27 February, 2010

குளம்

தாழ்வாரத்தில் தேங்கும் ஒளிக்குளம் நிலவு கொடுத்தது. எடுத்து முகத்தில் அப்பிக்கொள். வழிகிறது வாசமாய் உன் இனிய சொற்கள். தேகம்கொல் காமம் பிசைந்த சோற்றுப்பருக்கைகளை உருட்டியளிக்கிறாய் நீளும் என் உள்ளங்கையில். வயிற்றிலில்லை பசிஎன்னும் சொல். எல்லாமே வெண்மையாய் தெரிய கறுத்துச்சிறுக்கிறது எனதான அகம். புறம் பேசுகிறது நிலா.

**************

சூரியனின் நீர் நிறைந்த பகலொன்றில் கனப்பு மிக்க நிலத்தில் உன் காலடி தடம். பற்றி செல்கையில் நிறைவடைகிறது தொடுவானம்.

****************

பலவருடங்களுக்கு முன் எழுதிப்பார்த்த காதல் வரிகள்!

*********************

24 February, 2010

சாயம் போன நிலம் 1

அந்த மண்ணின் தரம் ஏதுவாக இருந்தது தேவையான அளவை சேகரித்துக்கொண்டேன் அந்த இடம் ஏதுவாக இருந்தது தேவையான இடத்தை சுத்தம் செய்து வேலியிட்டேன் அவன் சொன்னான் அந்த இடம் ஏதுவானதென்றுஅங்கு ஓர் ஆழ்துளை செய்து தேவையான நீரைஎடுத்துக்கொண்டேன். அந்த மரம் காய்ந்து போனதுஅதை வெட்டி தேவையான விறகுகளை பத்திரப்படுத்தினேன்தேவையான அளவு இடத்தில்தேவையான அளவு மண்ணைக் கொட்டிதேவையான அளவு நீரை சேர்த்துகுழப்பி பரப்பினேன். உயிர் குடிக்கும் குரல் கொண்டுஒரு நாடோடியின் பாடலை முனுமுனுத்தவாறு நீஅந்த பரப்பில் கீறலிட்டாய். காயவைத்து ஒவ்வொன்றாய் அடுக்கி தேவையான அளவு விறகு வைத்து எரியூடினேன். மண்சுட்டு கல்லானது இப்போது தேவையான அளவு இடமில்லைஇப்போது தேவையான அளவு மண்ணில்லை இப்போது தேவையான அளவு நீரில்லைவேறு இப்போது வேறெங்கோ துளையிட அவன்போய்விட்டான்நாடோடிப்பாடல் நாட்டுப்பாடலானது இனி எப்போதும் தேவையான அளவு கல் இருக்கும் என்னிடம்.
**************
இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் ஒரு கொழுத்த இரவை எனக்கு பரிசளித்தாய் அதன் பாரம் தாங்கமாட்டாமல் என் கால்கள் பூமியுள் புதைகின்றன ஒவ்வொரு கணத்திலும் திரும்ப பெற்றுவிடு அந்த இரவை அல்லது தொடர்ந்து சுமக்க உன் தோள் கொடு அல்லது ஒரு சிறிய இளைப்பாறல் போதும் பார் அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள். தெருவெங்கும் மழையோடையாம் கப்பலுக்கு ஏங்குகிறதாம் நீர்
அடர்நினைவினாலான அவ்விரவினை சற்று இறக்கி வைத்துவிட்டு ஒரு காகிதத்தை துலாவி எடுத்துக்கொடுக்கும் நேரத்தை மட்டும் எனக்கு அளி. ஒரு வேளை அவள் செய்யும் கப்பலில் அந்த இரவை சரக்காக்கி காலத்துக்கு ஏற்றுமதி செய்துவிட ஏலுமானால் மறுகணமே உன்னிடம் வருவேன்
ஒரு இனிய மிருதுவான குளிர் வீசும் மிளிர்கரும் இரவொன்றை உனக்கு
பரிசளிக்க.

*************

23 February, 2010

வினோதம் 4

பாதுகாப்புணர்வு இழக்கும் ஆண்கள் பற்றி முந்தய பதிவில் சொல்லியிருந்தேன். இப்போது நம்பிக்கையுடைய பெண்ணைப்பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். அதற்கு முன்னாள் இந்த ஆண்களைப்பற்றி நான் சொன்னவைகளை சுருக்கமாக மீண்டுமொருமுறை என் ஞாபகப்படுத்தலுக்காக எழுதுகிறேன்: பொதுவாக ஆண் பணம் மற்றும் பெண் தேவைகள் பூர்த்தியாகாத சமயங்களில் பாதுகாப்புணர்வை இழக்கிறான். இவை இரண்டும் கிடைக்கும் நிலையில் அவன் பெண்ணை நம்ப தொடங்குகிறான். குடும்ப அமைப்பில் இந்த இரண்டுமே ஆணுக்கு ஆதாரம். இதன் அடிப்படையில் ஆணுக்கு எழுவதுதான் அன்பும் காதலும். இதுதான் பெரும்பாலான சரி. பேரன்பும் பெருங்காதலும் கொண்ட வெகுளி/அப்பாவி/முட்டாள் ஆண்கள் இதில் விலக்கானவர்கள், பாவம் அவர்களை விட்டுவிடலாம்! பொதுவாக தனது மொத்த தேவைகளையும் குடும்ப அமைப்பின் மூலம் சுலபமாக தீர்த்துக்கொள்கிற ஆண்கள், தங்களில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை நுகர்கிற வாடிக்கையாளர்களாக மட்டுமே உள்ளார்கள்.
நம்பிக்கையுடைய பெண் யார்: பிறரை சாராமல் தனியாக வாழ முடியும் என்று ஒரு பெண்ணுக்கு தெரிந்து போனால் மட்டும் போதும் அவள் நம்பிக்கை அடைந்தவளாகிறாள். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் தனியாக சுயமரியாதையுடன் வாழத்தகுதி உடையவள்தான். அது அவளுக்கு தெரியவில்லை என்பது மட்டுமே பிரச்சனை. அவள் சார்ந்தே இருப்பதுதான் நல்லது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். பெண் அடிமைத்தனம் என்பதிலிருந்து விடுபடுதல் என்றால் ஆணை விட்டு விலகிச்செல்லுதல் என்று அர்த்தமில்லை, மாறாக ஆணீயச் சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான்.
ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுகாப்பற்ற உணர்வில்' இருப்பதாக நம்ப வைத்துக்கொண்டிருகிறது. அவளும் அதை முழுமையாக நம்புவதாகவே படுகிறது. சார்பு ஒரு சுய தேவை என்கிற அளவுக்கு அவள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாவே எனக்கு தோன்றுகிறது. உடல்வலு கூட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்களுக்குஇருப்பது வலுவான திறன், ஆண்களுக்கு இருப்பது வலு. உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்கி அடுத்த அறையில் வைப்பது ஆண்களுக்கு சுலபம், மாறாக ஐம்பது துணிகளை உட்கார்ந்த இடத்தில் துவைத்துப்போட அவனுடம்பில் திறன் கிடையாது. விதி விலக்குகள் விலகுங்கள்.
இந்தவையான சுய அறிதலே பெண்களுக்கு நம்பிக்கை என்கிறேன். தான் தனியாக வாழ தேவையான அறிவை பெண் பெற்றுவிட்டால் அவள் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுவாள். குடும்ப அமைப்புகளை சிக்கலின்றிபுரிந்து கொண்டு ஒரு சோலை நீரோடையாக தனது குடும்பத்தை அமைத்துக்கொள்ள அவளால் முடியும். பெருங்காதலும் பேரன்பும் இல்லாத பெண்களை நான் ஆண் என்றே கொள்கிறேன். அவர்களையும் விட்டுவிடலாம் பாவம் அவர்கள். சூழ்நிலை.

தொடரும்..
*****************************

22 February, 2010

வினோதம் 3

நண்பன் வசுபாரதி 'ஊதாரித்தனமான நண்பன்' என்கிற வார்த்தையை பிரயோகித்திருக்கிறான். சுவாரஷ்யமான கூற்று. அதை பற்றி நான் கொஞ்சம் எழுதுகிறேன். அதற்கு முன்னாள், பத்மாவின் பின்னூட்டத்தில் முட்டாள்தனம் என்று யோசிக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார். இதைப்பற்றியும் நான் சொல்லவேண்டி இருக்கிறது. என்னவென்றால், முட்டாள் தனம் என்று நான் சொல்வது அறிவாளித்தனத்துக்கு எதிர்பதமாக. அறிவு எவ்வாறு ஒரு தன்மையோ அதுபோலவே முட்டாள் ஒரு தன்மை. சரியாக நான் சொல்ல வந்தது வெகுளித்தனம் அல்லது அப்பாவித்தனம். இது இரண்டும் சேர்ந்ததுதான் முட்டாள்தனம். இங்கு என்னைப்பொருத்தவரையில் அறிவாளிகளை விட முட்டாள்களே சிறந்தவர்களாகவும் மேன்மை மற்றும் மென்மையான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை கொண்டவர் எவரும் அறிவாளிதான். அப்படியானால் இங்கு முட்டாள்கள் யாரும் இல்லை, சமயோசிதமாக பணத்தை எவ்வழியிலும் சேர்க்கத தெரிந்தவர்களைத்தான் இங்கு நாம் அறிவாளிகள் என்கிறோம். முட்டாள்கள் பிழைக்கத்தெரியாதவர்கள். பெரும்பாலும் 'பாவம் அவன்' என்கிற விகுதியோடுதான் அவர்கள் அடையாளப்படுத்தப படுகிறார்கள். இந்த வகையில்தான் என்னை அல்லது என் செயல் பாடுகளை நான் முட்டாள்தனம் என்று விளித்துக் கொள்கிறேன். இது கண்டிப்பாக அவையடக்கம் அல்ல.
இரண்டாவதாய் வசுபாரதியின் ஊதாரித்தனம் என்கிற பதம். ஊதாரித்தனம் என்பது பொதுவாய் கண்டமாதிரி செலவுசெய்தல், பணத்தை சேமிக்காதிருத்தல் போன்ற பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையிலான சொல். வசு இதனடிப்படையில் சொல்லியிருந்தால் அது எனக்கு உடன்பாடு கிடையாது. எனக்கும் ஊதாரித்தனம் பிடிக்கும். அனால் அதற்காக ஒரு மனிதன் அடுத்தவரை சார்ந்திருக்கக்கூடாது என்பதுதான் சரி. அதற்காக ஒரு சிறு அளவிலான திட்டமிடல் வாழ்க்கையில் மிகத்தேவையானது. திட்டமிடல் என்ற சொல்லே கொஞ்சம் பொறுப்புணர்வு சார்ந்ததுதான். அவ்வகையான பொறுப்புணர்வையே நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன். எனக்கு தெரிந்து அதிகப்படியான குடும்பங்களில் குழந்தைகள் வளர்த்த பின்னும் பெற்றோரை சார்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெற்றோர்கள் பெற்றதனாலேயே தரவும் வேண்டும் என்கிற எண்ணத்தில் வளர்கிறார்கள். குழந்தைகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. நமது வளர்ப்பு முறையே அவ்வாறாகத்தான் உள்ளது.
என்னைப்பொறுத்தவரை, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கைகளை வளர்க்க உதவ வேண்டும். நம்பிக்கைஎன்றால், அவர்களது வாழ்நாளில் எந்ததினத்திலும் அவர்கள் தனித்து கைவிடப்பட்ட நிலையில் - கையறு நிலையில் - தள்ளப்பட்டாலும் மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து உற்சாகமாக தொடங்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், அந்த நாள் அவர்களது அறுபதாவது வயதில் ஏற்பட்டாலும் சரி. எளிமையாக சொல்லவேண்டுமானால், ஒருவர் நடுத்தெருவுக்கு (!) வந்தாலும் வாழ்கையை சுவாரஷ்யமாக எதிர்கொள்ளும் திராணியை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். அதைத்தான் பெற்றோர்களுக்கான பொறுப்புணர்வு என்று நான் சொல்லுகிறேன்.
இங்கு நிலைமை அப்படி இல்லை. எந்த பள்ளியின் பாடத்திட்டமும் நம்பிக்கையை முன்னிறுத்துவது இல்லை. குடும்ப நபர்களும் அவ்வாறே. தமிழ்ச்செல்வன் சொன்னது போல இந்த இந்திய தேசமே 'பெயிலாய்ப் போனவர்களின்' தேசம் என்பது தெரியாமல் நாம் பாடப்புத்தகப் பொதிகளை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறோம். நமது தேசத்தின் மொத்த வளர்ச்சியில் பள்ளித்தேர்வுகளில் தோல்வியுற்றவர்களின் பங்கு அறுபது சதத்திற்கு குறையாது என்பது கண்கூடு.
இதனடிப்படையில்தான் நான் ஆண் மற்றும் பெண் மனக்கூறுகளால் ஆன குடும்ப அமைப்பில் ஆண்களைப் பற்றியும் பெண்களைப்பற்றியும் நான் புரிந்து வைத்திருப்பவற்றை பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.
...................................... தொடரும்.
********************

19 February, 2010

சுயம்

நான் யார். தெரியவில்லை என்று ஒதுங்கி போகாமல் ஏதாவது சொல்லவேண்டும். இது எனக்கு சுயவிருப்பமாக (பர்சனல் அர்ஜ்) உள்ளது. இது ஆன்மீகத்தேடல்தொடர்பான கேள்வி இல்லை. இந்த சமூகச்சூழலில் என் மனம் என்னவிதமாக உருவாக்கி இருக்கிறது என்பது பற்றிய ஒரு சுய விமர்சனம். என் மனநிலை (ஸ்டேட் ஆப் மைன்ட்) என்பதை நான் எவ்வாறு அமைத்துக்கொண்டுள்ளேன் என்கிறது பற்றிய எனது எளிய வாக்குமூலம். இது யாருக்காக என்பதை இறுதியில் சொல்கிறேன்.

நல்லது - கெட்டது :

என்று எதுவும் இல்லை. மனிதர்களின் பழக்கங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கு ஒப்ப நல்லவை கெட்டவை என தீர்மானிக்கப்படுகின்றன. புகை, மது, பெண் ( பெண்களுக்கு ஆண்) ஆகியவை பொதுமைப்படுத்தப்பட்ட கெட்டபழக்கங்களாக உள்ளன. இதை நான் திண்ணமாக மறுக்கிறேன். பொய் சொல்லுதல், பொறாமைப்படுதல், திருடுதல், பழிசுமத்துதல், பிறன்மனை விழைதல் போன்ற இன்னும் பலவிதமான பழக்கங்கள் மனிதர்களின் வளர்ப்புச்சூழலில் உருவாகும் மனவியல் பக்குவம் என்பது என் எண்ணம்.

ஆண் - பெண் :

என்பவர்கள் உடல் அடிப்படையில் வேறுபட்டவர்கள். மன அடிப்படையில் வேறுபாடு அற்றவர்கள். மீண்டும் இதற்கு வளர்ப்புச்சூழல் காரணியை நம்புகிறேன். இது அடிப்படை. மாறாக, நான் பல சந்தர்ப்பங்களில் ஆணாக இருப்பதற்காக குற்றவுணர்வு அடைந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஆண் என்பவன் ஒரு மொன்னையான இயற்கை அமைப்பு. ஒற்றைபுரிதல் ஆணின் மன இயல்பு. பெண் பலவித (மல்டிப்பில்) புரிதன்மை அமைப்பு. ஆண் பனைமரம் என்றால் பெண் வாழைமரம். வேறு வேறு வகை. வேறு வேறு இருப்பு. மூளைச்செயல்பாடுகள் மட்டும் ஒன்று.


கடவுள் :

இல்லை. கடவுள் என்கிற கருத்தாக்கம் மட்டுமே இருக்கிறது. கருத்துக்களை நான் ஒருபோதும் நம்புவதில்லை. சில கூட்டு மனங்களின் நம்பிக்கைகள் சில நேரம் பலிக்கிறபோது நிகழ்தகவின் குழந்தையான 'தற்செயலையே' நான் கடவுளென தீர்மானிக்கிறேன்.


நட்பு:

எனக்கு நட்பில் பால்பேதமில்லை. ஒருவரை பிடித்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் நண்பர்தான். கொலைகாரர், திருடர், புரம்சொல்லுபவர், பாலியல் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என அவர்கள் எவ்வாறு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. யாரையும் எனக்கு கேவலமாக நினைக்கத்தோன்றாது. பிடிக்கவில்லை என்றால் சுத்தமகாக ஒதுங்கிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். எனக்கு உலகத்தில் அனைவரையும் பிடிக்கும் அரசியல்வாதிகளைத்தவிர.


அரசியல்: கட்சிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இனிமேலும் இல்லை.


கலாச்சாரம்-பண்பாடு: எதுவும் இல்லை. திராவிடன் என்பதில் லேசான பெருமிதமுண்டு.


மதம்: புத்தம் தேவையாக இருக்கிறது. சமணம் விருப்பமாக இருக்கிறது. இசையும் நடனமுமாய் இருந்தால் மகிழ்ச்சி.


மரணம்: என்பது முற்றுப்புள்ளி. எளிய, உறுதியான மருத்துவச்செயலிழப்பு (டெத் இஸ் கிளினிக்கல்). ஆன்மாவையும் மறுபிறப்பையும் திண்ணமாக மறுக்கிறேன்.


அறம்: சுதந்திரம். என் அறம் சுதந்திரம். நான் ஏற்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு கருத்தும் என்னால் சுதந்திரம் என்கிற சிக்கிமுக்கியில் உரசிப்பார்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டவை.


இந்த சுருக்கமான மற்றும் முட்டாள்தனமான வாக்குமூலம் எதற்கு: எனது மன - சிந்தனைப்போக்கு மேற்கண்டவைகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதன் மூலம் எனது இரண்டு மகன்களுக்கும் (அவர்களைப்போலவே ஆன ஆண் சிறுவர்களுக்கும் ) தெளிவுபடுத்தவே. எதிர்வரும் கடுமையான, காழ்ப்புணர்வும், பொறுப்பற்ற தனிமனித மற்றும் சமுதாயச்சூழலும் நிறைந்த காலத்தில் ஆண்களென அவர்கள் நுழைகிறார்கள். அவர்களுக்கு நான், ஆணாகிய நான் எவற்றை சொல்லி அனுப்புவேன் ? எதையும் சொல்ல வேண்டுமாவென்றும தெரியவில்லை. எல்லாக்குழந்தைகளைப்போலவே அவர்கள் ஊடக கற்பிதங்களையும், திரைப்பட நாயகர்களின் பிரதிமைகளையும் , மோசமான பாடத்திட்டங்களின் மத்தியிலும் வளர்கிறார்கள். சகோதர்களுக்குள்ளே குரோதம் பேணுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என் பொறுப்புணர்வின் மேல் கடும் கேள்வி எழுகிறது. வெறும் பொருளாதரத்தை சேமித்து வைத்தால் சரியாகிவிடுமா?


உணவுக்காவும் இருப்பிடத்திற்காவும் பாதுகாப்பிற்காவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி போல வாழும் எனக்கு நிறைய எழுதத்தோன்றுகிறது. மனஅழுத்தம். பிறகு எழுதுகிறேன்.
*********************

16 February, 2010

தினம்

தாய்மார்கள் தினம் , காதலர் தினம் போன்று ஒரு நாளை ஏதாவது ஒரு தினமாக கொண்டாடுவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. உலகத்தில் எத்தனை நாட்களை என்னவிதமான தினமாக கொண்டாடுகிறார்கள் என்று கணக்கிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் எதிர்க்கிறார்கள் என்கிற ஒரு காரணம் போதும் காதலர் தினத்தை நான் ஆதரிக்க! தமிழ் பண்பாடு போல வேறு எந்த கலாச்சாரத்திலாவது மாதம் ஒரு பண்டிகையை பார்க்க முடியுமாவென தெரியவில்லை. சித்ரா பௌர்ணமியில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகை நாள்! ஆடி மற்றும் மார்கழியில் மொத்த மாதமுமே கொண்டாட்டங்கள்தான். நான் ஏன் தினத்தை ஒரு ஏதாவது ஒரு உணர்வு நாளாய் கொண்டாட விரும்பவில்லை என்றால், அந்த ஒரு தினத்தை தவிர மற்ற நாட்களில் அந்த உணர்வு பற்றி ஒரு அக்கறை குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதனால்தான். தினக்கொண்டாட்டங்கள் என்பவை நுகர்வுக்கலாச்சரத்தில் பலியாடுகளாக்கப்படும் மக்களின் சொத்துக்களை பறிக்க ஏற்பாடு செய்யும் வியாபாரத்தந்திரம். சகோதரிகளுக்கு மஞ்சள் புடவை எடுத்துக்கொடுப்பது (இப்போது சிவப்பு புடவை) போன்ற சுவாரசியமான பயங்கரங்கள் போன்றவை இது. எனக்கு மிகவும் எரிச்சல் வரவழைக்கும் தினக்கொண்டாட்டம் எதுவென்றால் அட்சய திருதி

***********
சிவராத்திரி கொண்டாத்தன்று ஜீ தமிழ் ' அலைவரிசை பார்த்தவர்கள் ஒரு அருமையான இசை ஆன்மீகத்தை அனுபவித்திருப்பார்கள். மிகவும் ரசித்தேன். விக்கு வினாயக்கின் கடம் அதில் உச்சம். மற்றபடி மகாசிவராத்திரி என்பது எனக்கு சிறுவயது கிராமத்தில் தோழிகளுடன் சேர்ந்து சினிமா பேர்சொல்லும் விளையாட்டு விளையாடியதும் சொட்டாங்கல் விளையாட்டு விளையாடியதுமான என் பாட்டி வீட்டு திண்ணை ஞாபகம் மட்டுமே. இந்த சினிமா பேர் சொல்லும் விளையாட்டை இப்போது விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தை சொன்னால் படம் பேர் சொல்ல வேண்டும். பாட்டும் பாடுவோம். பாட்டுக்கு பாட்டு. சிலோன் ரேடியோ மாதிரி அதுவும் தொலைந்து விட்டது.

விளையாட்டு என்றதும் நான் (நாம்) விளையாடிய விளையாட்டுக்களை எண்ணிப்பார்த்தேன். கிட்டி, ஜெப்பா கல், தட்டை பெண்டில் காத்தாடி செய்வது, சினிமா பிலிம்களை சேகரிப்பது, சிகரட் அட்டைகளை சேமிப்பது, உண்டி வில்லில் கரட்டாண்டி வேட்டை, வெடி தேங்கா போடுவது, டயர் வண்டி, அம்புவில் செய்வது, கள்ளன் போலீஸ், நொண்டி, கம்மாயில் நீச்சலடிக்க போவது, எழந்த மற்றும் வழுக்கப்பழங்களை பறிப்பது, தலைவெட்டி செடி, கோவைக்காய் செடிபோன்றவைகளை தேடிப்போவது, டயரை எரித்து அந்த வெளிச்சத்தில் சோளக்கருது திருடுவது.. இன்னும் என்னென்ன...!!

**************



13 February, 2010

வெயில் பாலத்தின் குறுக்கில்நீளும் நினைவுக்கத்தி - 2

நீண்ட நாட்களுக்கு பின்சில பருத்திச்செடிகளைப்
பார்த்தேன். வரைமுறையற்ற
காடைமுட்டை அளவில் வெடிக்க
தொடங்கியிருந்தன வெயிலின் வாசனையிலிருந்த
பருத்திப்பூக்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
கடலைப் பார்த்தேன். பொங்கும் அலையடங்கி
பருத்தி வண்ண நுரைபெருக்கியது கடல். கை
நிறைய அள்ளி முகர்ந்தேன் தேனடை வாசனை.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
சூர்ய அஸ்தமனத்தை பார்த்தேன். ஒழுங்கான
வட்டத்தில் நின்று கடலையும் பருத்தியையும்'
சிவப்பாக்கிகொண்டிருந்த குருதிக்குழம்பு
கைகளில் கசிய
கடல் நீரில் கழுவினேன்
பருத்தியில் துடைத்துக்கொண்டேன் கைகளை.

நீண்ட நாட்களுக்கு பின் நான் நடந்த
தரையில் சிறிது காந்தமணலைப்பார்தேன். காந்தமானேன்.
காகிதத்தில் பிடித்த மணலை பிரித்தேன்
வீடாகியிருந்தது மனம் போல .

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மரணம்
பார்த்தேன். காந்த வீட்டிலிருந்து வெளியேறி
கடலில் காலைக்கழுவி
ஒரு பருத்திப்பூவை அதன் மேல் வைத்து
அமைதியாய் நின்றிருந்தேன்
நீண்ட நாட்களுக்கு பின்.

*************

12 February, 2010

வினோதம் 2

"பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள்". - என்று சொல்லியிருந்தேன். இதில் பாதுகாப்பு உணர்வை இழந்த ஆண் என்பதை நான் எப்படி வரையறுக்கிறேன் என்றால், பொருளாதாரம் மற்றும் காமம் இவை இரண்டுமோ அல்லது இவற்றில் எதோ ஒன்றோ ஆணுக்கு தொடர்ந்து கிடைக்காவிட்டாலோ அல்லது கிடைத்துக்கொண்டிருக்கும் சூழல் மாறுகிற நேரம் வரும்போதோ ஆண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறான். காமம் கிடைக்க எதிர்பால் தேவை, ஆனால் எனக்குத்தெரிந்து ஆணுக்கு பொருளாதார சிக்கல் வரும்போது பெண்ணைத்தான் நம்புகிறான். அதாவது அவனது அடிமனம் அப்படித்தான் இருக்கிறது. ஒரு விட்டேத்தியான கலைஞனிலிருந்து பெரிய தொழிலதிபர்கள் வரை இப்படித்தான் போல.
இவ்வகையான பாதுகாப்பு உணர்வை இழந்த ஆண் ஒரு பெண்ணை முழுவதுமாக நம்புவது அவனிடம் இயல்பாகவே எழுகிறது. அதற்காக சமூக அடிப்படைவிதிகளைக்கூட அவன் பொருட்படுத்துவது இல்லை. ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெற மண்ணை கூட உண்ணத்தயாராகிறான். தனது அனைத்து தந்திரங்களையும் ஒரு கைதேர்ந்த வேடனைப்போல உபயோகிக்கிறான். இழந்த பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெறுவதற்காக அதே பெண்ணை கொல்லகூட வேண்டியிருக்கிறது சில நேரங்களில். இதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து தப்பவே இப்போதைய நம் சமூக குடும்ப அமைப்புகளில் கவனமாக தன்னை இருத்திக்கொள்கிறான்.
அதே நேரம் தனக்குத் தேவையான எதை கொள்ளவும் அவன் குடும்ப அமைப்பிலிருந்து மிக சுலபமாக வெளியேறுகிறான். அவனால் முழுவதும் குடும்பம் தவிர்த்து இயங்க தேவையான அனைத்து இயங்குதளங்களையும் ஆணாதிக்க சமுதாயம் அவனுக்கு அளித்திருக்கிறது. ஒரு புள்ளி கூட மாறாமல் அவனால் தன்னுடைய குடும்ப அமைப்புக்குள் நுழையமுடியும், எந்த கணத்திலும்! (பெருங்காதல், அன்புக்காக எதையும் செய்வேன், நீ இல்லாமல் ஒரு கணம் உயிர் வாழ முடியாது .. போன்ற வசனகர்த்தாக்கள் அறியாமையில் உழலும் பேதைகள் என்பதே என் தாழ்மையான கருத்து, மேலும் இதே போல மத உணர்வுள்ளவர்களும் அவ்வாறானவர்களே).
ஆக, என்னைப்பொருத்தவரையில் ஒரு ஆண் பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெற ஒரு பெண்ணை நம்பி விடுகிறான். வேறு வழியில்லாமல். காமம் மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணங்கள் அற்று வேறுவகையான மனோவியல் காரணங்களை நான் இதில் இணைத்துக்கொள்ளவில்லை. சாதாரண பொது வாழ்வில் நடைமுறைகள் என்கிற முட்டாள்தனத்தால் விளையும் விளைவுகளையே நான் பொருட்படுத்தியுள்ளேன்.
இனி பெண்ணின் நம்பிக்கை பற்றிய என் பார்வையை அடுத்த பதிவில் சொல்ல முயல்கிறேன்.

******************

06 February, 2010

வெயில்பாலத்தின் குறுக்கில் நீளும் நினைவுக்கத்தி - 1

**

ஏனென்றால் அவன் தன்னை
அழைத்துக்கொள்கிறான் தன்னைத்தானே.
தன்னைத்தானே அழைத்துக்கொள்வதற்காக
தன்னை ஆயத்தப்படுத்துகிறான் தினமும்
சிலமணித்துளிகள் அவன் ஆடி முன்பாக
ஒத்திகை செய்துகொள்கிறான். பிறகு இன்று
தீர்மானிக்கிறான். கடற்கரை மணலை அள்ளி
வாயிலிட்டு கண்ணீர் வர இருமித்துப்புகிறான். பின்
அறைக்கு வந்து லாவகமாய் முப்பத்துஏழு
மாத்திரைகளை விழுங்குகிறான்.

**
இரவு முடிந்து பகலில் தெருவோர அரச
மரத்தில் தலைகீழாய் தொங்கிக்கொண்டிருக்கும்
காதலை தாருருண்டை அப்பிய அம்பால்
எய்து பறிக்கிறான். இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு
ஆகபெரும் அடிமை பாவத்துடன் அவன்

வீட்டினுள் நுழைகிறது காதல்.

**

காதல் இருக்கும் வீட்டிற்குள் வேறாரும்
நுழையக்கூடுமோ காமமென்ற ஆமைதவிர.
அவன் தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறான்
வீட்டினுள் நுழைகிறது காமமும் காதலும்
வெட்டப்பட்ட அரசமரம் வெற்றிடத்தில் முளைக்கிறது .
**************

04 February, 2010

பொறாமை!

நான் எழுதத் தயங்கும் நாவலை ஏறக்குறைய எழுதிக்கொண்டிருக்கிறார் எழுத்தாளர் கரிகாலன்.

படித்து பாருங்கள்: http://chikkymukky.com/

வினோதம்

இன்றைய தினத்தந்தி நாழிதளில் மூன்று விஷயங்கள். ஒன்று, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் என்கிற ஊரில் சுடுகாட்டுக்கு பாதை இல்லை என்பதால் இறந்தது போன நபரின் உடலை காற்றடைத்த லாரி டியூப்பில் பாடை செய்துவைத்து ஆற்றின் மேல் மிதக்க விட்டு சுடுகாட்டுக்கு இழுத்து கொண்டு சென்றிருக்கிறார்கள். பிறகு புதைத்தார்களா இல்லை எரித்தார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தின் அநேக கிராமங்களில் சுடுகாட்டு பாதைப் பிரச்சனை இருக்கிறது. இதை தொடர்ந்து கிராமங்களில் இருந்து அருகிலிருக்கும் நகரத்தில் மின்மயானத்திற்கு அவசரஊர்தி வைத்து கொண்டுவந்துவிடும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால் இது செலவு பிடிக்கும் சமாச்சாரம். போகிற போக்கில், 'உடல் தானம்' என்கிற விஷயம் புனிதசடங்காகி பிணத்தை அவர்களே வந்து எடுத்துப்போகவேண்டிய கலாச்சார சூழல் உருவாகிவிடும் போல. ஒரு வகையில் அது நல்லதுதானோ என்னவோ.
மற்ற இரண்டும் சினிமா விளம்பரங்கள். ஒன்று 'தமிழ்படம்' என்கிற சினிமா விளம்பரம். தமிழ் சினிமாவின் கேவலங்களை பற்றி படம் பண்ண அமைச்சர் குடும்பத்தில் இருந்துதான் தயாரிப்பாளர்கள் வரவேண்டியிருக்கிறது. அந்த படத்தின் விளம்பர வரிகளில் இயககுனருக்கு தொலைபேசி படத்தின் கதை என்னவென்று கேட்கக்கூடாது "தெரிந்தால் சொல்லமாட்டோமா' என்றிருக்கிறார்கள். நல்ல விளம்பரம்! இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை சினிமா டைட்டிலில் இப்படி ஒரு தொனி வரும் படியான வாசகம் பார்த்த ஞாபகம்.
இரண்டாவது, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு எம் ஜி ஆர் அடிப்பொடிகள் தோன்றி சினிமா எடுக்க கிளம்பி விடுகிறார்கள். இப்படி 'சின்னவர்' எத்தனை பேர் கிளம்புவார்கள் என்று தெரியவில்லை.இப்படத்தின் இயக்குனர் பெயர் எம் ஜி ஆர்நம்பி! தயாரிப்பு எம் ஜி ஆர் ஸ்டுடியோ ! எம் ஜி ஆர் நம்பியே இப்படத்தில் நடிப்பார் போல. 'கால பைரவி' என்பது படத்தின் பெயர்.


***********************

திருமண பந்தம் பற்றிய எனது அவதானிப்பில் வலு சேர்க்கும் மூன்று காரணங்களை கடந்த மூன்று நாட்களில் நான் அறிய நேர்ந்தது.

மெத்தப்படித்த ஆண், மாதத்திக்கு லட்சம் வரை வருமானம்! மெத்த படித்த பெரிய வேலை பார்க்கிற பெண் என்றால் தனது குடும்பத்தை புரிந்து கொண்டு நடக்கமாட்டார்கள் என்று கற்பனை செய்து, பத்தாவது படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்..மிகக்குறைந்த காலத்திலேயே மனிதர் திருமணபந்தத்தில் கடுமையான சோர்வு கொண்டுள்ளார். இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொள்ளவில்லை' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை இழக்கிறார். பெண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறார்.

எதிர்மாறாக இன்னொரு நண்பர் திருமணமாகாதவர் திருமணமாகி ஏறக்குறைய பத்துவருடங்கள் லௌகீக அனுபவம் பெற்ற பெண்ணை திருமணம் செய்கிறார். இதில் இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொண்டிருக்கிறார்' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை பெறுகிறார். பெண் பாதுகாப்பு உணர்வு அடைகிறார்.

அடுத்ததாக பத்தொன்பது வயது பெண்ண நாற்பத்தியேழு வயது திருமணமான, தினமும் குடிக்கிற ஆணை விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். காதல் என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால் அவர் தினமும் குடிக்கிறார் என்று காரணம் காட்டி பத்து வருடத்திற்கு பின் தனது மகனுடன் தனியாக வாழ்கிறார்.

மூன்று ஜோடிகளுக்கும் பொருளாதார பிரச்சனைகள் இம்மி கூட இல்லை. எனது கேள்வி என்னவென்றால்: ஆணால் பெறப்படும் நம்பிக்கை என்பது என்ன, அந்த நம்பிக்கை எதனடிப்படையில் ஆனது? பெண்ணால் பெறப்படும் பாதுகாப்பு உணர்வு என்பது எது, அந்த உணர்வு எதனடிப்படையில் ஆனது?

நான் என்ன சொல்லுகிறேன்: பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள். அல்லது சுத்தமான காதலால் எதிர்பால் எக்கேடு கெட்டாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக (காதல் என்கிற கற்பனைக்காக) தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.

நான் சொல்வது சரியா?

இது தொடர்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

*******************

01 February, 2010

என்றொரு ஆதிப்பெண் 5

*******************************


காமா..

ஒவ்வொரு துளியும் தீயென்னும் அச்சக்காடு
ககனத்தில் ஓங்கிய பெருவிருட்சம்
சாக்காடு எனும் முத்தத் திமிங்கலம்
தசை அறுந்து வடியும் குருதிச்சுவை
நாணம் விழுங்கும் வளையறுக்கும் வாள்
ஓங்காரம் ஒன்றின் ஒலிவடிவம்
நீ

திசைக்கொன்றாய் கூந்தல் நுனிகள்
அவற்றிலிருந்து வெளியேறும் நீர்ப்பறவை
மரகுறுக்கின் வரிகொள் வடிவம்
நிறமிழக்கும் யாழிசைக்குறிப்பு
நீ

தாவரங்கள் பரிமாறும் மகரந்த வாசம்
பலி கொள்ளும் அரவத்தின் கூர்நாக்கு
திறந்தவுடன் நிறைந்துவிடும் அகல்விளக்கு
சுயம் கொல்லும் காமத்தின் உடலுறுப்பு
நீ

தெருவோரம் தேங்கும் மழைநீர்புழுவின்
அழுகிய இருப்பு
நான்..

நிலவொளியில் ஊளையிடும் ஓநாயின்
வாயொழுகும் உமிழ்நீர் சுவை
அது.

முடிக்கத்தெரியா கவிதை நீ

முடிக்கமுடியா வெற்றிடம் நான்

கவிதை அது.

*******************************

இக்கவிதை முடிவுக்கு வருகிறது.

**********************************

அன்பு, நட்பு, கனவு.

****************

அன்பு.

" அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்; உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது" (deepaneha.blogspot.com) .மகளைப்பற்றி எழுதும் போது இவ்வரிகளை இவர் எழுதியிருக்கிறார். மகள் என்பதை எடுத்து விட்டு பார்த்தோமானால், காதலை அல்லது அன்பை இதைவிட அழுத்தமாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். எனது விருப்பப்பட்டியலில் இவர் "சிதறல்கள்" என்ற வலைப்பதிவை இணைத்து இருக்கிறேன்.

**********************

நட்பு.

இந்த உறவுமுறைக்கு மனிதர்கள் எவ்வளவு தெளிவுரைகளை எழுதிவிட்டார்கள்.! ஆனாலும் சில நேரங்களில் எவற்றிற்கும் அடங்காமல் தனித்து நிற்கிறது இவ்வுறவு. வாழ்வின் பெருந்துயரங்களில் ஒன்று நட்புமுறிவு. எனக்கு வாழ்வில் ஒருமுறை இது நடந்திருக்கிறது. ஒரேமுறை..! கல்லூரி காலத்தோழனவன். இன்றுவரை அது ஒரு கடுமையான கனவாக என் தூக்கத்தில் விழித்தெழுகிறது. சம்பவங்கள், அதற்கான காரணிகள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எல்லாம் கலவையாக கனவில் பரிமானங்களை வெல்லுகின்றன. நேற்றிரவு கனவில் நடந்த பயங்கரம் என்னவென்றால் ஒரு காரணம் இடமாக எனக்கு காட்சியளித்தது. அதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை.. ஒரு காரணம் எனக்கு சம்பவ இடமாக தெரிந்தது. சம்பவ இடம் அங்கில்லை. இப்பொழுது கனவில் வந்த எந்த முகமும் நினைவில் இல்லை.. சமீபத்தில் இறந்து போன எனது தாத்தா மற்றும் நடிகர் கவுண்டமணியைத்தவிர ! மறுபடியும் எனக்கொரு நட்பு முறிவுக்கான அறிகுறிகள் தெரிகிறது. இம்முறை தவறு என்னுடையதாகவே இருக்க விருப்பம்.

******************************

கனவு.

கனவு பற்றியும் நிறைய படித்தும் எழுதியும் இருக்கிறார்கள். என் நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இந்த உலகமே நான் காணும் கனவாய் இருத்தால் எப்படி இருக்கும் என்றார். "கனவில் பட்டுப்பூச்சியை கண்டேன். விழித்ததும் அதைக்காணவில்லை, இது நான் கண்ட கனவா அல்லது பட்டுப்பூச்சியின் கனவில் நான் விழித்திருக்கிறேனா" என்று எப்போதோ ஒரு வரி படித்த ஞாபகம். யார் சொன்னது என்று தெரியவில்லை. இந்த உலகத்தை நான் கனவு கண்டால் நன்று. என்னை யாரோ ஒருவர் கனவு கண்டுகொண்டிருந்தால்... அய்யோ.

************************