28 March, 2012

வவ்வால் கூட்டம்.



குறைந்தது மூன்று மன்னிப்பு கோரல்கள் இருக்கிறது. இறுதியில் கேட்டுக் கொள்கிறேன். லக்ஷ்மியுடன் சேர்ந்து ஒரு இலக்கிய நிகழ்வை - குறிப்பிட்ட பெயரும் எவ்வித அமைப்பும் சாராமல் - தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் வவ்வால் பூத்த மர நிழலில் நடத்தினோம். (24.03.2012 -25.03.2012). பத்தாண்டு கால நாவல் மற்றும் சிறுகதைகள் சிலவற்றைப் பற்றிய விமர்சன அரங்கமாக அமர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முழு சிந்தனையும் லக்ஷ்மி உடையது. அரங்கில் விவாதிக்கும் புத்தகங்களின் பட்டியல் தயாரிப்பில் கூட நான் இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஏனென்றால் லக்ஷ்மியின் பட்டியல் ஓரளவுக்கு சரியாகவே இருப்பதாக பட்டது. நான் காமுத்துரையின் சிறுகதை தொகுப்பை மட்டுமே இணைத்துக்கொண்டேன். சிவகாமியின் தலைமையிலும் கோணங்கியின் தலைமையிலுமாக நடந்த அமர்வுகளில் ஒரு வாசகனாக எனக்கேற்பட்ட அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விருப்பம். (வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும்)

எவ்வித பின்புலமும் இல்லாத நட்பு பாராட்டும் இனிய ஒன்றுசேரலால் ஆன நிறைவான அமர்வுகளாய் இருந்தாலும் எனக்குள் எழுந்த முக்கியமான கவலை பெரும்பாலான எழுத்தாளர்களின் careless தனம். பொறுப்பற்றதனம் என்றால் அது எதிர்மறையான அர்த்தத்தை அளிக்கும். ஒருவித இளகிய சூழலில் பேச்சும் நடவடிக்கைகளும் இலகுவாக இருக்கலாம்.. விமர்சன கட்டுரையாக இருக்கும் போது - அது  பதிவாய் மாறும்போது - மிகுந்த கவனம் கொள்ளவேண்டியது அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

ரமேஷ், கோணங்கி, ப. வெங்கடேசன், சிவகாமி, விஜயலட்சுமி ஆகியவர்களிடம் இந்த பொறுப்புதன்மையை உணரமுடிந்தது. மற்றவர்களிடம் இல்லை என்று  சொல்லவில்லை நான் ஒருவேளை கவனிக்கத் தவறியிருக்கலாம்.  நான் பெயர் குறிப்பிட்ட நண்பர்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவர்களது ஆழமான பொறுப்புணர்வு என்பது வெளிப்படையானது என்றே நினைக்கிறேன். எனது மனதிற்கினிய நண்பர் (காதலர்)  யவனிகாவை careless   தனத்தின் உச்ச  எடுத்துக்காட்டாக  சொல்வேன். அவரது கூர்மையான அரசியல் அவதானிப்புகளின் - அதனூடாக அவர் எழுதும் கவிதைகளின் - ரசிகன் நான். (தொன்னூறுகளில் அவரது கவிதை ஒன்றை  கடித்ததில் எழுதி எனது காதலியை அசத்தியது நினைவுக்கு வருகிறது ..! ). ஒரு எழுத்தாளர் தனது நிலைப்பாட்டை மது போதையில் இருக்கும் போதும் இல்லாதபோதும் ஆணித்தரமாக எடுத்துரைக்க தெரிந்திருக்க வேண்டும். போதை அற்ற நேரத்தில் அமைதியாக சொல்லுவதை போதை ஏறியவுடன் வெறித்தனமான கருத்துத் திணிப்பாக மாற்றினால் மனதில் வருத்தம் மட்டுமே மிஞ்சும். மானிடவியல் கருத்தாக்கங்களில் யவனிகாவின் நிலைபாடுகள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை. மதுவற்ற உரையாடல் ஒன்று அமைந்தால் எனக்கு பேச நிறைய இருக்கிறது. யவனிகாவை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே இங்கு குறிக்கிறேன். இவ்வகையான ஆளுமைகள் பலர் உண்டு. அவர்கள் அனைவரையும் நான் மதிப்பதால் மட்டுமே இதை ஒரு விமர்சனமாக முன்வைக்கிறேன்.

வாசிக்கப்பட்ட சில கட்டுரைகள் வெறும் கதை கூறல் மட்டுமே என்பது இந்த 'கேர்லெஸ்' தனத்தின் மற்றொரு பிரச்சனை. தொகுப்பாக ஆகும் பட்சத்தில் இவ்விதமான கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களுடன் ஆழமான விவாதம் செய்து செம்மைப்படுத்தி இணைக்க எண்ணம். லக்ஷ்மியிடம்  இதுபற்றி பேச வேண்டும்.

நடந்த இரண்டு நாள் அமர்வுகளில் எனக்கு சில நட்புகள் புதிப்பிக்கவும் சில நட்புகள் உருவாகவும் சந்தர்பம் வாய்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம்.

இனி மன்னிப்பு கோரல்கள்:

ஒன்று: மிக கவனமாகவும் பொறுப்புடனும் நடத்தப்படவேண்டிய இம்மாதிரியான நிகழ்வில் சற்று  அசட்டையாக நடந்து கொண்ட எனது பொறுப்பற்ற தனத்திற்காக வந்திருந்த அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பை கோருகிறேன். (குறைந்தது  உணவு நேரத்தையாவது சரியாக தீர்மானித்திருக்க வேண்டும்).

இரண்டு:

நிகழ்வுக்கு நான் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் மூன்று பேரை நான் அழைக்க கடமைப்பட்டிருந்தும் மூளைக்குள் உரைக்காமல் போனது எனது துரதிர்ஷ்டம். அவர்கள்: சைதன்யா, மு.ஹரிக்ருஷ்ணன், பாஸ்கர் சக்தி மாமா. இதில் ஹரியின் குறும்படத்தை திரையிடலாம் என்று வேறு நானே அவரிடம் கூறியிருந்தேன்.

மூன்று:

மறந்து விட்டது ஞாபகம் வரும்போது கேட்டுக்கொள்கிறேன்.


மன்னிச்ச்சு........ !


அனைவருக்கும் நன்றி.




No comments: