18 November, 2010

வானவில் வண்ண மின்னல் 7

தேஜாவின் முகம் லேசான சோகத்தில் இருந்தது. என்னவென்று கேட்டேன். அப்பா திட்டிட்டார்.. மகி.. ஏன் அப்பா இப்படி இருக்கிறாரு.. என்னை புருஞ்சுக்கவே மாட்டேங்கறார்.. என்றான். நான் சொன்னேன்"எல்லா அப்பாக்களும் அப்படித்தாண்டா.. நாளைக்கு நீ அப்பாவானாலும் அப்படித்தான்". சிரித்தான். நான் அவனிடம் ஒரு சம்பவத்தை சொல்லத்தொடங்கினேன். நம்ம காந்தித்தாத்தா ஒரு தடவ ட்ரைன்ல அவர் பொண்டாட்டி கஷ்தூரிபாவோட போய்கிட்டு இருந்தாரு .. ஒவ்வொரு ஸ்டேசன்லையும் பயங்கரமான கூட்டம்.. எல்லா மக்களும் "மகாத்மா காந்திக்கு ஜே"ன்னு கோசம் பட்டைய கிளப்புது.. அப்ப வண்டி ஒரு ஸ்டேசன்ல நிக்கிது.. ஒரே கூட்டம் எல்லோரும் காந்தி கோசம் போடுறாங்க.. கூட்டத்துல ஒருத்தர் மட்டும் "கஸ்தூரிபாவுக்கு ஜே" ன்னு கத்திக்கிட்டே அவங்க பக்கத்துல போறாரு.. அவர பாத்து கஸ்தூரிபாவுக்கு கண்கலங்குது.. காந்திக்கு சங்கடம்..அந்த மனிதர் கஷ்தூரிபாவுக்கு பக்கத்துல போய் கையிலிருந்த ஒரு ஆரஞ் பழத்தை கொடுக்கிறார்..கஸ்தூரி அத வாங்கிட்டு என்கூடவே வான்னு அவர கூப்பிடுறார்.. அப்ப காந்தி அவரப்பாத்து எனக்கு ஏதும் இல்லையா..ன்னு கேக்குறாரு .. அதுக்கு அவர் "நீங்க உண்மையிலேயே மகாத்மாவா இருப்பீங்கன்னா அதுக்கு காரணம் கஷ்துரிபா தான் " அப்பிடின்னு சொல்றாரு. காந்தி அதை உண்மைன்னு ஒத்துக்கிறாரு. பிறகு தெருபைத்தியகாரன் மாதிரி கிழிஞ்ச சட்டையோட மிகுந்த போதையில இருந்த அந்த ஆள் கூட்டத்துல கலந்து வெளியேறி வரவங்க போறவங்ககிட்ட குடிக்க பணம் கொடுங்கன்னு பிச்சைஎடுக்க ஆரம்பிக்கிறாரு. அவர் பேரு ஹரிலால். மகாத்மாவோட முதல் மகன்".
"ஆக, அப்பனுக்கும் புள்ளைக்குமான உறவு அடிப்படையில முரணாத்தான் இருக்கு.. காரணம் மகன் மேல அப்பன் எடுத்துக்கிற உரிமையும் மகன் தான் ஒரு தனிமனிதன் என்று உணர்கிறதும் தான்னு நினைக்கிறேன்.. அதைவிட முக்கியமான காரணம் காலம். தலைமுறை இடைவெளி .. சராசரியா முப்பது வருசங்கள் இடைவெளி.. "
பணத்தை பத்தி சொல்றேன்னு கூப்டு இப்படி மொக்கைய போடுறீங்களே என்றான் தேஜா. இதுக்கே மொக்கைனா பணத்த பத்தி ஆரம்பிச்சா ஓடிப்போயிருவ போலிருக்கே.. சரிசரி.. ஆனா பணத்தை பத்தி சொல்லனும்னா மனித வரலாறையே மொத்தமா சொல்லணும். மனுசன் குரங்குல இருந்து வந்தான்கிற பரிணாம வளர்சியில எனக்கு நம்பிக்கை இருக்கு. அதானால நாம மனுஷங்களோட ஆதி வரலாறுக்கு போகத்தேவையில்ல. அதே சமயம் மனிதர்களோட தொடக்க வரலாற கொஞ்சம் தெரிஞ்சுக்கிறது நல்லது. மனிதர்கள் தனக்கு தேவையான உணவை இயற்கையில் கிடைக்கிற பொருட்களின் உதவியோட சேகரிக்க தொடங்கினபோது மனித வரலாற்றின் கற்காலம் தொடங்குது.
மனிதன் தனது தேவைக்காக தனது உடலை தவிர வேறொரு பொருளை உபயோகிக்க தொடங்குகிறான். பலவிதமான வடிவங்களைக் கொண்ட கற்களை அவன் உபயோகிக்க தொடங்குகிறான். இது அவனுக்கு இயற்கையில சில பொருட்களை தனது தேவைக்காக உபயோகிக்கலாம் என்கிற அறிவை தருது. இதன் மூலமா மனிதன் தனது சிந்தனையின் அடுத்த நிலைக்கு போக உடலை தவிர வேறொரு பொருள் உதவுது. ஆக மனித சிந்தனையில் 'பொருள்தான்' முதல். இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் இருக்கு. ஒன்று மனித சிந்தனைக்கு உதவிய விசயங்களில் முதல் (first) என்பதும் மற்றொன்று மனித சிந்தனை வளர்ச்சிக்கு அவனோட முதல் (investment) பொருள்தான் என்பதும்தான்.
ஒரு எழவும் புரியல மகி.. என்றாள் தேஜா.


யோசி.. போகப்போக புரியும்.. புரியனும்கிற அவசியமும் இல்லை.. மனுஷன் உடம்ப விட்டு இன்னொரு பொருளை உபயோகிக்க தொங்குறது என்பது எனக்கு வேறொன்னையும் தெளிவாக்குது. அது என்னன்னா மனிதன் இயற்கைக்கு முரண்படத்தொடங்கினான் என்பதுதான். ஆக முரண்பாடு என்பதுதான் மனிதனின் இன்றைய முழு வளர்ச்சிக்கும் ஆதாரம்னு சொல்லலாம். ஏன் அல்லது ஏன் கூடாது என்பதுதான் ஆதாரக்கேள்விகள். பிறகு மனித வரலாற்றில் மிக முக்கிய மூன்று கண்டுபிடிப்புகள் அவனின் அதிகாரத்தின் கீழ் புறஉலகை வரச்செய்தது. தீ. சக்கரம். வில் அம்பு. ஆனால் எனக்கு மனித கண்டுபிடிப்புகளில் மிக முக்கியம்னு படுவது மனிதர்கள் மரம் மற்றும் நார்களினால் ஆன பாத்திரங்களை (கொள்கலன்கள்) மண் கலயங்களை உருவாக்கியதுதான். ஆனாலும் மனிதர்களின் மிகசுவாரஷ்யமான மற்றும் ரகளையான கண்டுபிடிப்பு பாய்மரம்! மரக்கலயம் தீயில் எரிந்துபோவதை தவிர்க்க மூதாய் ஈரக் களிமண்ணை பூசுவதில் தொடங்கி படிப்படியாக சுட்டமண் கலயங்கள் உற்பத்திப் பொருளை சேமிக்க தொடங்க எதிர்காலத் தேவை என்பதில் போய் முடிகிறது. ஒரு மாபெரும் தொடரியக்கத் தகவமைப்பிற்கு அந்த முடிவு மனிதனை நிற்பந்தபடுத்துகிறது. இங்கு வியாபாரம் (trade) தொடங்குகிறது!

இதைப்பற்றி பேசுவதற்கு முன் டார்வினிய கோட்பாடை மிக சுருக்கமாக அடுத்து பேசலாம்..

அதுக்கும் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்.. என்றார் தேஜா.

சேந்து கண்டுபிடிப்போம் .. என்றேன்.

*****************************

தொடரும்

**********************