலில் இருந்ததும் இல்லாமல் இருந்தது. மூன்று லட்சம் விண்மீன்கள் காணாமல் போயிருந்தன. பதிலுக்கு மூன்றேமுக்கால் லட்சம் விண்மீன்கள் வேறு இடத்தில் தோன்றியிருந்தன. விளையாட்டு அற்புதமாய் இருந்தது. நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.

**************

வண்ணத்துப்பூச்சி நீச்சல் அடித்து வெளியேறினேன்.

**********************

மித்ர..........

****************

ஒரு துயர்கொண்ட முரட்டுப்பாடல் தனதான ஒலிச்சமிக்கைகளை ஒளித்துவைக்க சதா முயல்கிறது. தன்னிடமிருந்து தெரியாமல் வெளியேறும் கூர்ப்பல் ரீங்காரங்களை அது கட்டுப்படுத்த முயன்றும் சதா தோற்கிறது. தனது ஒலிகளின் கூர்முனைகள் கேட்பவர்களின் செவிப்பறையை கிழித்துவிடுமென எல்லோரிடமும் எச்சரிக்கை விடுகிறது. அதன்பொருட்டே அக்கூரிய ஒலிகளில் ஏற்படும் ரணத்தை தானே ஏற்றுக்கொள்வதாக சமாதானம் செய்கிறது. எனக்கு அந்த துயர்கொண்ட பாடல் பார்க்கக் கிடைக்கிறது. அது என்னை நிர்வாணம் ஆக்குகிறது. வெளியெல்லாம் என்னை கூசி அலையச்செயகிறது. அது என் பெருவிருப்பமாய் வேறு இருக்கிறது. தன்னை துயர்கொண்ட பாடலாய் உருவகிக்கும் அது உண்மையில் ஒரு நீண்ட நதி. ஏற்கனவே சமைக்கப்பட்ட பாதையில் நிதானம் தவறாமல் ஓடி கடலைடையும் ஒரு அமைப்பு. ஆனாலும் அது ஒவ்வொரு முறையும் ஒரு எளிய கூலாங்கல்லில் இடறி தனது சமனை இழக்கிறது. இடறி விழும் ஒவ்வொரு முறையும் அது தன்னை துயருற்ற பாடலாக உருவகிக்கிறது. எப்பொழுதும் போல் நான் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறேன். இம்முறை சற்று திகைப்படைந்துள்ளேன்.

*************

09 March, 2010

பிணக்கில் சென்ற கடவுள்

கடவுளைப்பற்றி எழுதத்தொடங்கினேன். கடலாழத்தின் அழுத்தமும் உப்புச்சுவையும் தொடுவானத்தையும் படைத்தவர் அவர். பறவைகளின் ஒளிச்சிதறல் பரவும் பெருங்காடுகளைப் படைத்தவரும் கூட. பனித்துளி சர்ப்பவிசம் மனிதர்கள் நாக்கு மூங்கிலிசை வசைச்சொல் மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் அவரெனக்கொள்ளலாம்.மேலும் அவரைப்பற்றி எதைச்சொன்னாலும் பழையதாய்ப் போய்விடுகிற அவஸ்த்தை. தவிர, பசியின்மை தாகம் புல்வெளி மரணம் எதையும் விட்டுவைக்காத காமம்... எழுதுவதை நிறுத்தி எதை எழுதாமல் விட்டுவிட்டேன் என்றெண்ணியவாறு மீண்டும் வாசிக்க எழுதியதெல்லாம் ஒரு சாதாரண முத்தம் பற்றிய குறிப்புகள் என உணர்தபோது கடவுள் தோன்றி சிரித்து மறைந்தார்.

*********

தன்னைத்தனே முத்தமிட்டுக்கொள்ளும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை அனுமதித்த கடவுளை இன்று பெய்த மழையின் லேசான மண்வாசனையோடு நிபந்தனை ஏதுமில்லாமல் மன்னித்தேன். பிழைத்துப்போன கடவுள் முத்தவண்ண ஓங்காரத்தை இடியாக்கி எனக்கு பரிசளித்தார்.

********

மாலையொன்றின் முடிவில் எரிச்சலுடன் விடைபெற்றார் என்னிடமிருந்து கடவுள். என்னைப்போலவே அவருக்கும் வருத்தமில்லை. வருத்தமெல்லாம் முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் தவறவிட்ட முத்தத்தை இருவரும் பிடிக்கச்சென்று மீண்டும் தவறவிட்டோம் என்பதாலும் உடைந்த முத்தத்தை அவரால் மட்டுமல்ல என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான்.

*********

தலைதெறிக்க ஓடிவந்த கடவுளின் தொண்டை வறட்சிக்கு நீர் கொடுத்து என்வென்று கேட்டேன். தாகமடங்கி நிதானமான அவர் என்னைப்பார்த்து சிரிக்கத் தொடங்கி நிறுத்தினார். அழத்தொடங்கி நிறுத்தினார். பேசத்தொடங்கி நிறுத்தினார். என்னசெய்வது என்று திகைத்து அதை மறைக்கத் திரும்பி நிறுத்தினார். பின்பு மெதுவாய் என்னிடம் நீ கேட்ட கேள்விக்கு என்னாலான பதிலைத் தேடிவிட்டேன். ஒரே பதில்தான். முத்தம் முத்தத்தால் மட்டுமே ஆனது என்றார். பின்பு சென்றுவிட்டார்.

***********

ஆதி சூட்சுமம் அறிந்த உனக்கு இனி நான் துளியும் தேவையில்லை என்றார் கடவுள். சற்று நேரம் அமைதியாய் இருந்து பின்பு ஆரத்தழுவி மொத்தமாய் என்னிடமிருந்து பிரிவதாய்சொல்லி புறப்பட்டார். எனக்கு வருத்தமில்லை. இன்று காலையில்தான் தெரிந்து கொண்டேன் அனைத்து முத்தங்களின் மறுபக்கங்களிலும் இருக்கும் அவரது இருப்பிடத்தை. எனக்கு தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட வெட்கவுணர்வால்தான் பிரிகிறார் எனத்தெரிந்து என்னவொரு குழந்தைத்தனம் என வியந்தேன். பின்பு என் நெஞ்சு நெற்றி புஜங்கள் தொட்டு என் வலது ஆட்காட்டி விரலை கேள்விக்குறி போல வளைத்து அதன்மேலோர் முத்தமிட்டுக் கொண்டேன்.

**************************************

08 March, 2010

பகிர்வு

மகளிர் தினம்!

எனக்கு இது ஒரு தனிப்பட்ட சிறப்பு தினம் கூட. எனது துணைவியாரின் பிறந்த தினம். அவர்களுக்கு ஒரு வாழ்த்து.

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ! பெண்களைக் கொண்டாடும் ஆண்களுக்கும் வாழ்த்துக்கள்!!

********

இன்றைய தினத்தையொட்டி நான் படிக்க நேரிட்ட மூன்று தினசரி செய்திகள் பற்றிய சிறு பகிர்வு. ஆந்திராவில் என்டியார் ஜூனியருக்கு ஐநூறு கோடி ரூபாய் வரதட்ச்சனை கொடுத்து கூடவே ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் முப்பத்துமூனு சத இடதுக்கீடு மசோதா நிறைவேறினால் அத்தனை பெண்களுக்கு எங்கு போவது என்று எதோ ஒரு பத்திரிகை கவலைப்பட்டிருக்கிறது. சைனாவில் மனைவிகளுக்கு வீட்டு வேலைக்கு கணவன் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. கேயாஸ் தியரியில் ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திப்பார்க்க அவசியமில்லாமல் தெளிவாக ஒற்றை காரணியாக பெண் இருக்கிறாள். அனைவர்க்கும் அனைத்திலும்! இந்த செய்திகளில் ஒன்று மாநிலம், அடுத்தது தேசம். மூன்றாவது சர்வதேசம். வாழ்க இப்பிரபஞ்சம்!

************

மீடியா வைரஸ்களின் கடுமையான தாக்குதல்களை மீண்டும் நித்த்யானந்தா மூலம் வெளிறிப்போய் அனுபவத்த நம் மகாப்பொது மக்கள் மீது ஒரு கண்ணுக்குக்கு தெரியாத மீடியா வைரஸ் பற்றி சொல்லவேண்டும். அது "பூம் டீவீ" என்கிற பெயரில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பதிக்கப்பட்டிருக்கிறது.

************

04 March, 2010

இருளின் நிழல்


நண்ப
அனைத்தையும் அடக்கியதது. சிறுத்து, கூரிய பார்வை. அகன்று அகண்ட கேள்வி. மாறாத ஞாபகம் மற்றும் சமரசமற்ற பழிகொள்ளும் தன்மை. மிகமிக அழுத்தமான பாதத்தடம். எல்லாமுமாய் எதிர் நிற்கிறது யானையாய். கரியபூனைக்குட்டியாய் நிற்கும் என்முன். இருப்பதோ கவிதை என்னும் சிறிய அங்குசம்.
நண்ப
தற்கொலைக்கு அல்லது கொலைக்கு அல்லது ஒரு நீண்ட ரயில் பயணத்திற்கு அல்லது கடலோரத்தில் சிப்பிகள் பொறுக்குவதற்கு அல்லது சாலையில் கடக்கும் ஒரு நத்தையை கவனிப்பதற்கு என்று சொல்லத்தொடங்கும் முன் கவிதையிருக்கிறது பதிலீடாய் என்கிறாய். அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அல்லது கவனித்துக்கொண்டிருக்கக்கூடும். அல்லது நிச்சயம் அது கண்காணிப்பாய்த்தான் இருக்கும். என்றதனால் கவிதைக்கு பதிலீடாக ஒரு புன்னகை ஒரு முகமன் அல்லது ஒரு பணிதல் போன்ற ஏதாவது ஒன்று மிகவும் நல்லது. அல்லது அவள் பாதத்தில் நீண்ட குளிர்ச்சியான முத்தம் அதனினும் நல்லது.
நண்ப
நாம் சேர்த்துண்ணும் இவ்வினிய வேளையில் ஒரு குவளை சாராயத்தின் தேவை பற்றி தெரிந்து கொண்ட அப்பறவையை நான் நேசிக்கிறேன். மண் குழைத்து உருவாக்கிய குவளையில் திரவம் நிரப்பும்சப்தத்தை எழுப்புகிறது அப்பறவை. நாம் பேசிகொள்வதற்கு இதமான இவ்வேளையை இளக்கமாக்கி சங்கீத நுட்பம் சேர்க்கிறது அவ்வொலி. அறைச்சுவர்கள் கரைய நீர்மீது மிதக்கின்றன நமது நாற்காலிகள். கடல்வெளி ஆகிறது நிலம். படகென நகர்கிறது காலம். காலத்தினூடே பறக்கும் அப்பறவையின் பெயரை விளிக்கிறேன். என்னுடன் சேர்ந்து நீயும் அழைக்கிறாய். எதிரொலியில் அப்பறவை அளிக்கும் பதில் நம் குரலாகிறது. அது கேட்டு சிரித்துக்கொள்ளும் நமது விழிகள் நுகரும் வாசனை சிதைவுகளுக்கானது.

நண்ப

எனது வார்த்தைகளுக்கு உன் உடலிலும் உனது வார்த்தைகளுக்கு எனது உடலிலும் படர்கிறது செதில்கள். வார்த்தைகள் தடித்த பொழுதில் நாம் வெள்ளிச்சாம்பல் நிறக்கடலில் அப்பறவையை மறந்து நீந்திக்கொண்டிருக்கிறோம். தனது மொத்த தாகத்திற்காகவும் நமது நிலத்தில் கொட்டப்பட்ட அக்கடலை குடித்த வெண்கழுத்தும் அடர்தாமிர நிறமும் கொண்ட அப்பறவையின் எச்சம் தழும்பாகி பதிகிறது எனது குதத்தில். சுற்றி வளர்ந்த சுவர்கள் நம்மைச் சூழ்ந்து அறையானதும் உன் கழிப்பறை குழாயில் கசிகிறது அளத்தின் நீர். தீர்க்கப்படாத நம் தாகத்தினை தூக்கிப்பரக்கு அப்பறவை பாரம் தாங்காமல் அலறும் பொழுது நான் அதை வெறுக்கத் தொடங்கினேன். எப்போதுன் நீ என்னை வழிமொழிவாய் என நம்பியபடி.

நண்ப

ஆணாகிய என்னிடம் ஆணாகிய நீ முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். முரட்டுத்தனமாக மறுத்தலிக்கிறேன். முத்தங்களுக்கு ஏது பால்பேதமென்கிறாய். அருவெறுப்பின் உச்சமென்கிறேன். புன்னகை புரிகிறாய். உடல் கூசுகிறது நினைத்தாலேவென்கிறேன். உன் பூத்த புன்னகை சிரிப்பாகிறது. உன் உறுதி கண்டு பயந்து விலகியோடுகிறேன் சிரிப்பொலி அடைத்த பாதைகள் விலக்கி. கனவில் நான் உனக்கு இட்ட நீண்ட முத்தத்திற்குப்பின் நான் பெண்ணானேன் நீயும் பெண்ணானாய். பெண்ணாகிய நீ பெண்ணான என்னிடம் முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். நாணத்துடன் மறுத்தலிக்கிறேன். பால் பேதம் அற்றவை முத்தங்கள். வேப்பமர நிழலில் அமர்ந்து நமதான இவ்வுரையாடலை கேட்டு அவர்கள் சிரித்துக்கொள்கிறார்கள் மற்றவர்களுக்கு தெரியாமல். அவர்கள் முத்தங்களின் வல்லமை அறிந்தவர்கள்.

நண்ப

அவளை எனக்கு பிடித்திருக்கிறது. சலனமற்ற உன் முகம் சலனமற்ற வார்த்தைகளை சலசலவென உதிர்கிறது. குடிநீர் நிரம்பிய பாலித்தீன் பையை சுவற்றில் எரிந்து உடைத்தாய். சுவற்றில் தெறித்த நீரின் கோலத்தில் நெளிந்தது ஒரு அமீபா. அவளுடன் இன்னொரு பெண்ணும் சில ஆண்களும் இருந்தார்கள். நீயும் நானும் கூட. கூரையற்ற அறையின் தரையில் அமர்ந்து மது அருந்தினோம். வாழ்நாளின் அவமானகரமான அன்று நான் செய்தேன். சுவற்றில் பட்டு தெறித்த மது போத்தலின் ஆடிச்சில்லுகள் என் ஞாபகக்கிழிசலின் ஓரங்களைத் தைத்தன. அமர்ந்திருந்தவர்க்கெல்லாம் ஆளுக்கொரு ரணம். ஆனந்தத்திலும் துக்கத்திலும் சில துளிகளை இழந்தது நமது விழிகள். விடியலில் நாம் அவர்களை விட்டு வெளியேறினோம் நீ அருகிலும் நான் வெகுதொலைவிலும். இன்றும் அவளை எனக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது என தெரிந்த பிறகும்.

நண்ப

அலுப்பு தட்டும் ஒற்றைக் கேலிக் கூத்து என் மரணம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது மைதூனத்தில். சொல் மொழி துளிவானம் நீர்மை எல்லாம் புதைய நிகழ்கிறது காலம். உன் பெயர் அவள். என் பெயர் அவன். அவன் பெயர் நீ. அவள் பெயர் நான். எழுத்தெல்லாம் ஸ்கலிதம் என்கிறான் கணிதன். மீதம் கிடைத்தது பூச்சியம். சமன்பாடு நிறைவடைந்ததில் பூப்படையும் காமம். கடலின் குறுக்கே பறக்கும் காகம் காவென கத்துவது யோனிதர்மம்.

நண்ப

மௌனம் வேயப்பட்ட அறையில் ஆழ்கடல் அடர்வென மனங்கொண்டு அமர்ந்திருக்கிறேன். உன் பால்வெண்மை வார்த்தைகளில் என்னை வெளியழைக்கிறாய். ஆப்பிளின் நறுமணத்தை சொல்லாக்குகிறாய். பயங்களின் இழையாய் படியும் மனத்தின் மீது செங்கல் செங்கலாய் தைரியம் கட்டுகிறதது. என் சொற்கள் வெளியேற வேண்டிய தருணத்தை நோக்கி எழுகிறது அதன் சுவர். ரோஜாவின் வண்ணத்தையொத்த உன் வார்த்தைகள் செய்கிறது எனதான நம்பிக்கைகளை மீட்க தேவையான அனைத்து மாயங்களையும். வகையறியாத அருட்பாடலைப் போல அவை உன் உதடுகளில் உச்சரிப்பு கொண்டிருக்கிறது. ஊசியிலைத் தாவரத்தில் வடியும் மழைத்துளியாய் உதிர்ந்து சிதறுகிறது எனக்கான பயங்கள். கிடையில் கதறும் ஆடுகளின் ஒர்மையை நான் அடைந்த கணத்தில் இடதுகண்ணைச் சிமிட்டி செல்கிறாய் எனது முன்தலையில் முளைத்த ஒற்றைக்கொம்பின் கூரியமுனை பார்த்து.

நண்ப

என்னிடமிருந்து விலகிச்செல்லும் என்னிடமிருந்தே தொடங்குகிற உரையாடலின் முடிவில் குரோதம் கொள்கிறாய் என்னிடமே. தன் கூட்டுக்கு செருக காக்கைத்தூக்கிச் செல்லும் வடிவமில்லாத சிறுகுச்சி போல என்னை விட்டுவிட்டு என்னை தூக்கிச்செல்கிறாய் உன் கூட்டுக்கு நான் குச்சியாய் இருக்க ஏலாதென தெரிந்தே. உன் சுவாசத்தின் ஒழுங்குமுறைகள் என் சுவாசத்திற்கு எதிரானவைஎன தெரிந்தே நானும் வுன் கூட்டுக்குச்சியாகிறேன். ஆயினும் ஒன்று கேட்க அனுமதி. என்னை நீ எடுத்துச்சென்ற பின் நீ விட்டுச்சென்ற நான் தெருமரமாய் நிற்கிறேன். அதில் உன் கூடை கட்டேன்... நகரமுடியாமல் இருக்கும் என் மீது நீ அமர்வது எனக்கு விருப்பமாய் இருக்கிறது. என்மீது என்னாலான குச்சி கொண்டு நீ கட்டும் கூட்டில் நீ வசிக்க நேர்ந்தால் என்னிடமிருக்கும் சில பழங்களையும் பறவைகள் இரண்டையும் அளித்து மகிழ்வேன்.

நண்ப

நல்லது போய்வா. நான் கேட்டது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நான் ஒரு நாட்காட்டி மட்டுமே. தினமும் என்னைக் கிழிக்கலாம். கசக்கி குப்பையிலோ மலச் சாக்கடையிலோ போடலாம். வழியும் எச்சிலைத் துடைக்கவோ கைஈரத்தை வழித்தேடுக்கவோ என்னை நீ பயன்படுத்தலாம். அல்லது கிழிக்காமல் விட்டு என்னை கடந்தகாலமாக்கலாம் உன் பழைய ஞாபகங்களின் வழித்துணைக்கு. காலமாவதற்கும் கடந்தகாலமாவதற்கும் என்னைப் பணிய வைத்தவுன் அன்பிற்கு பணிவிடை செய்ய நானுன் தாழ்பணிகிறேன்.

நண்ப

பதிலாக எனக்கு நீ ஒரேயொரு முத்தம் கொடு.

*****************

கள்ளக்காதல்' தொகுப்பிலிருந்து.

*********************