30 September, 2010

வானவில்வண்ண மின்னல் 2


ரமேஷும் பத்மாவும் ஒரே கேள்வி கேட்டிருக்கிறார்கள். நல்லது. அறிமுகமில்லாத ஒரு பெண்ணும் ஆணும் அறிமுகமாவதற்கு ஒரு சூழல் தேவை. குறைந்த பட்ச நேரம் தேவை. உதாரணத்திற்கு நான் திருச்சியில் காலை ஏழு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வருகிறேன். ஒரு பையுடன் ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள். அவளுடன் பேசவேண்டிய எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. நேராக போய் உங்களிடம் பேச வேண்டும் .. ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாமா.. என்று சாதரணமாக கேட்கக்கூடிய சூழல் இங்கு இருக்கிறதா. இந்த சூழல் தேவையா என்பது வேறு விஷயம். ஒரு பெண்ணோ அல்லது ஆணோ இப்படி அறிமுகமில்லாத இடத்தில் அறிமுகமில்லாத நபரிடம் பேச முடிகிறதா.. அப்படி முடிந்தால், அந்த நபரின் எண்ணவோட்டம் எவ்வாறு இருக்கும்? ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேசினால்.. அந்த பெண் ஒரு பாதுகாப்பு உணர்வை அடைவது இயல்புதானே. புதிய ஆண் என்பவன் ஒரு பெண்ணுக்கு சற்றும் பாதுகாப்பில்லாதவன். அதே போல ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசினால் அந்த ஆணுக்கு அந்த பெண் மீது ஏற்படும் கண்ணோட்டம் இயல்பாகவே தவறாக இருக்கும். முதற்பார்வையில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதைத்தான் நான் சாத்தியமில்லை என்று கூறுகிறேன். ஒரு மூன்றாம் நபர் அல்லது செயல் என்பது இல்லாமல் நேரடி அறிமுக சாத்தியக்கூறு இல்லை என்றுதான் சொல்லவந்தேன். மேடம் இந்த கம்பெனியில் இருந்து வரேன்..இந்த பொருள் வாங்கிக்கொள்ள விருப்பமா.. என்கிற பொது செயல் ஒன்று தேவைப்படுகிறது.



நேரடியாக சென்று 'நான் மகேந்திரன், உங்களிடம் பேச வேண்டும்' என்று சொன்னால் அந்த பெண் போலீசுக்கு போய்விட வாய்ப்பு அதிகம். அப்படி பேசுவதற்கான மனநிலை ஆண்களுக்கு எதனை சதம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? குடித்து விட்டு அலையும் ஆண்கள் தனி. காதலுக்கு topogrphy முக்கியம். வாழும் சூழல். ஒரு ஆணும் பெண்ணும் அறிமுகமில்லை என்றாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அது செயற்கையாக கூட இருக்கலாம். ஒரு நாள் ஒரு பெண்ணை பார்த்தால்.. மீண்டும் அந்த பெண்ணை திரும்பத் திரும்ப பார்க்கும் வாய்ப்பை அவன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் முதல் விதி. அல்லது அவன் விதி!



காதலை விடுங்கள். நட்பு? பத்மாவும் ரமேஷும் போல எனக்கும் 'அதெப்படி' என்று தோன்றியது. ஆனாலும் ஆண் பெண் நட்புக்கு திடமான ஒரு காரணி இருக்கவேண்டும். இல்லையென்றால் முடியாது. புது ஆணை ஒரு பெண் நிராகரிப்பது மட்டுமே இயல்பு. மனதளவில் அவனை பிடித்திருந்தாலும் அறிமுகத்திலேயே அவளது மனநிலையை சொல்லிவிட மாட்டாள். ஏனென்றால் அது முடியாது. சமூகம் அப்படித்தான் இருக்கிறது. ஒரே விஷயத்தை மூன்று பாராக்களில் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறேன்!

பத்துவும் ரமேஷும் தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலம் இதை ஒரு உரையாடலாக்க விரும்புகிறேன்.

*************************

ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை. - இப்படி ஒவ்வொன்றுக்கும் முரண்பாடான வாக்கியங்களின் நேரடி தொடர்புபற்றி இதில் விளக்க முயல்கிறேன். தொடர்ந்து கேள்விகள் கேட்டால் கோர்வையாக இந்த விவாதத்தை ஒருங்கிணைக்க வசதியாக இருக்கு. பத்மா,ரமேஷ், வசுபாரதி, கௌசல்யா,கொற்றவை, சுரேஷ் ஆகியவர்களிடம் கேள்விகளை எதிர்பார்க்கிறேன். தம்பிகள் பாலாவையும் பாலாசியையும் வரவேற்கிறேன்.

***************************************************

5 comments:

வசுமித்ர said...

ஆண் பெண் நட்புக்கான தேவை, மற்றும் நோக்கத்தை விளக்கவும். இதில் தத்துவப் பிரச்சினையை அடுத்து எழுப்புவோம்.

கொற்றவை said...

எனக்கும் அதேக் கேள்வி தான் வசு. இவர் குறிப்பிட்டிருக்கும் வானவில் நிகழ்சியில் நட்பின் தேவையா தெரிகிறது. ஆணின் பாலியல் பார்வை தான் தெரிகிறது. பெண்களுக்கு தங்கள் அழகு / தோற்றம் சார்ந்து கிடைக்கும் அறிமுகம் / அங்கீகாரம் என்பது இருப்புநிலையை உயர்த்தும் ஓர் விஷயமாக ஆண்கள் தோற்றுவித்திருக்கிறார்கள். அதுவே பெண்களின் உடனடி ரெஸ்பாண்சிற்கு காரணம்... பார்க்கும் பெண்களிடமெல்லாம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள துடிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அதற்கு நட்பு ஆசை என்று கூற முடியாது.

பல விதமான exploitation நிலவுகிற இந்தக் கணினி யுகத்தில் அறிமுகமில்லாத ஆணிடம் பெண் கொள்ளவேண்டியது எச்சரிக்கை, நட்பல்ல.. இத்தொடர்புகள் நல்ல நட்பில் முடிய வாய்ப்புகள் குறைவு.

// ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பேசினால்.. அந்த பெண் ஒரு பாதுகாப்பு உணர்வை அடைவது இயல்புதானே // - ஆணாதிக்க statement மகி..

கொற்றவை said...

ஓர் திருத்தம் - வசு பாரதியல்ல வசுமித்ர

பத்மா said...

புது ஆணை ஒரு பெண் நிராகரிப்பது மட்டுமே இயல்பு. மனதளவில் அவனை பிடித்திருந்தாலும் அறிமுகத்திலேயே அவளது மனநிலையை சொல்லிவிட மாட்டாள்.


நீங்கள் இன்னும் அந்த கால படங்களின் formula வில் இருக்கிறீர்கள்.. அப்போது மோதல் //பிடித்தமின்மை பின் காதல்.. இப்போது நாம் அதைப் பற்றி பேச வில்லை என்றாலும் ,நட்பில் நிராகரிப்பெல்லாம் வராது...காரணி... ஆம் எதற்கும் காரணி வேண்டும் தான் ...(எல்லாவற்றிற்கும் அல்ல ...இது வேறொரு விவாத பாயிண்ட் )அனால் நிராகரித்து பின் நட்பு பாராட்டுதல் எல்லாம் கதை போல் உள்ளது ..நட்பு வேண்டுமென்றால் ஒரு பெண்மணி அதை என் மறைக்க வேண்டும்?நிராகரிக்க வேண்டும் ? probably அதை எதிர்கொள்ளும் ஆணின் மனநிலைக்கு பயந்து?

Nathanjagk said...

மகி,
முதலில் அறிமுகமில்லாத ஆணும் பெண்ணும்.. என்ற வாக்கியமே வித்தியாசமாகப் படுகிறது.
பழகிய முகத்திற்கு எதற்கு அறிமுகம் வேணுமாம்? புதிதாக சந்திந்துக் கொண்டவர்கள் திரும்ப, திரும்பப் பார்த்துத்தான் அறிமுகம் ஆக வேண்டும் என்பது காமடி!
திட்டம், இலக்கணம், வரையறை, கட்டுப்பாடு, சூழல், விதிகள் அல்லது மரபுகள் என எந்த கொள்கைக்கும் கட்டுப்படாமல் வருவதுதான் உறவு.

நான் ஒருவரைப் பிடித்துப் போய்விட்டால் முதல் சந்திப்பு, அக்கம்பக்கம் இத்யாதிகள் பார்க்க மாட்டேன்.
எக்ஸ்க்யூஸ் மீ, இந்த ட்ரஸ் நல்லா இருக்கு
எங்கே அந்த புக் அட்டையைக் கொஞ்சம் திருப்புங்க (சிலசமயம் நானே திருப்பிப் பார்த்துவிடுவேன்)
இன்னொரு தரம் சிரிங்க
இந்த மொபைல் பெர்பார்மன்ஸ் எப்படி....
இந்த கதியில்தான் நான் வாழ்கிறேன். ஆண்களிடம் எவ்வளவு சீக்கிரம் பழகுகிறேனோ அதேயளவு பெண்களிடமும் பழகவேண்டும் என்பதே என் அவா.
ஒத்த பாலினர் அறிமுகப் பழக்கம் கொள்ளும் போது எவ்வித தயக்கமும் இருப்பதில்லை. மாற்றுப் பாலினருடன் அறிமுகமாகும் போது நாடகத்தன்மை ஒட்டிக்கொள்கிறது. அது ரசிக்கத் தக்க மாதிரி வைத்துக் கொள்ளவே நாம் முயலவேண்டும்.
புதிதாக பார்க்கிற பெண்களிடம் இயல்பாக பேசவேண்டும். மனம் நம்மிடமிருந்து தாவி ஒரு பெண்ணிடம் செல்கிறது என்றால் காதலாகி கசிய வேண்டும். என்னால் ஒரு பெண்ணிடம் இரண்டாவது நிமிடத்தில் ஐ லவ் யூ சொல்ல முடியும். என் வார்த்தைவங்கியில் ஈர்ப்பு அங்கீகாரத்திற்கான சொல் ஐ லவ் யூ. அது ஒருவரின் பழகும் தன்மை, உடல்மொழி, முகவடிவு, உடலமைப்பு, குணாதிசயம் போன்ற எது ஈர்த்தாலும் அதை பாராட்டிவிடுகிறேன்.

அறிமுகமானவர்களே (அதாவது ஒரே தெருவிலோ சந்திலோ அலுவலகத்திலோ செயற்கையாக திரும்ப திரும்ப எதிர்கொள்ளப் பட்டவர்கள்) "காபிக்கு வா" நட்பாக முடியும் என்றால்.. அப்ப நாமெல்லாம் (பிளாக் தோழர்கள்) என்னவாம்?