19 October, 2009

வியப்பின் பாடல்

காதலை பற்றிய பாடல்
ஒன்றை எழுதத்தேவையான
கச்சாபொருளை
எப்படி சேர்ப்பேன்
மனித கூட்டமாய் அது
இருக்கும் போது
அதிகாரப்படுதலில் ஆனந்திக்கும்
அதற்குத்தான் எத்தனை வேலைகள்
அவர்களின் தொலைந்து போன
கச்சா பொருள் காதல் தான் என்றால்
உருளைக்கிழங்கு கொதிக்க வைக்கும்
கலன்களில் என்னை அழுத்துகிறார்கள்
சமனற்ற உருளைக்கிழங்குகள்
கொதித்து நொதித்து இனிமையும்
தெயவீகமானதுமான சாராயம் வடிவது போல
நான் சொட்டு சொட்டாய் கரைவதை
அவர்கள் அலச்சியம் செய்கிறார்கள்
காற்றில் நான் மது வாசமாய் திரிகிறேன்
காற்று மாசு என்று எனை காணும்போதெல்லாம்
நாசி மூடுகிறார்கள்
நான் காதலை மட்டுமே பாடுகிறேன்
அதை அவர்கள் ஆணின் கொழுப்பென
நாய்களுக்கு இரையிடுகிறார்கள்
அவற்றை யுண்டு நிலவை பார்த்து
ஊளையிடும் நாய்களின் சத்தம்
காதலின் கச்சா பொருளென
என் விரல் நகங்களில் படருகிறது
கனவில் தூங்கிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு என் விரல்களை
உண்ணத் தருகிறேன்
உயிர் நடுங்க உறிஞ்சிக்குடிக்கும்
அவர்களின் முகத்தில் தெரிவது
என்னவென்று அறியமுடியா வியப்பு.

2 comments:

chandra said...

ஆதிரன் உங்கள் கவிதை வடிவம் மிக அழகாய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உங்களைப் போல் பரந்து விரிந்த காதலுடன் இரு கைகளை நீட்டி மொழியற்று எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளதான் ஆசை? அந்த மனநிலைக்கு என்னையும் என் கைக்குள் வந்துசேரும் மனிதர்களையும் தயார்செய்வதற்கே எனக்கு பல ஆண்டு காலமாகும். அதுவும் என் சமூக,பொருளாதார, அதிகாரத்தின் அடிப்படையிலேதான் அது மதிப்பீட்டுக்குள்ளாக்கப்படும் என்பதை நான் உணர்வேன்.அது உங்களால் விசாரணையின்றி செய்ய முடிகிறதென்றால் சந்தோசம்தான். ஆனாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட காதல் என்றென்றுக்கும் வேண்டிதான் இருக்கிறது.

adhiran said...

nanri thozhi.