08 December, 2010

பூனையென்பது கடலில்லை.

நண்ப

வெயிலற்ற மதியமொன்றின் அடர்வாகனச் சாலையோரம் கேட்க நேர்ந்த ஒரு பூனையின் விளிப்பு எல்லாம்வல்ல மரணத்தின் திசை மாற்றியது. நீயாக இல்லாத உன்னை பகடிசெயும் குரல் எப்படி வாய்த்தது அப்பெண் பூனைக்கு என அறிய நேர்ந்தபோது இரண்டு மதில்களுக்கு இடையில் வாலைத்தூக்கியபடி நடந்துதான் சென்றது என்னால் தொடர முடியாதொலைவை கடந்து. தரையில் நடக்கும் பூனையை மதில்மேல் நிறுத்தும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டிருக்கும் உன்னிடம் எனக்கு கேள்விகள் கிடையாது என்றாலும் என்னிடம் ஒரு சுவரை கட்டி எழுப்பும் வரைபடம் உண்டு. வெளியால் ஆன சுவர்.

நண்ப

உடலில் இருந்து மருத்துவன் ஒருவனால் கவ்வை கொண்டு வெளியே எடுக்கப்பட்ட உலோக ரவை போலதென் இருப்பு. உடனடிப் பயன் எதுவும் என்னிடமில்லை என அறிந்தே அப்பூனை அழைக்கிறது தனத்தான உயிரறுக்கும் குரலில். பூனையின் குரலென சொன்னாலும் நானும் நாம் நடக்கும் நடைபாதைப் புல்லும் கள்மரம் விலகி அமரும் புள்ளும் அறியும் அது உன் குரலென்று.

நண்ப

நீ மதிலாகிறாய் நீ பூனையாகிறாய் நீ பூனையின் குரலாகிறாய் மதிலேராமல் தரையில் நிதானமாய் நடக்கும் பூனையின் வாழ்வுமாகிறாய். என்னை சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களும் பூனைகளாய் மாறித் துரத்த சந்தில் நடக்கும் ஒற்றைப் பூனை குட்டிப் பல்சராய் மாறி ஹாரன் அடித்து விலகச்சொல்லி வழி கேட்கிறது. நான் அருகிலிருக்கும் கடலுக்குள் ஓடுகிறேன் என்னை காப்பாற்றிக்கொள்ள நீ ஒரு போதும் கடல் ஆக மாட்டாய் என அறிந்தவாறு..

2 comments:

பத்மா said...

hi after a long time ..

nice one enjoyed reading

Raja said...

தரை நடந்த பூனை, தாவி மதிலேறும் வேகத்தை இறுதி பத்தியின் வார்த்தைகளில் கண்டேன்...நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்