07 August, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 12

மூன்று நாளில் காடு தனது புதிர்களின் வாசல்களை காட்டத்தொடங்கிற்று. மரவல்லிக்கு வயிறு பழகிவிட்டது. சுனைநீரின் குளிர்ச்சி உடம்பிலொரு உறுதியை பரவச்செய்திருப்பதாக தோன்றியதை மார்கழரிடம் சொன்னபோது தனது பூடகச்சிரிப்பை வெளிப்படுத்தி நல்லது என்றார். மூன்றாம் பிறைவானம். தெளிவான இருளில் வெளிச்சக்கோடு நிலா. குளிர். பெருவாகையின் மீது அமர்திருந்தோம். இரவு. இல்லாத வானத்தில் கொட்டிக்கிடக்கிற மீன்கள். வெளிச்சப்புள்ளிச் சிதறல்கள்.

சென்னா .. கேள்.. மீன்கள் நமக்கு அதிகம் உபயோகம் இல்லை. அவை திசை காட்டும் கருவிகள். அவ்வளவே. நம் உயிருடன் பேசுபவை கிரகங்கள். அவைகளின் சுழற்சியை துல்லியமாக பார்ப்பவன் காலத்தை ஆள்பவன். நிலை மாறாத நிலையில் அவை சூட்சுமமாக இயங்குகின்றன. அவற்றை தொலைதூர சக்தியில் ஆட்டுவிப்பவை மீன்கள். கூர்ந்து பார். எது தெரிந்தாலும் அது விசும்பின் மொழி. கனவுகளில் நிலைக் கொள்ளும் விநோதங்களின் விடைசொல்லிகள் மீன்கள். கனவுகள் மீன்கள் மற்றும் கிரஹங்களின் கலவையில் காலத்தை கணித்தல் வித்தை. அது வெறும் பார்வையில் கைகூடாது. பார்வையில் குரோதமும் வலிமையையும் கொண்டு தூரங்களைக் கணக்கிடல் என்பதே சூத்திரம். கிரஹங்களின் ஆலகாலம் பூமி. நீலம் பாரித்த இவ்விசத்தில் முகிழ்த்தது உயிர் எனும் இயக்கம். உயிர் கொடுக்கும் உயிர் எடுக்கும் விசைச்சுழிகளின் அனுபந்தம். நிகழ்கிற போதே நிகழாமல் போகிற நிகழாமல் போகப்போகிற நிகழ்ந்து போன நிகழப்போகிற அனைத்தையும் கருக்கொள்ளும் மகா கர்ப்பக்கிரகம் பூமி. நாம் அதன் சுட்டு விரல்கள். பூமி எதை நினைக்கிறதோ அதை நாம் ... மனிதர்களாகிய நாம் சுட்டுகிறோம். மிக எளிய சுலபமான நிகழ்வு நம் இருப்பு. எப்பொழுதும் ஒரு குறிக்கோலுக்கானது. அதற்கு அதாவது தனது குறிக்கோளை செய்யும் பூமியின் எதிர்பதத்தை அறிய முனைவது சாஸ்த்திரம். பூமிக்கு எதிராக எனவே மனிதர்களுக்கு எதிரானதாக முன்னிறுத்தபடுவது சாஸ்த்திரம். சாஷ்திரத்தை உருவப்படுத்தியது மனிதகுலம். அதன் அழிவுக்கு தன்னை தானே தயாரித்துக் கொள்வது என்பது இயக்கத்தின் விதி. இல்லாத காலத்தை கணிதத்தில் அடக்கியது அதன் முதல் படி. குலம் அழிய அதன் மூலம் பூமி அழிய இறுதியில் கிரகங்கள் அழிய விசத்தாலான இப்பூமியின் விரல்கள் கண்டடைந்தது காலக்கணிதம்.

அடர்ந்த வாகையின் கிளையில் அமர்திருந்த சென்னா இவற்றை கேட்டான். ஆனால் எதுவும் விளங்கவில்லை. அதை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை. பகலின் தூக்கம் இரவில் தூக்கத்தை இல்லாமல் பண்ணியது. தூரத்தில் ஒரு உறுமல் கேட்டது. அரவக்குரல். அது ஒரு சிம்மத்தில் கசடு. இரை முடித்த சுக முனங்கள். வேறெங்கோ ஒரு யானையின் பிளிறல். கானகத்தின் உயிர்மொழிகள் இவை. இவற்றைப்பற்றி கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கேட்காத ஒலியைக் கேள் என்றார். சென்னா கோபமடைந்தான். ஏன் இந்த கோபம். ஆனால் இவற்றை கேட்காமலும் இருக்க முடியவில்லை. மோப்பமும் கேள்வியும்தான் கானக குறிகள். அவற்றிடம்தான் காடு தன்னை வெளிப்படித்தும். பார்வை வெளிச்சத்தால் ஆனது. வெளிச்சம் காட்டின் எதிரி. அதே போல புதிய சப்தமும். வெளிச்சத்தைவிட புதிய ஒலிக்கு காடு பயங்கொள்ளும். தன்னை மறைத்துக்கொள்ளும். புது ஒளியை ஒலியை வெளிப்படுத்தாத எதனிடமும் காடு பேசும். ஆனால் வானம் வேறு. ஒளியும் தூரமும் அதன் கண்ணும் செவியும். வானமும் வனமும் ஒன்றில் இணைக்கலாம். சென்னா .. மகா விந்தையது.. அவையிரண்டும் உறவுகொள்ளும் புள்ளி காலம். காலம் என்ற ஒன்று இல்லை. அதை கணிதத்தில் அடக்கியவன் மனிதன். இப்பொழுது அனைத்தும் காலத்துள் அடக்கம். என்ன விந்தை பார்.. காலம் உட்பட எல்லாம் காலத்துக்குள் அடக்கம். இங்கு பூமி என்பது பிரபஞ்ச விஷம். நீலம் அதன் வண்ணம்..

சென்னாவிற்கு இவையெல்லாம் கடும் எதிர்மறையாகப் பட்டது. பூமி விஷமாம். ஆனால் ஏனோ அவனது மனம் மட்டும் மார்கழரை எதிர்க்கும் எண்ணம் வரவில்லை. மேலும் அவர் சொல்வதில் ஒருவகை பூடக விருப்பம் இருந்தது. இவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கக்கூடாதா என்று ஆவல் எழுந்தது. பூமி நீலம். விஷம் அதன் தன்மை என்று அவர் சொல்வது எதோ ஒரு உண்மையின் பக்கம் நிற்பதாக அவனுக்குப் பட்டது. வானம் தானே நீலம். பூமி நீலமென யார் சொல்வது.. என்று கேட்டான். மார்கழர் அவனைப்பார்த்து சிரித்தார். நல்லது சென்னா.. உன் கேள்வி நல்லது. இதற்கு நான் என்னளவில் பதில் கூறும் முன் நீ சொல் சென்னா எது நிலத்தின் நிறம். சென்னா யோசித்தான். உண்மையில் அவனுக்கு தெரியாமல் போனது. ஒரு வகை மரத்தின் நிறம் என்றான். சட்டென்று மார்கழர் எழுந்து அமர்ந்தார். அவன் கண்களை உற்று நோக்கினார். இருள் கோடில் அவர் பார்வை அவனை ஊடுருவுவது தோலின் மீது ஊரும் அரவத்தை ஒத்ததைப் போல இருந்ததை உணர்ந்தான். தண்டு குளிர்ந்து. நீ தெர்தேடுக்கப்பட்டவன் என்பதை நான் மறந்துவிட்டேன். நல்லது. நீ சரியாகச்சொன்னாய். மர நிறம். மரத்திற்கு தனியாக நிலமிருக்கிறதா என்றார். அவன் விழித்தான். சிரித்தவர்.. பூமி தன்னை மறைத்திருக்கிறது சென்னா .. அழிவின் நிறத்திலிருந்து தனை விருப்பத்தின் நிறத்திற்கு ... நீலத்திற்கு. நீலம் விருப்பத்தின் நிறம். சற்று தூங்கு. உறக்கம் உனக்கு ஏதேனும் பதில் சொல்லும்.

*********


துரிதமொன்றும் இல்லை சாலை கிடக்கிறது தனியே. மிகத்தனிச்சாலையில் ஏன் உனக்கு துரிதம். நிதானமாய் வா. திசையற்ற சாலையது. ஒரு குழப்பமும் இல்லை. ஏதாவது தெரிகிறதா பார் அந்த மரத்தைத் தவிர. எதைக்கொண்டும் அளப்பதற்கு முயற்சிக்காதே. ஒரு வட்டத்தை சதுரத்தைக் கொண்டோ அல்லது ஒரு செவ்வகத்தை ஒரு சமபக்க முக்கோணம் கொண்டோ. நிலையாய் இருப்பதில் தவறு இல்லை என்பதுபோலவே எனை நோக்கி வருவதும் தவறில்லை. எல்லாவற்றிற்கும் ஒற்றை புள்ளிதான் ஆதாரமெனுபோது கோடுகள் வளைந்தால் என்ன. கோடுகள்தான் உருவத்தை அளிக்கிறதெனும்போது அமைப்புகள் பற்றிய கவலைஎதற்கு. காட்சிக்கு வெளிச்சம் ஆதாரமெனும்போது இருள் பற்றிய அறிவே நான். நிழல் பற்றிய பாடம் தேவையென ஒரு கரும் பறவை தேடி புறப்படுகிற கிளை கொண்ட மரம்தான் அங்கு நீ காண்பது. வெறுமை நிறைந்த சாலையின் ஒற்றை மரமது. காலமற்ற நீட்சியின் ஆலம். பிளிர்வேழம் கொண்ட மதமதுவுண்ட போதம் உனக்கு. சாயம் வெளுத்த புதைமணலின் பள்ளத்தாக்கு கொண்ட வெளியில் கடக்கும் ஒற்றை தனிமைச்சாலை. பறந்து போன பறவையும் நின்றிருக்கும் ஒற்றை மரமும் உனக்கு ஆயுதங்கள். நான் நிராயுதபாணி எப்பொழுதும் போல். வானம் எனது களம். அதுவே எனது ஆயுதம்... பறவை இருளில் கருமை வெளிச்சத்தில் நீலம். மரம் ஒற்றை நிறம் ... ஆயுதமேந்து விருப்பமெனும் நீலத்தை இடது பக்கத்திலும் அழிவெனும் மரநிழலை வலது பக்கத்திலும்...

********************

சென்னா ..... விழியடா.. உன் பொழுது விடிந்துவிட்டது பரிதி நிறத்தில்.

**********************

தொடரும்..

No comments: